பெற்றோர்களுக்கு இடையிலான அன்பு/காதல் குழந்தைகளின் எதிர்காலத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் கியூபெக்கிலுள்ள மெக்கில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் டெமோகிராஃபி இதழில் வெளியானது. நேபாளத்தில் உள்ள பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் பண்புகள் குறித்த தரவுகள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆய்வில், பெற்றோருக்கு இடையிலான அன்பு குழந்தைகளின் எதிர்காலத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் மிகவும் எளிதாக குழந்தைகளை எதிர்காலத்துடன் இணைகிறது என்றும் தெரிய வந்துள்ளது.
அதாவது, திருமணம் ஆன புதிதில் கணவன் - மனைவி எவ்வாறு காதலுடன் இருக்கிறார்களோ, அதே காதலுடன் வாழ்க்கையைத் தொடர வேண்டும். உங்களுக்கு இடையே காணப்படும் உணர்ச்சி ரீதியான அன்பு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல், ஒருவருக்கொருவர் அக்கறை கொள்ளுதல் உள்ளிட்டவை குழந்தைகளின் மனதில் பல நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பெற்றோர்களுக்கு இடையே உள்ள புரிதல், குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இதற்கு மாறாக, பெற்றோர்கள் சிறுசிறு காரணங்களுக்காக சண்டையிட்டால் இளம் வயதிலேயே குழந்தைகளின் மனதில் மன அழுத்தம் ஏற்பட்டு அவர்களின் எதிர்காலம் பல வகைகளில் பாதிக்கப்படுகிறது.
பெற்றோர்கள் ஒருவரையொருவர் நேசிக்கும் பட்சத்தில், அவர்களது குழந்தைகள் அதிக கல்வியை பெறுகின்றனர், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இல்லற வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என அவர்களுக்கு பெற்றோர்களாகிய நீங்கள் ஒரு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். அதேபோன்று, குழந்தைகளின் எதிர்காலத்திலும் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
எனவே, குடும்ப வாழ்க்கை அழகாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனில் பெற்றோர்கள் ஒருவரையொருவர் காதல் செய்யுங்கள்..
பள்ளி பாடத்திட்டத்தில் புற்றுநோய் கல்வி: பரிந்துரைக்கும் ஆய்வாளர்கள்
நீங்கள் அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்பவரா?
மனச்சோர்விலிருந்து விடுபட வேண்டுமா? இந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்!
'ஸ்மார்ட்போனை பயன்படுத்துவது தற்கொலைக்கு வழிவகுக்கும்' - ஆய்வில் தகவல்
பெற்றோர்களே.. குழந்தைகள் அனைத்திலும் சிறந்து விளங்க இதில் கவனம் செலுத்துங்கள்!