இரவில் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படும் தாமதமான தூக்கத்தினால் அல்லது தூக்கமின்மையினால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இளைஞர்கள், குழந்தைகளிடையே இன்று மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. சமூக வலைத்தளங்கள்தான் அவர்களின் அன்றாடப் பொழுதுபோக்கு என நிலைமை மாறிவிட்டது.
அதிலும் இரவில், நள்ளிரவில் மொபைல் போனை பயன்படுத்துவோர் அதிகம். இரவு தூங்குவதற்கு முன்னதாக சில மணி நேரங்கள் மொபைல் போனில் நேரம் செலவழித்தால்தான் அன்றைய பொழுது நிறைவுறும் என்ற அளவுக்கு அதில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
இரவு நேரத்தில் அளவுக்கதிகமாக மொபைல் போன் பயன்படுத்துவதால் 'ரிவென்ஜ் பெட் டைம் புரோகிராஸ்டினேஷன்' (revenge bedtime procrastination) எனும் பிரச்னை ஏற்படுகிறது.
அதாவது உங்களின் வசதிக்காக தூங்குவதை தாமதப்படுத்துவது அல்லது தள்ளிப்போடுவது. நீண்ட நேரமாக வேலையில் ஈடுபடுவதால் ஏற்படும் அழுத்தத்தை சரிசெய்ய ஓய்வு நேரத்தில் மொபைல் போனில் நேரம் செலவிடுவது.
இதையும் படிக்க | எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபடுவது எப்படி?
படுக்கையில் படுத்தவாறு ஆன்லைனில் இருப்பது அல்லது பல்வேறு ஆன்லைன் தளங்களில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது இதில் அடங்கும். இவ்வாறு செய்வதால் உங்களின் தூக்க நிலையில் பாதிப்பு ஏற்பட்டு அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும்.
அன்றாடம் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை சரிசெய்யவே இரவு நேரத்தில் மொபைல் போனில் நேரம் செலவிடுவதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
இரவு தூங்கும்முன் சமூக வலைத்தளங்களில் நேரம் செலவழிப்பது அவர்களுக்கு உடனடி மகிழ்ச்சியைத் தருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால், உண்மையில் இது கூடுதல் மன அழுத்தத்தைத்தான் தரும் என்றும் இந்த பழக்கத்தை கைவிட வேண்டும் என்றும் கூறும் மன நல மருத்துவர்கள், இது இளைஞர்களை மட்டுமன்றி 14 வயது முதல் 50 வயதுடையவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்கின்றனர்.
மேலும் இந்த பிரச்னையினால் தூக்கமின்மை, இதய பிரச்னைகள், உடல் பருமன், நோயெதிர்ப்பு சக்தி குறைவு, மன அழுத்தம், பதட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.
என்ன செய்ய வேண்டும்?
இரவில் மொபைல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
தூங்கும் முன் உங்களை அமைதிப்படுத்த வேறு விஷயங்களை கையாளுங்கள்.
தினமும் சரியான நேரத்தில், ஒரே நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும்.
அன்றாட நடவடிக்கைகளை திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
மொபைல் போன் பயன்படுத்த தூண்டும் விஷயங்களை அடையாளம் கண்டு அவற்றைத் தவிர்த்திடுங்கள்.
சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
எதிர்மறை எண்ணங்களை சமாளியுங்கள்.
தேவைப்பட்டால் மருத்துவ நிபுணரை அணுகுவது நல்லது.
இதையும் படிக்க | நீங்கள் சிங்கிளா? பணத்தை சேமிக்கும் 10 வழிகள்!