

திருவண்ணாமலை மாவட்டம் போலுரைச் சேர்ந்த சத்யாவுக்கும் படாகத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் குமாருக்கும் திருமணமாகி இருவரும் மேல்மலையனூரில் வசித்து வந்தனர். சத்யா கருவுற்றதும் ஏழாம் மாதம் வளைகாப்பு நடத்தப்பட்டு தாய் வீட்டுக்கு அழைத்துச் செல்லப் பட்டார். குமார் அவரால் முடிந்த போது மனைவியின் தாய் வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்து வந்தார். எல்லாம் சரியாகவே சென்று கொண்டிருந்த போது; கடந்த சில வாரங்களுக்கு முன் சத்யாவுக்கும் குமாருக்கும் இடையே ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாட்டால் குமார், சத்யாவை அவரது தாய் வீட்டில் சென்று காண்பதும், அவரோடு பேசுவதும் நின்று போனது. இதற்கிடையே குழந்தைப்பேற்றுக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. சத்யா தனது கணவரை சமாதானப் படுத்தி, குழந்தைப் பேற்றின் போது கணவர் தன்னுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப் பட்டார். கடந்த திங்களன்று கடைசியாக அவர் மருத்துவமனை பரிசோதனைக்குச் சென்ற போது மகப்பேறு மருத்துவர்கள் ‘குழந்தைப் பேற்றுக்கான வலி எப்போது வேண்டுமானாலும் வரலாம், சீக்கிரத்தில் நீ தாயாகப் போகிறாய். அதற்கான முன்னேற்பாடுகளுடன் தயாராக இரு” என்று அறிவுறுத்தியிருந்தனர். இதற்கு நடுவில் சத்யா நாள் நெருங்கி விட்டது, எப்படியாவது கணவரை தன்னுடன் அழைத்துச் சென்று விடலாம் என்ற எண்ணத்தில் போலூரில் அவரது தாய் வீட்டிலிருந்து கணவர் குமார் இருக்கும் சேத்பட்டுக்கு பேருந்தில் பயணித்தார்.
சுபத்தில் முடிந்த பயணம்:
பேருந்து போலூரில் இருந்து சேத்பட்டை நெருங்க மூன்று கிலோமீட்டர் தூரமே இருக்கையில் சத்யாவுக்கு பிரசவ வலி வந்தது. பேருந்தில் பயணித்த பெண்கள் அனைவரும் சத்யாவை அணுகி அவறைச் சுற்றி நின்று கொள்ள. ஆண்கள் அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கி விட்டனர். சற்று நேரத்தில் சத்யாவுக்கு முதலில் ஒரு பெண்குழந்தை பிறந்தது. அவசர நிலை கருதி குழந்தை பிறந்ததும் ஓட்டுனர் பேருந்தை சேத்பட் அரசு மருத்துவமனை நோக்கிச் செலுத்தினார், அங்கே மருத்துவமனையில் சத்யாவுக்கு மீண்டும் பிரசவ வலி வந்து ஆண்குழந்தையைப் பிரசவித்தார். பிரசவம் நேரம் நெருங்கிக் கொண்டிருந்த ஆபத்தான சூழ்நிலையில் ஏன் தனியாக பேருந்தில் பயணித்தீர்கள்? என்ற கேள்விக்கு சத்யாவின் பதில்: கடந்த சில வாரங்களாக என் கணவர் என்னைப் பார்க்க வருவதில்லை, என்னோடு பேசுவதும் இல்லை. குழந்தை பிறக்கும் நேரத்தில் கணவருடன் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் எதைப் பற்றியும் யோசிக்காமல் பேருந்தில் பயணித்தேன். என்பதே.
இதை எப்படி எடுத்துக் கொள்வது?
சத்யாவுக்கு கணவர் மீது அத்தனை காதல் என்றா? ஒரு சாமனியப் பெண் தன் கணவரைச் சமாதானப்படுத்தும் எளிய முயற்சி என்றா? அல்லது அசட்டு தைரியம் என்றா? எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தனது பிரசவத்தின் போது தன் கணவரும் உடனிருக்க வேண்டும் என்பது உலகப் பெண்களின் ஒருமித்த ஆசை! சிலருக்கு அந்த ஆசை பூ மலர்வதைப் போல வெகு எளிதாக நிறைவேறி விடும். சிலருக்கு இப்படி சாகஷம் எல்லாம் செய்ய வேண்டியாதாகி விடுகிறது. எப்படியோ கடைசியில் பேருந்தில் ஒன்றும், மருத்துவமனையில் ஒன்றுமாய் இரட்டைக் குழந்தை பெற்ற சத்யா கூடிய விரைவில் அவரது கணவரோடு சமாதானமாவாராக!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.