

தமிழர் முகங்கள் - வ.வே.சு; பக்.173; ரூ.120; விஜயபாரதம் பதிப்பகம், 12, எம்.வி.நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை- 600 031.
ஓலைச்சுவடிகளுக்கு உயிர் தந்த தமிழ்தாத்தா உ.வே. சாமிநாதைய்யர், உரைநடைத் தென்றலாய் உலா வந்த திரு. வி. கல்யாணசுந்தரனார், சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம், நாடகத் தமிழை வளர்த்த அவ்வை தி.க. சண்முகம், பக்தியிசை வளர்த்த பாபநாசம் சிவன், பாரதியாரோடு பழகிய அறிஞர் பி.ஸ்ரீ. ஆகியோர் தமிழ் வளர்த்த நிகழ்வு
களைத் தேடிப்பிடித்து மாலையாகத் தொகுத்தளித்திருக்கிறார் நூலாசிரியர்.
இரண்டாவது உலக மகா யுத்தம் காரணமாக, திருக்கழுக்குன்றத்துக்கு உ.வே.சா குடும்பம் குடி பெயர்ந்தபோது, வீட்டுப் பொருள்களைத் தவிர, பத்து மாட்டு வண்டிகள் நிறைய ஓலைச் சுவடிகள் கொண்டு செல்லப்பட்ட நிகழ்வு பிரமிக்க வைக்கிறது. "சுவடியே தெய்வம் சுவடி தேடுதலே தீர்த்த யாத்திரை' என்ற வரிகள் நெஞ்சை வருடுகின்றன.
திருமணமான புதிதில் தன் மனைவியிடம், ""என்ன வேண்டும்?'' என்று திரு.வி.க. கேட்க, அதற்கு அவர் மனைவி, ""நீங்கள் எனக்கு தமிழ் கற்றுத்தர வேண்டும்'' என்று கேட்டாராம். இப்படிப்பட்ட மனைவியைப் பெற்ற தமிழறிஞர் வேறு யாரும் இருக்க முடியாது.
தனது 38 வயதிலிருந்து ஆண்டுதோறும் தனது பிறந்தநாளில் தன்னுடைய ஒரு நூலையாவது (சில சமயங்களில் ஒரு நூலிற்கும் மேலாக) வெளியிட்டு புதிய மரபை உருவாக்கிய ம.பொ.சி., தனது 89 வயது வரை தொடர்ந்து எழுதுகோலைப் பயன்படுத்தியது உட்பட இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் நிறைய அடங்கியுள்ள நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.