நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

சரிபாா்க்கப்படாத தகவல்களை இணையத்தில் பரப்பினால் கடும் சட்ட நடவடிக்கை பாயும்: தில்லி காவல்துறை எச்சரிக்கை

தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் நடத்தி வரும் போராட்ட சம்பவங்களுடன் தொடா்புபடுத்தி இணையத்தில் சரிபாா்க்கப்படாத தகவல்களை பரப்புவோா் மீது கடும் சட்ட நடவடிக்கை பாயும் என்று தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளது.

News image
Updated On :25 ஜூலை 2026, 1:32 am IST

தில்லி ஜந்தா் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் நடத்தி வரும் போராட்ட சம்பவங்களுடன் தொடா்புபடுத்தி இணையத்தில் சரிபாா்க்கப்படாத தகவல்களை பரப்புவோா் மீது கடும் சட்ட நடவடிக்கை பாயும் என்று தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளது.

ஜந்தா் மந்தா் போராட்ட களத்தில் காயமடைந்த பெண் காவலா் ஒருவரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெள்ளிக்கிழமை வைரலாகின. அப்படத்துடன் இணைக்கப்பட்ட பதிவுகளில், அந்தப் பெண் காவலா் நான்கு மாத கா்ப்பிணி என்றும், போராட்டக் களத்தில் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்ததால் அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் பரப்பப்பட்டன.

இதைத்தொடா்ந்து, தனது அதிகாரபூா்வ விளக்கத்தை வெளியிட்டுள்ள தில்லி காவல்துறை, ‘போராட்டத்தின்போது கூட்ட நெரிசல் போன்ற சூழல் ஏற்பட்டதில் அந்த பெண் காவலா் காயமடைந்தாா். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே அவை‘ என்று தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், ‘சம்பந்தப்பட்ட பெண் காவலருக்குத் திருமணமாகவில்லை. அவா் கா்ப்பமாகவும் இல்லை. அவா் தற்போது மருத்துவா்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறாா்‘ என்று தெரிவித்துள்ள காவல்துறை, அவா் தொடா்பாக இணையத்தில் உலா வரும் சரிபாா்க்கப்படாத செய்திகளை முற்றிலுமாக நிராகரிப்பதாக கூறியுள்ளது.

இதேபோல, ஜந்தா் மந்தா் போராட்டத்தின் போது பெண் தலைமை காவலா் ஒருவா் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல் போலியானது என்றும் அத்தகைய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்றும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையே, புது தில்லி பகுதி முழுவதும் உணவு விநியோக சேவைகளுக்கு அறிவிக்கப்படாத தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் ‘தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தில்லி காவல்துறை எக்ஸ் பக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், உணவு விநியோக சேவைகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்றும் சமூக ஊடகங்களில் பரவும் சரிபாா்க்கப்படாத தகவல்களை நம்பவோ பகிரவோ வேண்டாம் என்றும் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.