உறவுகளின் வாழ்நாள் காலம் இன்றைய காலகட்டத்தில் வெகுவாகக் குறைந்துவிட்டது. எவ்வளவு வேகமாக ஓர் உறவு உருவாகிறதோ, ஒன்றுமே இல்லாத காரணங்களால் அவ்வளவு விரைவாக மறைந்துவிடுகிறது.
நீண்ட காலமாக நீடிக்கும் உறவுகள் மிகவும் குறைவே. ஏன், இன்று கணவன் - மனைவி, காதலன்- காதலிக்குள்கூட 'ஈகோ' காரணமாக பிரச்னைகள் அதிகம் வருகின்றன.
படிப்பு, வேலை, சுதந்திரம் என இதற்கான காரணமெல்லாம் தொடர்ந்து ஆராயப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால், இதையெல்லாம் தாண்டி அன்பும் காதலும் இருந்தால் மட்டுமே அந்த உறவு நீடிக்கிறது.
உறவு விரிசல்கள் சாதாரணமானது போலவே, அவற்றை சரிசெய்வதும் சாதாரணமானதுதான்.
இதையும் படிக்க | உடல் எடையைக் குறைக்க உதவும் பாப்கார்ன்.. ஆச்சரியமூட்டும் தகவல்
உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ள... சில டிப்ஸ்!
உறவுகள் என்றால் சண்டை என்பது சகஜம்தான். ஆனால், அது எவ்வளவு நேரம், அதை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதுதான் இங்கு முக்கியமானது.
இன்று பெரும்பாலான உறவு விரிசல்களுக்குக் காரணம் 'ஈகோ' எனும் அகந்தைதான். யார் வந்து முதலில் பேசுவது, நான் ஏன் பொறுமையாக இருக்க வேண்டும்? எனும் கேள்விகளே விரிசலை ஏற்படுத்துகின்றன.
இதனால், சண்டை அல்லது முரண்பாடுகள் வரும்போது இருவரும் உட்கார்ந்து பேசித் தீர்க்க வேண்டும். பேசுவதன் மூலமும் ஒருவருக்கொருவர் தங்கள் எண்ணங்களை பரிமாறிக்கொள்வதன் மூலமும் மட்டுமே தெளிவும் புரிதலும் கிடைக்கும்.
ஒருவருக்கொருவர் கண்டிப்பாக ஆறுதலாகவும், உந்துதலாகவும் இருக்க வேண்டும். எந்நிலையிலும் ஆதரவாக இருப்பேன் என்ற உறுதியை உங்கள் துணைக்கு வழங்க வேண்டும். துணையின் நடத்தையில் மாறுதல்கள் ஏற்பட்டால்கூட இதனை கடைப்பிடிக்க வேண்டும்.
அதுபோல ஒவ்வொருவருக்குமான நேரம் என்பது மிக முக்கியமானது. இருவருக்கும் தனித்தனி வேலைகள், கனவுகள் இருக்கின்றன. அதற்கான இடத்தை நேரத்தை ஒருவர் மற்றொருவருக்கு அளிக்க வேண்டும். இந்த புரிதல் மிகவும் முக்கியம்.
எனினும் அவ்வப்போது உங்கள் அன்பை பரிமாறிக்கொள்ள, உங்களுக்கான சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும்.
ஒருவருக்கொருவர் சுமை என்ற எண்ணம் மட்டும் ஒருபோதும் வந்துவிடக்கூடாது. ஒருவரையொருவர் வேண்டுமென்ற விலக்கக்கூடாது.
அதுபோல, உங்கள் துணை இல்லாத ஒரு நாளை உங்களால் கடக்க முடியவில்லை என்றால் அவர் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு அளவற்றது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
உங்களுக்கான ஒரு நபர் கிடைக்கும்பட்சத்தில் அற்ப காரணங்களுக்காக அவரை விட்டுவிடாதீர்கள்!
இதையும் படிக்க | தனியாகத் தூங்குவதைவிட உங்கள் துணையுடன் தூங்கினால்...!