அண்மைக்காலமாக இந்தியர்களுக்கு, உறக்கமின்மை பிரச்னை அதிகரித்து வருவதற்கு மிகச் சரியான காரணங்கள் கண்டறியப்படவில்லை. நிபுணர்கள் பலரும், மன அழுத்தம், வாழ்முறை மாற்றம், விழிப்புணர்வு இன்மை, உடல்நலம் மற்றும் தூக்கம் குறித்த அலட்சியம் போன்றவை ஒருசேர்ந்து, உறக்கமின்மை என்ற பிரச்னை விஸ்வரூபம் ஆக்குவதாகக் கூறுகிறார்கள்.
உறக்கமின்மை என்ற பிரச்னை வந்ததுமே, உடனடியாக மருத்துவரை நாடி ஏதோ ஒரு மருந்தை வாங்கி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். உறக்கமின்மைக்கு. அது என்ன என்பதை கண்டறிந்து, உடனடியான அந்த பிரச்னையை சரி செய்து, இயற்கையாகவே சரியான நேரத்தில் உறக்கம் வருவதற்குத்தான் வழிவகை செய்ய வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
நீண்ட நாள் மாத்திரைகள்..
உறக்கமின்மைக்கு நீண்ட நாள்களாக மருந்துகளை சாப்பிடுபவர்களுக்கு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். தற்போதெல்லாம், உறக்கத்துக்கு இந்தியர்கள் அதிகமானோர் மருந்துகள் எடுத்துக்கொள்வது கவலையை ஏற்படுத்துவதாகவும், சில இயற்கை முறையிலான மருந்துகள் கூட நீண்ட நாள்களுக்கு எடுத்துக்கொள்ளும்போது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
யோகா, தியானம் போன்ற உறக்கத்தை இயற்கையாகவே கொண்டு வரும் சில முறைகள் உள்ளன. மக்கள் அதைத்தான் பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
ஒருவேளை மாத்திரை எடுத்துக்கொள்வதாக இருந்தாலும், கண்டிப்பாக மருத்துவரை நாடி, அவரது பரிந்துரையின்படிதான் மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம். நேரடியாக கடைக்குச் சென்று மருந்துகளை வாங்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார்கள்.
அது மட்டுமல்ல, உறக்கமின்மைக்கு என்ன காரணம் என்பதையும் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று கண்டறிய வேண்டியதும் அவசியமாகிறது.
மருந்துகளுக்கு மாற்று வழி உண்டா?
ஒரே நேரத்தில் தினமும் உறங்கச் செல்லுங்கள்.
தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு டீ, காபியை தவிர்த்துவிடுங்கள்.
புத்தகம் படிக்கலாம், இசையைக் கேட்கலாம்.
தொடர்ந்து அதிக மணி நேரம் செல்போன் பார்ப்பதைத் தடுக்கலாம்.
உறங்கச் செல்வதற்கு முன்பு, கவலைதரும் விஷயங்களைப் பற்றி பேசுவதை தவிர்க்கலாம். நினைப்பதையும்.
இது என்னவோ உலகிலேயே உங்களுக்கு மட்டுமான பிரச்னை என்று பயப்பட வேண்டாம். எல்லா வயதினருக்கும் வருகிறது.
கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு, செல்போன் பயன்பாடு அதிகரித்ததால், தற்போது உறக்கமின்மை பெரும் தொற்றுநோயாக மாறிவிட்டது.
உறக்கத்துக்கு மாத்திரை சாப்பிடுவதால், தசைகளின் பலத்தை குறைத்து ஏற்கனவே உடல்நலப் பிரச்னைகளை இருந்தால் அதனை அதிகரிக்கிறது. எனவே, உறங்காமல் இருப்பதும், தூக்கத்துக்கு மாத்திரை சாப்பிடுவதும் நல்லதல்ல. உடனடியாக நம்மை நாமே சரி செய்துகொள்ள முயல்வது நல்லது. நிலைமை கையை மீறி சென்றுவிட்டது என்றால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடுங்கள்.