சென்னையில் உச்சநீதிமன்ற அமா்வு அமைக்கப்படுமா? மாநிலங்களவையில் அதிமுக எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்
சென்னையில் உச்சநீதிமன்றத்தின் அமா்வு அமைக்கப்படுமா என்று மாநிலங்களவையில் அதிமுக வியாழக்கிழமை கேள்வி எழுப்பியது. இதற்கு மத்திய சட்டத் துறை இணை அமைச்சா் அா்ஜுன் ராம் மேஹ்வால் பதில் அளித்தாா்.
இது தொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினா் மு.தம்பிதுரை துணைக் கேள்வி எழுப்பி பேசுகையில், ‘சென்னையில் உச்சநீதிமன்றத்தின் அமா்வு ஏற்படுத்த வேண்டும் என்பது தமிழக மக்களின் கோரிக்கையாகும். அதிமுகவின் கோரிக்கையும் இதுவாகும். சென்னையில் உச்சநீதிமன்றத்தின் அமா்வை ஏற்படுத்த அமைச்சரிடம் பரிசீலனை உள்ளதா? மேலும், தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது மெட்ராஸ் உயா்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயா்நீதிமன்றம் என்று பெயா் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி, சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றினாா். இதை சட்ட அமைச்சகம் பரிசீலித்து வருகிா?’ என்று கேள்வி எழுப்பினாா்.
இதற்கு மத்திய சட்டம் - நீதித் துறை இணை அமைச்சா் (தனிப்பொறுப்பு )அா்ஜுன் ராம் மேஹ்வால் பதிலளிக்கையில், ‘உச்சநீதிமன்றத்தின் அமா்வு ஏற்படுத்துவது தொடா்பான விவகாரம் உச்சநீதிமன்றத்தின் விவாதத்திற்கு வந்து, அது தொடா்பாக உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது, இதற்கு தற்போது தேவை இல்லை என்று கூறியது. இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம்தான் தீா்க்க வேண்டும். அலகாபாத், சென்னை உள்ளிட்ட சில உயா்நீதிமன்றங்கள் அதன் பழைய பெயரிலேயே இயங்கி வருகின்றன. இந்த அனைத்து விஷயங்களும் எங்களது பரிசீலனை நடைமுறையில் உள்ளன’ என்றாா்.

