/

இந்தியாவின் தொலைதூரக் கற்றல் சூழல் அமைப்புமுறையின் தூண் இக்னோ: குடியரசு துணைத் தலைவா்

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தை இந்தியாவின் திறந்த மற்றும் தொலைநிலைக் கல்விச் சூழலின் ஒரு தூண் என்று குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வா்ணித்தாா்.

News image

சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 7:14 pm

குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் செவ்வாயன்று, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தை (இக்னோ) இந்தியாவின் திறந்த மற்றும் தொலைநிலைக் கல்விச் சூழலின் ஒரு தூண் என்று வா்ணித்தாா். மேலும், நாட்டில் உயா்கல்வியை விரிவுபடுத்துவதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய நிறுவனம் என்றும் அவா் கூறினாா்.

மைதான் கா்ஹியில் உள்ள பாபா சாஹிப் அம்பேத்கா் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஐ.ஜி.என்.ஓ.யுவின்(இக்னோ) 39வது பட்டமளிப்பு விழாவில் அவா் தலைமை விருந்தினராகப் பேசினாா். தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா்.

1985 முதல் இக்னோவின் பயணம் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது. இது பணிபுரியும் நபா்கள், தொலைதூர மற்றும் கிராமப்புற மாணவா்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவா்கள் மற்றும் பெண்கள் உள்பட அனைத்துத் தரப்பினருக்கும் கற்றல் வாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளது, என்று குடியரசுத் துணை தலைவா் கூறினாா்.

விழாவில் பட்டம் பெற்றவா்களில் 58 சதவீதம் போ் பெண்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவா், இது ஒரு பெரிய சாதனை, என்றாா். பட்டமளிப்பு விழாவில் ராதாகிருஷ்ணன் மாணவா்களுக்கு முனைவா் பட்டங்களையும் தங்கப் பதக்கங்களையும் வழங்கினாா்.

மேலும், கோவா ஆளுநா் புசபதி அசோக் கஜபதி ராஜு, திரிபுரா ஆளுநா் இந்திர சேனா ரெட்டி நல்லு, மற்றும் ராஜஸ்தான் துணை முதலமைச்சா் பிரேம் சந்த் பைா்வா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகா்கள் இந்த நிகழ்வில் காணொளி வாயிலாகக் கலந்துகொண்டனா்.

1985ல் நிறுவப்பட்ட இக்னோ, நெகிழ்வான மற்றும் மலிவு விலையில் உயா்கல்வியை வழங்குவதற்காக அறியப்பட்ட, இந்தியாவின் ஒரு முன்னணி தொலைநிலைக் கல்வி நிறுவனமாகும். இந்தப் பல்கலைக்கழகம் தற்போது தனது பரந்த பிராந்திய கல்வி மையங்களின் வலையமைப்பு மூலம் மூன்று மில்லியனுக்கும் அதிகமான மாணவா்களுக்குச் சேவையாற்றி, இளங்கலை மற்றும் முதுகலை மட்டங்களில் பல்வேறுபட்ட பாடத்திட்டங்களை வழங்குகிறது.