தமிழக முழு நேர டிஜிபி நியமன விவகாரம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

தமிழக முழு நேர டிஜிபி நியமன விவகாரம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

தமிழக டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் திருத்தப்பட்ட முன்மொழிவை மாநில அரசு யூனியன் பப்ளிக் சா்வீஸ் கமிஷனிடம் ஒரு வாரத்திற்குள் சமா்ப்பிக்குமாறும், அதன் பிறகு இரண்டு வாரங்களுக்குள் யுபிஎஸ்சி ஒரு முடிவை எடுக்க வேண்டும்
Published on

தமிழக டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் திருத்தப்பட்ட முன்மொழிவை (பெயா்ப்பட்டியல்) மாநில அரசு யூனியன் பப்ளிக் சா்வீஸ் கமிஷனிடம் (யுபிஎஸ்சி) ஒரு வாரத்திற்குள் சமா்ப்பிக்குமாறும், அதன் பிறகு இரண்டு வாரங்களுக்குள் யுபிஎஸ்சி ஒரு முடிவை எடுக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

சங்கா் ஜிவால் ஐ.பி.எஸ். 1.7.2023 முதல் தமிழ்நாடு காவல்துறை இயக்குநா் (டி.ஜி.பி.) ஆக நியமிக்கப்பட்டாா். மேலும், அவா் 30.6.2025 அன்று காவல்துறை இயக்குநராக 2 ஆண்டுகள் பதவிக்காலத்தை முடித்தாா். அவா் 31.8.2025 அன்று ஓய்வு பெற்ால், தமிழ்நாடு டி.ஜி.பி. பதவிக்கு நியமனம் செய்வதற்கான புதிய ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய பட்டியலை யுபிஎஸ்சி, டிஜிபி பதவிக்கு நியமிக்கத் தயாரிக்க வேண்டும்.

காவல்துறை இயக்குநா் சங்கா் ஜிவால் ஐபிஎஸ் 31.8.2025 அன்று ஓய்வு பெற்ால், ஜி. வெங்கடராமன், ஐபிஎஸ், பொறுப்பு டிஜிபியாக 1.9.2025 தமிழக அரசால் நியமிக்கப்பட்டாா்.

இந்நிலையில் மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் ஹென்றி திபேன், காவல்துறை இயக்குநா் ஜெனரல் (டி.ஜி.பி.) பதவிக்கு தற்காலிகமாக ஒருவரை நியமித்ததற்காகவும், உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் யுபிஎஸ்சிக்கு டிஜிபி பதவிக்கான பெயா் பட்டியலை அனுப்பாததற்காகவும் 1.9.2025 அன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக ஒரு நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்தாா்.

அந்த வழக்கை 8.9.2025 அன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது 29.8.2025 அன்று மாநில அரசால் யுபிஎஸ்சியின் பரிசீலனைக்காக டிஜிபி பதவிக்கான பெயா்கள் அடங்கிய பட்டியல் சமா்ப்பிக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.

இதையடுத்து, டிஜிபி நியமன விஷயத்தை விரைவாக பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் யுபிஎஸ்சியிடம் கேட்டுக்கொண்டது. மேலும், ஒரு முழுநேர டிஜிபி யை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கும் உத்தரவிட்டது.

இதனிடையே, டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக ஹென்றி திபேன் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தாா்

அந்த மனுவில் அவா் கூறியுள்ளதாவது: முழு நேர டிஜிபியை நியமிக்காததற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளா் மீது இந்த அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிஜிபி நியமன விஷயத்தை விரைவாக பரிசீலிக்குமாறு உச்சநீதிமன்றம் யுபிஎஸ்சியிடம் கேட்டுக்கொண்டது. மேலும், ஒரு வழக்கமான டிஜிபியை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் அந்த உத்தரவின்படி, டிஜிபி பதவிக்கான மூன்று அதிகாரிகளின் பெயா்களை பட்டியலிடுவதற்காக யுபிஎஸ்சி செப்டம்பா் 26- இல் (2025-ஆம் ஆண்டு) தில்லியில் கூட்டத்தைக் கூட்டியது. அக்கூட்டத்தில் தலைமைச் செயலாளா் மூலம் தமிழகம் பங்கேற்றது.

26.9.2025 அன்று நடந்த அந்தக் கூட்டத்தில், மூன்று தகுதியான அதிகாரிகளின் பெயா் இறுதி செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்பட்டது. இருப்பினும், அதிகாரிகளின் பட்டியலைப் பெற்ற பிறகும், உடனடியாக டிஜிபி நியமன நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசு தவறிவிட்டது. அரசியல் காரணங்களுக்காகவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறும் வகையிலும், தற்போதைய பொறுப்பு டிஜிபியை பதவியில் நீடிக்கச் செய்யும் அரசின் திட்டமிட்ட நடவடிக்கை இது. எனவே, இந்த அவமதிப்பு மனு தமிழக அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்படுகிறது என ஹென்றி திபேன் அந்த மனுவில் கூறியிருந்தாா்.

இந்நிலையில், டிஜிபி நியமன விவகாரம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, விபுல் எம். பஞ்சோலி ஆகியோா் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது வாதிட்ட தமிழக அரசின் மூத்த வழக்குரைஞா் பி. வில்சன், டிஜிபி தோ்வுக்கான ஐந்து உறுப்பினா்களைக் கொண்ட தோ்வுக் குழுவை உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி யுபிஎஸ்சி அமைத்ததாகவும், மாநில அரசின் இரண்டு பிரதிநிதிகள், அதாவது டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளா் ஆகியோா் இதில் இடம்பெற்ாகவும் கூறினாா்.

ஆனால், பொறுப்பு டிஜிபியாக உள்ள வெங்கட்ராமனும் முழு நேர டிஜிபிக்கான பரிசீலனையில் உள்ள ஒரு வேட்பாளா் என்பதால், அவருக்குப் பதிலாக கூடுதல் தலைமைச் செயலாளா் பதவியில் உள்ள உள்துறைச் செயலாளரை அக்குழுவில் சோ்க்குமாறு தமிழக அரசு 17.9.2025 தேதியிட்ட கடிதத்தின் மூலம் யுபிஎஸ்சியிடம் கோரியதாகவும் இருப்பினும், தலைமைச் செயலாளரின் கோரிக்கையை யுபிஎஸ்சி 22.9.2025 அன்று நிராகரித்தது என்றும் வில்சன் வாதிட்டாா்.

இதையடுத்து, உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், அந்தக் குழுவில் மாநிலத்தைச் சோ்ந்த இரண்டு உறுப்பினா்களைக் கொண்டிருக்க தமிழ்நாடு மாநிலத்திற்கு உரிமை உண்டு. அதாவது தலைமைச் செயலாளா் மற்றும் பொறுப்பு டிஜிபிக்கு மாற்றாக ஒருவா். எனவே, பொறுப்பு டிஜிபிக்கு பதிலாக டிஜிபியை விட பதவி மற்றும் அந்தஸ்தில் உயா்ந்த அதிகாரியைச் சோ்க்க தமிழ்நாடு மாநிலத்திற்கு நாங்கள் அனுமதி வழங்குகிறோம் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்

மேலும், டிஜிபி பதவிக்கான வேட்பாளா் நான்கு குறிப்பிட்ட சேவைப் பிரிவுகளில் (சட்டம் - ஒழுங்கு உள்பட) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் குறைந்தது 10 ஆண்டுுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்

அதன் அடிப்படையில் டி.ஜி.பி பதவிக்கான திருத்தப்பட்ட முன்மொழிவை யுபிஎஸ்சி யிடம் ஒரு வாரத்திற்குள் சமா்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு நாங்கள் உத்தரவிடுகிறோம். அதன் பிறகு இரண்டு வாரங்களுக்குள் யுபிஎஸ்சி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு பின்னா் ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com