ஜெயமோகனின் அனல்காற்று நாவலை அனேகம் பேர் வாசித்திருக்கலாம். ஒளி ஓவியரான மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா அதை திரைப்படமாக்கும் எண்ணத்துடன் தன்னிடம் கதை கேட்டு வாங்கியதாக ஜெமோ தனது வலைப்பக்கத்தில் தெரிவித்திருந்தார். பின்பு அந்தப் படத்தை தயாரிப்பதாக இருந்தவர் ஷேர் மார்க்கெட் நஷ்டத்தால் படத்தயாரிப்பையே கைவிட்டு விட அனல்காற்று திரைப்பட முயற்சியும் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டதாகவும் ஜெமோ எழுதி இருந்தார். படம் டிராப் ஆனாலும் பாலுமகேந்திராவின் கை வண்ணத்தில் தனது நாவல் திரைப்படமாவதில் ஜெமோவுக்கு எதிர்பார்ப்புகள் இருந்ததோ இல்லையோ? இதை அறிந்ததிலிருந்து இருவரது ரசிகர்களுக்கும் கொஞ்சமேனும் ஏமாற்றம் இல்லாமலிருக்க வாய்ப்பில்லை.
இதில் சுவாரஸ்யமான மற்றொரு விசயம் என்ன தெரியுமா? பாலுமகேந்திரா படமாக்கவிருந்த ஜெமோவின் அனல்காற்றில் நாயகனாக நடிக்க தேர்வாகியிருந்த நபர் யாரென்று தெரிந்தால் ஆச்சர்யப் பட்டுப் போவீர்கள். அது விஜய் சேதுபதி. இந்த வருட தினமணி தீபாவளி மலரில் விஜய் சேதுபதி அளித்த பிரத்யேக நேர்காணலில் இந்த விசயத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
திரையுலகில் நுழைந்த ஆரம்ப காலங்களில் வாய்ப்புகளுக்காக பாலுமகேந்திராவைச் சந்தித்த போது, பாலு மகேந்திரா விஜய் சேதுபதியிடம், ‘விஜய் உங்க கண்கள் அழகா இருக்கு. உங்களை ஒரு புகைப்படம் எடுக்கறேன். கதைக்குப் பொருந்தினா நீங்க தான் நான் அடுத்து இயக்கப் போகிற அனல்காற்று படத்தின் ஹீரோ’ என்று சொன்னாராம். சொன்னபடி பாலுமகேந்திரா விஜய் சேதுபதியை புகைப்படம் எடுத்தார். படம் கைவிடப்பட்டாலும் புகைப்படம் இப்போதும் தனது பொக்கிஷங்களுள் ஒன்றாக, தனக்குப் பிடித்த தனது மிகச் சிறந்த புகைப்படங்களில் ஒன்றாகப் பாதுகாப்பாக இருப்பதாக விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார்.
அனல்காற்று நாவலைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் தீவிர வாசகர்கள் ஜெமோவின் தளத்திலேயே அதை வாசித்துக் கொள்ளலாம்.