மீண்டு வர வேண்டும் செம்புப் பாத்திரங்கள்

ஒரு பக்கம் அது உருமாற்றமடைந்து கொண்டிருக்கும் நிலையில், அதன் இயல்பு குறித்து தொடர்ந்து ஆய்வுகளும் முன்னெக்கப்பட்டு வருகின்றன.
மீண்டு வர வேண்டும் செம்புப் பாத்திரங்கள்
மீண்டு வர வேண்டும் செம்புப் பாத்திரங்கள்

2019-ஆம் ஆண்டு கரோனா தொற்று பற்றிய செய்திகள் வெளி வந்த போது, அந்த வைரஸ் உலகுக்கு புதிதாக இருந்திருந்தது. இதுவரை அதுபற்றிய புதிய புதிய ஆய்வுகளும், அதன் உருமாறிய வைரஸ்களும் உலகை அச்சுறுத்திக் கொண்டேதான் இருக்கின்றன.

கரோனா உருமாற்றமடைந்து கொண்டே மேலும் பரவி கொண்டிருக்கும் நிலையில், அதன் இயல்பு குறித்த ஆய்வுகளும் முன்னெக்கப்பட்டு வருகின்றன.

கரோனா பற்றிய ஆய்வுகள் ஆரம்பத்தில் ஒரு விதமாக இருந்தது. அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையும் அப்போது இருந்தது. ஆனால் தற்போது பல விஷயங்களில் ஆய்வு முடிவுகள் வேறுபடுகின்றன. அதையும் நாம் நிதர்சனமாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

கரோனா பேரிடரின் ஆரம்ப காலத்தில் கரோனா பாதித்தவர்களின் வீடு இருந்த தெருவே போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு பலகை வைத்து அடைக்கப்பட்டது. இப்போது, இங்கு கரோனா நோயாளி இருக்கிறார் என்ற அறிவிப்புக் காகிதம் மட்டுமே ஒட்டப்படுகிறது.

எனவே, நாம் கரோனா பேரிடர் எனும் பெருந்தொற்றுக் காலத்தை, எங்கிருந்து  பயணத்தைத் தொடங்கி எங்கே வந்துள்ளோம் என்பது நிச்சயம் புரியும்.

அந்த வகையில்தான் செம்புப் பாத்திரங்களில் கரோனா தொற்று அதிக நேரம் உயிர் வாழ்கிறது என்றும் அப்போது ஒரு சில ஆய்வுகள் வெளியாகின.  மறுபக்கம் செம்புப் பாத்திரத்தில் தேங்காய் தண்ணீர் வைத்துக் குடித்தால் உடல்நிலை பாதிக்கும் என்று சில தவறான தகவல்களும் பரப்பப்பட்டன. 

வெளியே இருந்து வீட்டுக்குள் வரும் போதே கை, கால்களை சுத்தம் செய்யும் பழக்கங்கள் நிச்சயம் நமது தாத்தா பாட்டிகள் கைகொண்டிருந்தது தான். ஆனால் அதை இந்த பெருந்தொற்று என்னும் பேரிடர்தான் நமக்குக் கற்றுக் கொடுத்தது.

அதுபோலவே, பல ஆண்டுகளாக நமது மூதாதையர் பயன்படுத்தி வந்த செம்புப் பாத்திரங்கள், கரோனா தொற்றுப் பரவலுக்கு முன்புதான் மீண்டும் விற்பனைக்கு வந்து பொதுமக்களும் அதனை விரும்பி வாங்கிப் பயன்படுத்தி வந்தனர்.

திடீரென, கரோனா பெருந்தொற்றுப் பரவ, அதனை விட வேகமாக அதுபற்றிய தகவல்களும் பரவியது. அதில் செம்புப் பாத்திரத்தில் கரோனா தொற்று அதிக நேரம் இருக்கும் என்பதும் ஒன்றாக இருந்தது. அப்போதைய ஆய்வுகள் சிலவும் அவ்வாறு கூறியது.

ஆனால், கரோனா வைரஸ் நோயாளிகளின் மூச்சுக் காற்று, உமிழ் நீர் மூலமாகவே மற்றவர்களுக்குப் பரவுகிறது. அது மற்றவர்களின் மூக்கு, கண் அல்லது வாய் வழியாக உடலுக்குள் நுழையும் போதுதான் கரோனா தொற்று பரவுகிறது என்று ஆய்வு முடிவுகள் தற்போது தெரிவிக்கின்றன.

எனவே, மெல்ல மீண்டு வந்து கொண்டிருந்த செம்புப் பாத்திரங்களின் பயன்பாடு எந்த வகையிலும் நின்று விடாமல், தொடர வேண்டும். செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை வைத்துக் குடிக்கும் போது ஏற்படும் பலன்கள் ஏராளம்.

செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்துக் குடிக்கும் போது இதயத்துக்கான இரத்த ஓட்டத்தை மேம்பட உதவுகிறது. செம்பு தாது, நல்ல ரத்த அணுக்களை தொடர்ந்து அதிகமாக உற்பத்தி செய்யும். எனவே, இரத்தம் இயல்பாகவே சுத்திகரிக்கப்படும். இதனால் ரத்தப் புற்றுநோய் போன்ற ரத்தம் சம்பந்தப்பட்ட உடல்நலப் பிரச்னைகள் வருவது தடுக்கப்படும். ரத்த சோகை சரியாகும். 

செம்புப் பாத்திரத்தில் வைத்திருக்கும் தண்ணீரை குடிப்பவர்களுக்கு  நெஞ்சு எரிச்சல், இருமல், சளி போன்றவை அண்டுவதில்லை.

இரவில் செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து, அதனை காலையில் எழுந்து குடிக்கும் போது, உடல் வலிமை கிடைக்கும். செம்பு எனப்படும் காப்பர் சத்துதான் இரத்த விருத்திக்குத் தேவையானது. செம்பு கலந்த நீரைக் குடிப்பதால் எலும்பு உறுதியாகும். 

செம்புப் பாத்திரத்தின் பலன்கள் சொல்லில் முடியாது. எனவே, இத்தனை சிறப்பு வாய்ந்த பாத்திரங்களை ஏதேதோ காரணங்களுக்காக பயன்படுத்தாமல் விட்டிருந்தால், எந்த அச்சமும் இல்லாமல் அவற்றை எடுத்து தூசு தட்டி மீண்டும் பயன்படுத்துங்கள். எளிதாக உடல் உறுதியைக் கூட்டுங்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com