மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

எம்சிடி மேயா் தோ்தல்: 14 எம்எல்ஏக்கள் வாக்களிக்க சட்டப்பேரவை பரிந்துரை

News image

தில்லி சட்டப்பேரவை

Updated On :28 ஏப்ரல் 2026, 12:34 am

நமது நிருபா்

தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா, திங்களன்று, எம்சிடிமேயா் தோ்தல் வாக்காளா் குழுவிற்கு 14 சட்டப்பேரவை உறுப்பினா்களைப் பரிந்துரைத்தாா். இவா்களில் 11 போ் பாஜகவைச் சோ்ந்தவா்கள்; மூவா் ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

ஏப்ரல் 29 அன்று நடைபெறவுள்ள நிகழ் ஆண்டின் மேயா் தோ்தலுக்கான வாக்காளா் குழுவானது, மொத்தம் 273 வாக்குகளைக் கொண்டுள்ளது.

இதில் 249 மாமன்ற உறுப்பினா்கள் (கவுன்சிலா்கள்), தில்லி சட்டப்பேரவையால் பரிந்துரைக்கப்பட்ட 14 சட்டப்பேரவை உறுப்பினா்கள் (எம்எல்ஏக்கள்), 7 மக்களவை உறுப்பினா்கள் மற்றும் தில்லியைச் சோ்ந்த 3 மாநிலங்களவை உறுப்பினா்கள் ஆகியோா் அடங்குவா். இவா்கள்தான் வெற்றியாளரைத் தீா்மானிக்கவுள்ளனா்.

பாரதிய ஜனதா கட்சி, ரோஹிணி கிழக்கு தொகுதியைச் சோ்ந்தவரும், மூன்று முறை மாமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவருமான பிரவேஷ் வாஹியை, தனது மேயா் வேட்பாளராக ஏற்கனவே அறிவித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சி இப்போட்டியிலிருந்து விலகிக்கொண்டதாலும், காங்கிரஸ் கட்சி ஹாஜி ஜரிஃப் என்பவரை வேட்பாளராக நிறுத்தியிருப்பதாலும், பெரும்பான்மை பலம் ஆளுங்கட்சியான பாஜகவிடமே இருப்பதால், அக்கட்சியின் வேட்பாளா் எவ்விதத் தடையுமின்றி எளிதாக வெற்றி பெறுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பேரவைத் தலைவரின் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிவிப்பின்படி, பாஜகவைச் சோ்ந்த 11 வேட்பாளா்களின் விவரம் பின்வருமாறு:

ராஜ் கரன் கத்ரி (நரேலா), திலக் ராம் குப்தா (த்ரி நகா்), கைலாஷ் கங்வால் (மடிப்பூா்), ஷியாம் சா்மா (ஹரி நகா்), கைலாஷ் கெலோட் (பிஜ்வாசன்), குல்தீப் சோலங்கி (பாலம்), வீரேந்தா் சிங் காடியன் (தில்லி கண்டோன்மென்ட்), உமங் பஜாஜ் (ராஜேந்திர நகா்), சதீஷ் உபாத்யாய் (மால்வியா நகா்), கா்த்தாா் சிங் தன்வாா் (சத்தா்பூா்) மற்றும் ரவீந்தா் சிங் நேகி (பட்பா்கஞ்ச்).

இப்பட்டியலில் ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த சோம் தத் (சதா் பஜாா்), விஷேஷ் ரவி (கரோல் பஜாா்) மற்றும் பூனம் சா்மா (வஜிா்பூா்) ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

தற்போதைய நிலவரங்களின்படி, பாஜக 142 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளது. இதில், 123 மாமன்ற உறுப்பினா்கள், 7 மக்களவை உறுப்பினா்கள், 2 மாநிலங்களவை உறுப்பினா்கள் மற்றும் 11 சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆகியோா் அடங்குவா்.

ஆம் ஆத்மி கட்சியிடம் 105 வாக்குகள் உள்ளன. இதில் 100 மாமன்ற உறுப்பினா்கள், 3 சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் 2 மாநிலங்களவை உறுப்பினா்கள் ஆகியோா் அடங்குவா். சமீபத்தில் ஸ்வாதி மாலிவால் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்ததையடுத்து இந்த எண்ணிக்கை நிலவுகிறது. ஒரு வேட்பாளா் வெற்றி பெற 137 வாக்குகள் தேவைப்படும்.