இந்தியாவில் வேலை வாய்ப்புகளை வழங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்களில் பெண்கள் சௌகரியமாகப் பணிபுரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதில் ’அஸெஞ்சர்’ நிறுவனம் முன்னிலை வகிப்பதாக அவதார் எனும் பிரபல அமெரிக்க பத்திரிகை ஒன்று பட்டியலிட்டுள்ளது. அவதார் பட்டியலிட்டுள்ள 100 நிறுவனங்களில் முதல் 10 நிறுவனங்களில் ஒன்றாக அஸெஞ்சர் தேர்வாகி உள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை பல பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆண்கள், பெண்கள் வேறுபாடின்றி தொழிலாளர் விரோத மனப்பான்மையை கடைபிடிக்க அஸெஞ்சரில் மட்டும் தான் பெண்கள் பாதுகாப்புடனும், மன அமைதியுடனும் பணி புரியும் சூழல் நிலவுகிறது என அப்பட்டியல் கூறுகிறது.
இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 45,000 பெண்கள் பணிபுரியும் அஸெஞ்சர் நிறுவனத்தில் பல்வேறு விதமாக நடத்தப்பட்ட ஆய்வில் பெண்களுக்கு வேலைக்கான நேர்முகத் தேர்வில் தொடங்கி, வேலையில் உத்திரவாதம், பணிபுரியும் இடங்களில் சாதகமான சூழலை ஏற்படுத்தி தருவது, பாதுகாப்பு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்கள், உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் பிற நிறுவனங்களைக் காட்டிலும் அஸெஞ்சர் முன்னிலையில் இருக்கிறது.
இந்தியாவில் பெண்களுக்கு மகப்பேறின் போது சம்பளத்துடன் அதிக நாட்கள் விடுப்பு தரும் நிறுவனங்களிலும் அஸெஞ்சர் தான் முன்னிலை வகிக்கிறது. பிரசவத்திற்குப் பிறகும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அலுவலக வாழ்க்கை இரண்டிலும் சாதிக்கக் கூடிய சூழலை உருவாக்கித் தருவதிலும் இந்தியாவில் அஸெஞ்சர் முன்னிலையில் இருப்பது பெருமைக்குரிய விசயம் என அதன் நிர்வாக இயக்குனர் ’ரேகா எம் மேனன்’ தெரிவித்துள்ளார்.