குழந்தைகள் தூங்கும் நேர அளவைப் பொறுத்து அவர்களது உடல் மற்றும் மனத்திறன் நிர்ணயிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வார்விக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் மூலக்கூறு உளவியல் இதழில் வெளியானது. இளம்பருவ குழந்தைகளின் தூக்க நேரத்துக்கும், மூளைக்கும் இடையிலான தொடர்பைக் கண்டறிய பகுப்பாய்வு செய்யப்பட்டது. 9 முதல் 11 வயதுக்குட்பட்ட 11,000 குழந்தைகளிடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், குழந்தைகளிடையே மனச்சோர்வு, பதற்றம், நடத்தை சார்ந்த விஷயங்கள், அறிவாற்றல் குறைதல் உள்ளிட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இவற்றுக்கும், குழந்தைகளின் தூக்க நேரத்திற்கும் இடையிலான தொடர்பு குறித்த ஆய்வினை பேராசிரியர் ஜியான்ஃபெங் ஃபெங், பேராசிரியர் எட்மண்ட் ரோல்ஸ், டாக்டர் வீ செங் மற்றும் வார்விக் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை மற்றும் ஃபுடான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து மேற்கொண்டனர்.
ஆய்வில், '6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு 9 முதல் 12 மணி நேரம் வரையிலான தூக்கம் பரிந்துரைக்கப்படுகிறது. தூக்கக் கலக்கம் என்பது பொதுவாக அனைத்து இளம் குழந்தைகளுக்கும் பொதுவானது. எனினும் நாள் ஒன்றுக்கு குறைந்தது குழந்தைகள் 9 மணி நேரம் தூங்க வேண்டும். மேலும், டிவி பார்ப்பது, சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் அதிக நேரம் செலவழிக்கக் கூடாது.
அமெரிக்காவில் 60 சதவிகித பள்ளி குழந்தைகள் எட்டு மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகின்றனர். 7 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் குழந்தைகளிடையே பல்வேறு நடத்தை சிக்கல்கள் காணப்படுகின்றன. அவர்களது மதிப்பெண் சதவிகிதம் 50 அல்லது அதற்கும் குறைவாக உள்ளது. எனவே, தூக்கம் இல்லையெனில் அறிவாற்றல் திறனும் பாதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் 11 மணி நேரம் தூங்கும் குழந்தை அறிவாற்றலுடன் சிறந்த மனத்திறனையும் பெற்றுள்ளது. இதனால், குழந்தைகளின் தூக்க நேர அளவிற்கு பெற்றோர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகளின் தூக்க காலம், மூளை அமைப்பு, அறிவாற்றல் மற்றும் மனநல நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு இடையே தொடர்பை கண்டறிந்துள்ளோம் என்றும் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வுகள் தொடரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.