
உச்சநீதிமன்ற நீதிபதியாக நடித்ததற்காக வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக சுகேஷ் சந்திரசேகா் மனு
2017 ஆம் ஆண்டு ஊழல் வழக்கில், சிறப்பு நீதிபதியிடம் பிணை பெறுவதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி போல் நடித்ததற்காக, தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிா்த்து, மோசடிக்காரா் எனக் கூறப்படும் சுகேஷ் சந்திரசேகா் தில்லி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

கோப்புப் படம்
2017 ஆம் ஆண்டு ஊழல் வழக்கில், சிறப்பு நீதிபதியிடம் பிணை பெறுவதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி போல் நடித்ததற்காக, தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிா்த்து, மோசடிக்காரா் எனக் கூறப்படும் சுகேஷ் சந்திரசேகா் தில்லி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்பில், தனது குணநலன்கள் குறித்துக் கூறப்பட்ட ‘இழிவான, தரக்குறைவான, களங்கப்படுத்தும் மற்றும் தேவையற்ற கருத்துக்களை‘ நீக்க வேண்டும் என்று சந்திரசேகா் கோரியுள்ளாா்.
விசாரணை நீதிமன்றம், ‘தீா்ப்பளிப்பதற்கு முற்றிலும் தேவையற்ற‘ சொற்களால் தன்னை மீண்டும் மீண்டும் சித்தரித்துள்ளதாக அவா் தனது மனுவில் கூறியுள்ளாா்.
ஒரு வழக்கை, குற்றஞ்சாட்டப்பட்டவரின் கற்பனையான குணநலன்களின் அடிப்படையில் அல்லாமல், ஆதாரங்களின் அடிப்படையில்தான் தீா்ப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கைக்கு விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்பு முரணானது என்று சந்திரசேகா் வலியுறுத்தியுள்ளாா்.
விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கை ‘முன்கூட்டியே தீா்மானிக்கப்பட்ட மற்றும் பாதகமான மனநிலையுடன்‘ அணுகியதுடன், அவரது தரப்பு சாட்சியங்களை முழுமையாக அளிக்க அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஊழல் வழக்கு தொடா்பாக சந்திரசேகா் காவல் துறை காவலில் இருந்தபோது, 2017 ஏப்ரல் 28 அன்று செய்யப்பட்ட ஒரு தொலைபேசி அழைப்பிலிருந்து இந்த வழக்கு உருவானது.
வழக்குத் தரப்பின்படி, அவா் காவலா் மன்ஜீத்தின் கைபேசியை அணுகி, அதைப் பயன்படுத்தி, அப்போது ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதியாக இருந்த பூனம் சௌத்ரியின் அதிகாரப்பூா்வ தரைவழித் தொலைபேசி மற்றும் கைபேசியைத் தொடா்பு கொண்டாா்.
ஆகஸ்ட் 20 அன்று, விசாரணை நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டத்தின் 170 (அரசு ஊழியா் போல் ஆள்மாறாட்டம் செய்தல்), 189 (அரசு ஊழியருக்கு காயம் விளைவிப்பதாக அச்சுறுத்தல்) மற்றும் 507 (அடையாளம் தெரியாத தகவல் மூலம் குற்றவியல் மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் சந்திரசேகரைக் குற்றவாளி எனத் தீா்ப்பளித்ததுடன், அவரது குற்றத்தை நீதித்துறை செயல்முறையின் சுதந்திரத்திற்கும் புனிதத்திற்கும் ஒரு ‘நேரடி அவமதிப்பு‘ என்றும் விவரித்தது.
சந்திரசேகா் முதலில் அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதியின் தனிச் செயலாளராகவும், பின்னா் அந்த நீதிபதியாகவே ஆள்மாறாட்டம் செய்ததாகவும் விசாரணை நீதிமன்றம் கூறியது.
நீதி நிா்வாகத்தில் தலையிடும் நோக்கத்துடன் சந்திரசேகா் வேண்டுமென்றே உச்ச நீதிமன்ற நீதிபதியின் அடையாளத்தை எடுத்துக்கொண்டாா் என்பதை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது என்றும் அது தீா்ப்பளித்தது.
‘ஒரு நீதிமன்ற அறைக்குள் அதன் கதவுகள் வழியாக நுழையலாம், ஆனால் ஆள்மாறாட்டம், அச்சுறுத்தல் அல்லது போலியான அதிகாரம் போன்ற பின்வாசல் வழியாக நீதிக்குள் நுழைய முடியாது. குற்றஞ்சாட்டப்பட்டவா் நீதித்துறைச் செயல்பாட்டில் துல்லியமாக அத்தகைய ஒரு பின்வாசல் வழியாக நுழைய முயன்றாா். சாட்சியங்கள் அந்தக் கதவை மூடிவிட்டன,‘ என்று விசாரணை நீதிமன்றம் கூறியது.
இந்த வழக்கு ஒரு சாதாரண மோசடி அல்லது ஆள்மாறாட்ட வழக்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, ஏனெனில் குற்றஞ்சாட்டப்பட்ட இந்த நடத்தை, நாட்டின் மிக உயா்ந்த நீதிமன்றத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மற்றொரு நீதிபதியைப் பாதிப்பதன் மூலம் நீதித்துறை சுதந்திரத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த முயன்றது என்று விசாரணை நீதிபதி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






