அலைபேசி ஒலி கேட்டாலே உங்களுக்கு எரிச்சலாக, தலைவலியாக இருக்கிறதா? போன் அழைப்பு வந்தாலே மன அழுத்தத்திற்கு ஆளாகிறீர்களா? அல்லது பதற்றத்தை உணர்கிறீர்களா?
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தகவல் தொடர்பு சாதனங்களின் பயன்பாடு பெருகிவிட்டது. பெரிய பணக்காரர்கள் முதல் ஏழை மக்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்துகின்றனர்.
ஏன், இப்போதைய காலகட்டத்தில் ஒரே வீட்டில் இருந்துகொண்டே செல்போனில் பேசுவது கூட நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சாதாரண நபர்கள் கூட நாளொன்றுக்கு குறைந்தது ஒரு 10 அழைப்புகளையாவது மேற்கொள்கிறார்கள்/பெறுகிறார்கள்.
ஆனால், தனிப்பட்ட ரீதியாகவோ அல்லது அலுவலக ரீதியாகவோ செல்போனைத் தொடர்ந்து பயன்படுத்துவோருக்கு ஒரு கட்டத்தில் அது தலைவலியாகவே மாறிவிடுகிறது.
இதையும் படிக்க | காகித பொம்மைகளை கடல்கடந்து ஏற்றுமதி செய்யும் கோவை பெண்
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் செல்போன் அழைப்பு கேட்டாலே எரிச்சல் வந்துவிடுகிறது. ஒரு சிலருக்கு பதற்றம்கூட ஏற்படலாம். செல்போன் அழைப்பைக் கேட்கும்போது சிலர் மன அழுத்தத்திற்குக்கூட ஆளாகின்றனர்.
அதீத செல்போன் பயன்பாடுகள் ஒவ்வொருவரின் அன்றாட நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
'செல்போன் அழைப்பு பதற்றம்' அறிகுறிகள்
♦செல்போன் அழைப்பு வரும்போது உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படாமல் சலிப்பாகவோ வெறுப்பாகவோ உணர்ந்தால்..
♦ஃபோன் அழைப்பை ஏற்கவில்லை என்றால் எதிர் தரப்பு நபர் தங்களை தவறாக எடுத்துக்கொள்வார்களோ என்ற ஒரு பயம் இருந்தால்..
♦சில அழைப்புகள் மேற்கொள்ளும் நபர்கள் குறித்த பயம் அல்லது அவர்களிடம் என்ன பேசுவது என்ற கவலை ஏற்பட்டால்..
♦ போன் அழைப்புகள் உங்களுக்கு ஒரு மன அழுத்தத்தைக் கொடுத்தால்..
♦போன் அழைப்பை எடுக்காமலே நீங்களாக என்ன உரையாடல் இருக்கும் என்று முடிவு செய்து அழைப்பை எடுக்காமல் பயந்தால்..
♦போன் அழைப்புகளைவிட செய்தியாக அனுப்புவது பாதுக்காப்பாக உணர்ந்தால்..
♦நீங்கள் யாருக்கும் போன் அழைப்புகளை மேற்கொள்ளாமல் இருந்தால்.. உங்களுக்கு செல்போன் பதற்றம் எனும் 'phone anxiety' இருக்கிறது என்று அர்த்தம்.
என்ன செய்யலாம்?
♦போன் அழைப்பு என்பது மிகவும் சாதாரணமானது. விருப்பம் இருந்தால் பேசலாம் இல்லையெனில் அழைப்பைத் துண்டித்துவிடலாம். அவ்வளவுதான்.
பேச வேண்டிய நபராக இருந்தால், அழைப்பு வரும்பட்சத்தில் யாராக இருந்தாலும் அந்த அழைப்பை எடுத்து பேச வேண்டும். ஒருவரை எதிர்கொள்ளாத வரை/ பழகாத வரைதான் கடினமாக இருக்கும்.
♦போன் அழைப்பு வந்தால் சலிப்படையாமல் புன்னகையுடன் அணுக முயற்சியுங்கள். அது உங்களுக்கு தைரியத்தையும் கொடுக்கும்.
♦ வெறும் போன் அழைப்புக்காக அதிகமாக யோசிக்க வேண்டாம். ஒருவேளை உங்களுக்கு விருப்பமில்லை என்றாலோ உங்களுடைய மனநிலை சரியில்லை என்றாலோ அழைப்பைத் துண்டித்துவிடுங்கள், அல்லது அழைப்பை ஏற்று சூழ்நிலையைக் கூறிவிட்டு வையுங்கள்.
♦ போன் அழைப்பை எடுக்க விரும்பாத பட்சத்தில் துண்டித்துவிட்டு ஒரு வாய்ஸ் செய்தியை அனுப்பிவிடுங்கள் அல்லது ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிடலாம்.
♦உண்மையிலே உங்களுக்கு பிடிக்காத ஒரு நபர் போன் செய்தாலோ, உங்களுக்கு வாழ்க்கையில் தேவையில்லாத ஒருவர் அழைத்தாலோ, நீங்கள் வேண்டாம் என்று கருதினால் 'பிளாக்' செய்துவிடுங்கள்.
♦தவிர உங்களுக்கு வேண்டியவர்கள், அலுவலக ரீதியாக, பிரச்னையில் இருக்கும்போது அது சம்மந்தப்பட்ட நபர்கள் அழைக்கும்போது பயமின்றி பேச முற்படுங்கள். பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுவிட்டால் மனம் நிம்மதி அடையும். போன் அழைப்பு இல்லையென்றால் வேறு வழிகளில் பதில் அளிக்கலாம்.
♦இறுதியாக செல்போன் அழைப்பு வரும்போது ஒரு பதட்டம் ஏற்பட்டால் உங்கள் செல்போன் ஒலி(ரிங்க்டோன்) அளவை எவ்வளவு முடியுமோ குறைந்து வையுங்கள். மெல்லிய உங்களுக்கு பிடித்த இசையைத் தேர்வு செய்து வையுங்கள். அதுவும் உங்களிடம் ஒரு நேர்மறை சிந்தனையை உருவாக்கும்.
♦ செல்போன் தேவையில்லாத நேரங்களில் அதனை ஓரமாக வைத்துவிட்டு நிம்மதியாக இருங்கள்.
இதையும் படிக்க | பொருந்தா உணவுகளைச் சாப்பிடுவதால் தூக்கம் பாதிக்கப்படுமா?