மரணத்திலும் மகனை விட்டுப் பிரியாத தாயின் கரங்கள்!

இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல்களில் ஒரு தாய் மற்றும் ஒன்றைரை வயதுக் குழந்தையொன்றின் சடலம் காண்போர் நெஞ்சை சுக்கு நூறாக உடைந்து போகச் செய்யும் அளவுக்கு மிகப்பெரிய சோகத்தை உள்ளடக்கியதாக இருந்தது
மரணத்திலும் மகனை விட்டுப் பிரியாத தாயின் கரங்கள்!

கேரள வெள்ளச் சேதத்தில் உருக்கமான பல சோகங்களை கடந்தாண்டு கண்டோம். இம்முறையும் அப்படியொரு சோகம் அங்கு நிகழ்ந்தேறியிருக்கிறது. கேரளா, மலப்புரம் நகரின் அருகில் இருக்கும் கோட்டகுன்னு மலைப்பகுதியில் இரு நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த மிகப்பெரிய நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பலநூறு வீடுகள் அப்படியே மண்ணுக்குள் மண்ணாக அழுந்தி மக்கள் வாழ்ந்த சுவடே காணாமல் போயின.

இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல்களில் ஒரு தாய் மற்றும் ஒன்றைரை வயதுக் குழந்தையொன்றின் சடலம் காண்போர் நெஞ்சை சுக்கு நூறாக உடைந்து போகச் செய்யும் அளவுக்கு மிகப்பெரிய சோகத்தை உள்ளடக்கியதாக இருந்தது. இருவரது சடலமும் மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்ட போது, அந்தச் சூழலிலும் அந்த தாயின் கரங்கள் தன் மகனின் பிஞ்சுக் கரங்களை இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருந்தன. மரணத்தின் போது பாதுகாப்புக்காகப் பிணைந்த கரங்கள் மரணித்து இரண்டு நாட்களாகியும் தன் மகனை விட்டுப் பிரியாதது பார்ப்போரை கலங்கடிப்பதாக இருந்தது. நிலச்சரிவில் இறந்த அம்மா கீதுவுக்கு 21 வயது. இவரது கணவர் சரத் காயங்களின்றி உயிர் தப்பி விட்டார். ஆயினும் சரத்தின் அம்மா சரோஜினியும் கூட இந்த நிலச்சரிவில் உயிரிழந்தார் என்பது வருத்தமான செய்தி. மாமியார், கணவர், கீது, அவர்களது ஒன்றைரை வயதுக் குழந்தை என நால்வரை உள்ளடக்கிய இவர்களது குடும்பம் கோட்டகுன்னு பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியிருந்தது.

அதற்குள் இதோ மரணத்திலும் பிரியாத நேசத்துடன் இங்கே அம்மா ஒருவர் பிரளய நேரத்தில் தன் மகனைக் காக்கும் பெரு விருப்புடன் பிணைத்த கரங்களுடன் மரணித்திருக்கும் புகைப்படம் வெளியாகி மென்மையான இதயம் கொண்டோரை மீண்டுமொரு சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

அந்தத் தகப்பனும் சரி, இன்று இந்தத் தாயும் சரி தங்கள் பிள்ளைகளுக்காக வாழும் ஆசை கொண்டிருந்தவர்களே!

வாழ்வியல் சூழலே அவர்களை வேற்றிடம் செல்லப் பணிக்கிறது. இறந்த ஒன்றரை வயதுக் குழந்தையின் குடும்பம் மலப்புரத்தில் ஆபத்தான பகுதியில் வசிக்கக் காரணம் என்ன?

வாழ்வியல் நிர்பந்தமின்றி வேறெதுவாகவும் இருக்க வாய்ப்புகள் இல்லை.

கடந்தாண்டு தேக்கடிக்கு சுற்றுலா சென்றிருந்த போது நேரில் கண்ட சில விஷயங்களில் இதுவும் ஒன்று. ஆபத்தான, பாதுகாப்பற்ற மலைச்சிகரங்களில் அங்கே மனிதர்கள் குடும்பமாக வசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நேரில் காண முடிந்தது. அவர்களில் பலரின் கதியும் இன்று என்னவாயிருக்கக் கூடுமோ என்று யோசிக்கத் துணியவில்லை நெஞ்சம். நிலச்சரிவு ஏற்படும் அபாயமிருக்கக் கூடிய இடங்களில் மக்கள் வாழ்வதை அரசு எப்படி அனுமதித்தது? 

இப்படி அந்தத் தாய் மற்றும் மகனின் மரணத்துக்கான கண்டனங்களை நாம் எப்படி வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். ஆனால், போன உயிர் திரும்ப வாராது. ஆகையால் மீண்டும் இத்தகைய மரணங்கள் நேராமல் காக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேரள அரசு மிகத்தீவிரமாக யோசிக்க வேண்டிய நேரமிது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com