

சென்னை: பாஜக பாசிச அரசியல் தமிழ்நாட்டில் நிச்சயம் நிறைவேறாது என்று என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் இன்று கூறினார்.
சென்னையில் இன்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசியல் குறித்தும் பேசுகையில்,
இங்கே பத்திரிக்கையாளர்கள், அரசியல் ஆர்வலர்கள் என்று பலரும் இருக்கிறீர்கள். உங்களுக்கே தெரியும்… எங்களுக்கும், இரண்டாவது இடத்தில் இருக்கக்கூடியவர்களுக்கான வித்தியாசத்தைப் பார்த்தீர்கள் என்றால், 12 சதவிகிதம். மூன்று சதவிகிதம் வித்தியாசம் இருந்தாலே சுத்தம் தான்! 12 சதவிகிதம் என்றால், அது நிச்சயம் அபார வெற்றி தான்! அதில் எந்த மாற்றமும் இருக்காது. அதற்கென்று, நாங்கள் மெத்தனமாக இருக்க மாட்டோம்.
உங்களைப் பொறுத்தவரைக்கும், இந்த சர்வே முடிவு, எங்களுக்கான பூஸ்ட்! அவ்வளவுதான். ஏனென்றால், திமுக எப்போதும், என்றென்றும், மக்களுடன் இருக்கக்கூடிய இயக்கம்! மக்களுக்காக பாடுபடக்கூடிய இயக்கம்! அதனால், இன்னும் உற்சாகமாக உழைத்து, உங்களுடைய கணிப்பை உண்மையாக்குவோம்!
கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு என்ன நிலைமையில் இருந்தது என்று இங்கே இருக்கின்ற எல்லோருக்கும் தெரியும். அதேசமயம், இப்போது திராவிட மாடல் அரசு அமைந்து இந்த ஐந்தாண்டுகளில் வரலாறு காணாத வெற்றிப் பாதையில் தமிழ்நாடு வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! வரும் தேர்தலில் வென்று, இந்த வளர்ச்சிப் பயணத்தை வெற்றிப் பயணத்தை திராவிட மாடல் 2.0-விலும் தொடர்வோம்!
வளர்ச்சியை மறைக்க முடியவில்லை; மறுக்க முடியவில்லை
ஊடக நண்பர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்களான உங்கள் முன்பு சில புள்ளிவிவரங்களை நான் முன்வைக்கிறேன். ஏனென்றால், எண்கள் பேசுகின்றன. கடந்த ஆண்டு, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு என்றால், 11.19 சதவிகிதம்! இந்த இரட்டை இலக்கம் வளர்ச்சியை, கடைசியாக எப்போது சாதித்தோம் தெரியுமா? 14 ஆண்டுகளுக்கு முன்பு, அதுவும் திமுக ஆட்சியில்தான்! தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுவதிலும், திமுக அரசுக்கு குடைச்சல் கொடுப்பதிலும் கவனமாக இருக்கும் மத்திய அரசாலேயே, இந்த வளர்ச்சியை மறைக்க முடியவில்லை; மறுக்க முடியவில்லை!
தமிழ்நாட்டின் ஜிஎஸ்டிபி எவ்வளவு? ரூ. 17 லட்சத்து 23 ஆயிரத்து 698 கோடியாக உயர்ந்திருக்கிறது! தனிநபர் வருமானம், ரூ.3 லட்சத்து 58 ஆயிரம்! தேசிய சராசரி கூட ஒப்பீடு செய்தால், இது, 1.74 மடங்கு அதிகம்!
98.3% அரசு பள்ளிகளில் அறிவியல் ஆய்வகம்
அடுத்து, இந்தியா முழுவதும் 50 சதவிகிதம், அரசு மேல்நிலைப் பள்ளிகளில்தான் அறிவியல் ஆய்வகம் இருக்கிறது. இதுவே தமிழ்நாட்டில் 98.3 சதவிகிதம் பள்ளிகளில் ஆய்வகம் இருக்கிறது! என்ஐஆர்எப் தரவரிசையில், தலைசிறந்த நூறு கல்லூரிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 33. முதல் 50, மாநில பல்கலைக்கழகங்களில் 10 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது!
65-க்கு மேற்பட்டமத்திய அரசு விருதுகள்
நிதி ஆயோக் வெளியிட்ட எஸ்.டி.ஜி குறியீட்டில், 78 புள்ளிகளோடு, தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது! இப்படி, எந்த புள்ளிவிவரங்களை எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது! அதனால்தான், 65-க்கு மேற்பட்டமத்திய அரசு விருதுகள் தமிழ்நாட்டை தேடி வருகிறது!
இப்படி ஏராளமான புள்ளிவிவரங்களை என்னால் பட்டியலிட முடியும்! இதையெல்லாம் சாதாரணமாக நாங்கள் சாதித்துவிடவில்லை. ஏராளமான மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்தி, எதிர்காலத்திற்கான முதலீடுகளை செய்து, சாதித்திருக்கிறோம்!
திராவிட மாடல் செயல்படுத்தும் திட்டங்களைப் பார்த்து, பல்வேறு மாநிலங்களில், அந்த திட்டங்களையும் தத்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்று, திட்டத்தை ஆய்வு செய்ய அலுவலர்கள் வருகிறார்கள். இப்போதுகூட, எங்களின் தோழி விடுதியை மாடலாக எடுத்துகொண்டு. மத்திய அரசு பட்ஜெட்டில் ஒரு திட்டம் அறிவித்திருக்கிறார்கள்.
ஐ.நா விருது
எல்லோருக்கும் தரமான மருத்துவத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நாங்கள் உருவாக்கிய மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை ஐ.நா. அமைப்பே விருது கொடுத்து பாராட்டியிருக்கிறது! நாங்கள் செய்வது எல்லாமே முன்னோடித் திட்டங்களாக மாறியிருக்கிறது!
ஒரு கோடியே 30 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்குகிறோம்!
19 லட்சத்து 39 ஆயிரம் குழந்தைகளுக்கு காலை உணவும், அரசுப் பள்ளிகளில் படித்து, கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்திலும், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்திலும் மாதந்தோறும் ரூ.1000 என்று 12 லட்சம் பேருக்கு வழங்குகிறோம்!
நான் முதல்வராக பொறுப்பேற்றதும், முதல் கையெழுத்தாக விடியல் பயணத்தை அறிமுகப்படுத்தினேன். அதில், இதுவரைக்கும், பெண்கள் 880 கோடி பயணங்களும், திருநர்கள் 48 லட்சம் பயணங்களையும், மாற்றுத்திறனாளிகள் 7 கோடி பயணங்களையும் மேற்கொண்டிருக்கிறார்கள். இதனால், அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.800 வரை மீதமாகிறது! இப்படி,
இல்லம் தேடிக் கல்வி
எண்ணும் எழுத்தும்
ஊட்டச்சத்தை உறுதிசெய்
மக்களைத் தேடி மருத்துவம்
இன்னுயிர் காப்போம்- நம்மைக் காக்கும் 48.
நலன் காக்கும் ஸ்டாலின்
பாதம் காப்போம்
இதயம் காப்போம்
கலைஞர் கனவு இல்லம்
அன்புக் கரங்கள் திட்டம்
அன்புச் சோலை திட்டம்
தோழி விடுதி
குறு சிறு நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்
உங்களுடன் ஸ்டாலின்
கலைஞர் கைவினைத் திட்டம்
மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைத் திட்டம்
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நேரடி நியமனம்
முதலமைச்சர் கோப்பை
அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்
தொல்குடி திட்டம்
டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்
பேராசிரியர் அன்பழகனார் கல்வி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
முதலமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டுத் திட்டம்
கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினித் திட்டம் - என்று ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்!
இவைகள் எல்லாம் மக்களிடம் பெரிய அளவில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்
திமுக அரசு தொடர்ந்தால் தான், தமிழ்நாட்டின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கைக்கு என்றைக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்றுதான் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
அதேசமயம், இவ்வளவு நன்மைகள் செய்யக்கூடிய திமுக அரசுக்கு மத்திய பாஜக அரசு எப்படியெல்லாம் நெருக்கடிகளை கொடுக்கிறது என்பதையும் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து அநீதி, துரோகம்
நிதிப்பகிர்வு, வரிப்பகிர்வு, சிறப்புத் திட்டங்கள், ரயில்வே திட்டங்கள் என்று எல்லாவற்றிலும் தமிழ்நாட்டிற்கு அநீதியையும் துரோகத்தையும்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன?
ஏன், இப்போது வெளியிட்ட பட்ஜெட்டில்கூட அவர்கள் தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன? தமிழ்நாட்டிற்கு நன்மை செய்வார்கள் என்று நம்பிதான் கோரிக்கைகள் வைக்கிறோம். ஆனால், பட்ஜெட்டில் தந்தது ‘ஜீரோ’தான்! இப்போது, என்டிஏ கூட்டணிக்கு அதே ஜீரோவை மக்களும் திருப்பித் தர போகிறார்கள். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
ஊழல் கூட்டணிக்கு பெயர் இரட்டை எஞ்சின்
நிர்வாக ரீதியாக இந்த அளவுக்கு இடைஞ்சல்கள் கொடுப்பது, ஆளுநரை வைத்தும், அவதூறுகள் பரப்பியும், அரசியல் ரீதியாக சீண்டிப் பார்க்கிறார்கள். ஊழல் கறை படிந்த அத்தனைபேரையும் ஒன்று சேர்த்துக்கொண்டு, பொய்களை பரப்பிகொண்டு, தேர்தலை சந்திக்க வருகிறார்கள். இந்த ஊழல் கூட்டணிக்கு பெயர் இரட்டை எஞ்சின். அந்த டப்பா எஞ்சினுடைய லட்சணத்தை தி்ல்லி, உத்தரப் பிரதேசம், பிகார் என்று பல மாநிலங்களில் பார்த்துகொண்டு தான் இருக்கிறோமே?
பாஜகவைப் பொறுத்தவரைக்கும், வெறுப்பைப் பரப்பி, பிரச்னைகளை உருவாக்கி, அதில் குளிர்காய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஒரே ஒரு உதாரணத்தை சொல்கிறேன். தமிழ்நாட்டைப் போலவே, அஸ்ஸாமிலும் இப்போது தேர்தல் வரப்போகிறது. அதற்கு, அஸ்ஸாம் பாஜகவிந் சமூக வலைதள பக்கங்களில் விடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அதில், அந்த மாநிலத்தைச் சார்ந்த ஆளும் பாஜக முதல்வர் துப்பாக்கியில் குறி வைப்பது போல போட்டிருந்தார்கள். அதுவும் யாருக்கு எதிராக? இப்படிப்பட்ட காட்சியை வைப்பதற்கான துணிச்சல் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது.
அடிமைககள் – அவதூறுகள்
ஜனநாயக இந்தியாவில், இப்படியெல்லாம் நடக்கும் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா… இந்த நிலைமையைதான் இந்தியா முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு துணையாக இருப்பது இரண்டு விஷயம். ஒன்று, அடிமைககள் – மற்றொன்று, அவதூறுகள்.
தமிழ்நாட்டில் பாசிச அரசியல் நிச்சயம் எடுபடாது
இதையெல்லாம் பயன்படுத்தி ஜனநாயகத்தின் அத்தனை விழுமியங்களையும் ஒழித்திடவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு நாட்டிலுள்ள ஜனநாயக சக்திகள் நிச்சயம் இடம் கொடுக்கக் கூடாது. தமிழ்நாட்டிற்கு சேரவேண்டிய நிதியையும், நீதியையும் நிச்சயமாக நாங்கள் பெற்றுத் தருவோம். பாஜகவின் பாசிச அரசியல் தமிழ்நாட்டில் நிச்சயம், நிச்சயம், நிச்சயமாக அது எடுபடாது! நிறைவேறாது!
திராவிட மாடல் 2.O-வில் தமிழ்நாட்டை காத்து இந்தியாவின் முதல் மாநிலமாக தொடர்ந்து வளர்த்தெடுப்பது நிச்சயம்!
தமிழ்நாடு வெல்லும்! இந்தியாவிற்கே வழிகாட்டும்! என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Regarding DMK leader and Tamil Nadu Chief Minister M.K. Stalin's statement that fascist politics will definitely not be implemented in Tamil Nadu...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.