முதன் முதலில் ஃபிலிம் ஃபேர் விருது பெற்ற நடிகை என்ற பெருமைக்குரியவர் பழம்பெரும் நடிகை மீனா குமாரி. இந்திய சினிமாவின் வரலாறு இவரது பங்களிப்பைப் பற்றி எழுதாமல் நிறைவு செய்ய முடியாது. நடிகை, பாடலாசிரியர், பாடகி என பன்முகத் திறமை கொண்டவர் மீனா குமாரி. அவரது வாழ்க்கை துயரமானது. துயரங்களின் நாயகி என்றே அழைக்கப்பட்ட மீனா குமாரியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 1) அவரது 85-வது பிறந்த நாளில் கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
பாகிஸ்தானில் பஞ்சாப்பில் இருந்து இந்தியா வந்த அலி பக்ஷா என்ற முஸ்லிமிற்கும், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த மஃஜபீன் பானு என்ற கிருஸ்துவ பெண்ணிற்கும் 1933-ல் பிறந்தவர் மீனா குமாரி.1950-களில் இந்தித் திரையுலகில் ஆட்சி புரிந்த நடிகை மீனா குமாரி. இந்தப் பேரழகி அந்நாட்களில் பல்லாயிரணக்கான இளைஞர்களுக்கு கனவுக் கன்னியாக திகழ்ந்தார்.
தி லெதர் பேஸ்'' என்ற படத்தில் அறிமுகமான மீனா குமாரி 33 வருடத்தில் 92 படங்களில் நடித்து பெரும் சாதனை படைத்தார். அவர் நடித்த அத்தனை படமும் வெற்றி பெற்றது. அவர் படங்களைப் போலவே சொந்த வாழ்க்கையிலும் காதல், பிரிவு, தனிமை, சோகம் எனத் துன்பியலில் வாடியிருந்தார். இறுதி மூச்சு வரை பல பிரச்னையில் மனம் உழன்று, தனிமையிலும் துயரத்திலும் மது போதைக்கு அடிமையாகி கடைசி வரை அனேக துன்பங்களை அனுபவித்தார் மீனா குமாரி.
உடல் நலம் குன்றி, கோமாவில் விழுந்து 1972-ம் ஆண்டு உயிர் நீத்த இவர் 38 வருடங்களே வாழ்ந்தவர். அவரது கவிச்சொற்களை மேற்கோளாக பயன்படுத்தும் வகையில் ஆழமான வரிகளை எழுதியுள்ளார். மீனா குமாரியின் வாழ்க்கையைப் பற்றி இரண்டு புத்தகங்கள் வெளியாகியுள்ளன. பலரை விழிகள் விரியச் செய்து, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய அந்தத் தாரகை சோகத்தில் சோர்ந்து போயிருந்தாலும், திரையிலும், காலம் தோறும் தோன்றும் ரசிகர்களின் இதயங்களிலும் வாழ்ந்து வருகிறார்.