ஹாசினி வழக்கில் குற்றம் அனைத்தும் நிரூபணமானதால் தூக்குத்தண்டனை எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தஷ்வந்துக்கு சிறுமி கொலை வழக்கில் ஆட்கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றத்துக்காக 37 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டதோடு. சிறுமி ஹாஷினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு மரண தண்டனையும் விதித்தது செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம். தீர்ப்பைக் கேட்ட நொடியில் தனது மகள் கொலைக்கு இப்போது தான் நியாயம் கிடைத்துள்ளது என நெகிழ்ந்து கூறி சிறுமியின் தந்தை கண்ணீர் உகுத்தார். ‘குற்றம் செய்தால் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என்ற பயம் வர வேண்டும். கடந்த ஓராண்டாக தனது குழந்தைக்கு நேர்ந்ததை நினைத்து தன்னால் தூங்கக் கூட முடியவில்லை. இனி என் குழந்தை திரும்ப வரப்போவதில்லை. என் குழந்தைக்கு நேரந்த பயங்கரம் இனியொரு குழந்தைக்கு நேரக் கூடாது. இந்தத் தீர்ப்பால் என் மகள் கொலைக்கு நியாயம் கிடைத்துள்ளது.’ எனவும் ஹாசினியின் தந்தை கண்ணீருடன் கூறினார்.
ஹாசினி வழக்கில் நேர்மையான தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதோடு கால தாமதமின்றி விரைவாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதன் காரணம் இது போன்ற பாதிப்பு வேறு எந்தச் சிறுமிக்கும் எதிர்காலத்தில் நிகழக்கூடாது என்பதோடு, அப்படியான கொடுஞ்செயல்களைப் புரியும் மனநிலையில் இருப்பவர்களை அச்சுறுத்தும் வகையிலும் இப்படியொரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தீர்ப்பு குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில் ஹாசினி தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன் தெரிவித்தார்.
ஹாசினி வழக்கில் இப்படியொரு நேர்மையான தீர்ப்பை வழங்கிய செங்கல் பட்டு மகிளா மன்ற நீதிபதி வேல்முருகனுக்கு சமூக ஊடகங்கள் மற்றும் பண்பலைகளில் பொதுமக்கள் தங்களது பாராட்டைத் தெரிவித்து வருவதோடு, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஹாசினி வழக்கின் தீர்ப்பு ஒரு பாடமாக அமையும் எனவும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
சிறுமி கொலை வழக்கில் மட்டுமே தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மரண தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. தஷ்வந்த தன் தாயைக் கொன்ற வழக்கு வேறு எஞ்சியுள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பு எவ்விதமாக அமையும் எனத் தெரியவில்லை. ஆயினும் கொலைக்கு நிச்சயம் ஆயுள் தண்டனையோ அல்லது தூக்கு தண்டனையோ வழங்கப்படலாம். அது அந்த வழக்கின் சாட்சிகளையும், வாதப் பிரதிவாதங்களையும், குற்றம் நிகழ்ந்த சந்தர்ப சூழலையும் பொருத்தது. ஆயினும் தான் அருகிருந்து பார்ந்து வளர்ந்த ஒரு சிறுமியின் மீது சிறிதும் மனிதாபிமானமற்று பாலியல் வன்கொடுமை செய்து, எதிர்ப்புக் காட்டிய குழந்தையை தலையணையால் அமுக்கிக் கொன்று திட்டமிட்டு கொலையை மூடி மறைக்க சிறுமியின் சடலத்தை டிராவல் பேகில் எடுத்துச் சென்று புறநகர்ப் பகுதியில் எரித்து தடயங்களை அழிக்க முயன்ற சாடிஸ மனநிலைக்கு இந்தத் தண்டனை அவசியமானது தான். அதோடு மற்றும் நிறுத்தாமல் ஜாமீனில் வெளியில் வந்த போதும் தனது செலவுகளுக்குப் பணம் தரவில்லை எனப் பெற்ற தாயையே இரும்புக் கம்பியால் தாக்கிக் கொன்று விட்டு தப்பியோடிய மனித மிருகமான இந்த இளைஞனுக்கு இந்தத் தண்டனை போதாது. இதைக் காட்டிலும் கடுமையான தண்டனைகள் ஏதேனும் இருந்தால் சட்டத்தின் துணை கொண்டு அதை நிறைவேற்றலாம்.
த்ரில் விளையாட்டா? திகில் விளையாட்டா? அநியாயமாக இளம்பெண்ணின் உயிரைப் பறித்த ‘கோ கார்ட்’ ரேஸ்கார்!
பலே திருடர்களும், தோல்வியில் முடிந்த திருட்டும்! வைரலாகும் லைவ் வீடியோ!
ஜப்பான் இளவரசியின் திருமண ஒத்தி வைப்புக்கான காரணம்?!
தீப்பாய்வது எப்படி ஹீரோயிஸமாக முடியும்? ஒரு ராஜபுதனப் பெண்ணின் கேள்வி!