நீங்கள் அடிக்கடி செய்யும் 5 தவறான பழக்கங்கள்!

கண்ணும் கருத்துமாக உடலை பாதுகாத்து வந்தாலும் அவ்வப்போது வரும் உடல் தொந்தரவுகள் நம்மை சுணக்கமடையச் செய்கின்றன.
நீங்கள் அடிக்கடி செய்யும் 5 தவறான பழக்கங்கள்!

கண்ணும் கருத்துமாக உடலைப் பாதுகாத்து வந்தாலும் அவ்வப்போது வரும் உடல் தொந்தரவுகள் நம்மை சுணக்கமடையச் செய்கின்றன. ஏன், நமக்குத் தெரியாமலே சில தவறான பழக்கவழக்கங்களை பல நாள்களாக, பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வரலாம்.

சத்தான உணவுகளைச் சாப்பிட்டு போதுமான உடற்பயிற்சி செய்து வந்தாலும் இந்த சில தவறான பழக்கவழக்கங்கள் உடல் ஆரோக்கியத்தின் சமநிலையை சிதைக்கின்றன. மேலும் இது மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

உதாரணமாக பசிப்பதை காரணமாக வைத்து நடு இரவில் நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது, சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றைக் கூறலாம். வழக்கத்திற்கு மாறாக, ஒரு செயலைச் செய்யும்போது அது உடலில் சீராக இயங்கிக்கொண்டிருக்கும் அமைப்பில் இடையூறை ஏற்படுத்தும். இதனால் உடலில் சில பிரச்னைகள் தோன்றலாம். 

அவ்வாறு பொதுவாக பலரும் செய்யக்கூடிய உங்களுக்கே தெரியாத தவறான பழக்கவழக்கங்கள் என்னென்ன..பார்க்கலாம்... 

பசியில்லாமல் சாப்பிடுவது 

தினமும் ஒரே நேரத்தில் அதாவது சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்வது அத்தியாவசியமானது. அதேநேரத்தில் சாப்பிடும்போது பசி இருக்க வேண்டும். முந்தைய சாப்பிட்ட உணவு அதிகமாக இருந்தாலோ அல்லது செரிமானப் பிரச்னை இருந்தாலோ அடுத்த நேரத்திற்கு சரியாக பசிக்காது. அவ்வாறு இருந்தால் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. நன்றாக பசி எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும். 

தாமதமாக தூங்குவது 

ஒவ்வொரு நாளும் இரவு ஒரே நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டும். இது உங்கள் உடல்நிலையை சீராக்கும். மாறாக, இரவு தாமதமாகத் தூங்குவது, குறிப்பாக தூங்கும்போது மொபைல் போன் பார்ப்பது ஆகியவை செரிமானமின்மை, தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்னைகளைத் தோற்றுவிக்கின்றன. இரவு சீக்கிரமாக தூங்கி காலையில் சீக்கிரம் எழுவதே உடல்நலத்திற்கு நல்லது. 

தாமதமாக சாப்பிடுவது 

இரவு 9, 10 மணிக்கு மேல் சாப்பிடுவது உடல்நலத்திற்கு சற்றும் நல்லதல்ல என்பதை நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது உடலின் மெட்டபாலிசத்தை சீர்குலைக்கிறது. மேலும் நீரிழிவு நோய் மற்றும் அதன் தொடர்ச்சியான நோய்கள் ஏற்படக் காரணமாகிறது.

இரவு 7-7.30க்குள் சாப்பிட்டுவிட்டு 10 மணிக்கு உறங்கி காலை 5-6 மணிக்குள் எழுந்திருக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 

ஒரே நேரத்தில் பல வேலைகள் 

ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வது நேரத்தை மிச்சமாக்கும் என்றாலும் மனநலம் கருதி அதைத் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அந்த நேரத்தில் மன அழுத்தம் அதிகமாகலாம் என்றும் எச்சரிக்கின்றனர். ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வது மன அழுத்தத்திற்குக் காரணமான கார்டிசோல் எனும் ஹார்மோன் உற்பத்தியை அதிகப்படுத்தும் என்கின்றனர். 

அதிக உடற்பயிற்சி 

அதிக உடற்பயிற்சியும் ஆபத்துதான். உடல் எடையை நிர்வகிக்க உடல், மன ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். அதன்படி சிலர் நேரம் கிடைக்கும்போது அதீத உடற்பயிற்சியை செய்வார்கள். சிலர் நன்றாக சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சி செய்வார்கள். அதுவும் தவறு. அதிக உடற்பயிற்சி காய்ச்சல், இருமல், வாந்தி, இரத்தம் உறைதல்/வடிதல் உள்ளிட்ட பிரச்னைகளைத் தோற்றுவிக்கும். 

மேற்குறிப்பிட்ட இந்த பழக்கங்களை தொடர்ந்து செய்யும்போது அது சார்ந்த நோய்கள் விரைவில் தாக்கிவிடும். எனவே, உடல் சமநிலையை கெடுக்கக்கூடிய விஷயங்களை முடிந்தவரை தவிர்த்துவிடுவது நல்லது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com