

பிரேசிலில் உள்ள பெலேம் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை உச்சிமாநாட்டு அரங்கில் நேரிட்ட தீ விபத்தில் 21 பேர் காயமடைந்தனர்.
ஐக்கிய நாடுகள் அவையின் காலநிலை மாற்ற உச்சிமாநாடு பிரேசிலின் பெலேம் நகரில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் நேற்று (நவ.20) புதைபடிவ எரிபொருள்கள், காலநிலைக்கான நிதி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். மாநாடு நிறைவடைய ஒரு நாள் மட்டும் இருந்த நிலையில், மாநாட்டு அரங்கில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது.
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள் இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்து மூச்சுத் திணறலால் அவதிப்பட்ட நிலையில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் உருவானது.
காலநிலை உச்சி மாநாடு நடைபெறும் இடத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உள்பட இந்திய குழுவில் சுமார் 20 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறலால் கடுமையாக அவதியடைந்த நிலையில், அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அரங்கின் நுழைவுவாயிலுக்கு அருகில் உள்ள ப்ளூஸோன் என்றழைக்கப்படும் இடத்தில் இருந்து தீப்பற்றியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில், 21 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும், தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பிரேசிலின் சுற்றுலா அமைச்சர் செல்சோ சபினோ தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் இந்த திடீர் தீ விபத்துக்கு மின்கசிவுகூட காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.