வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியரின் உரைவளம்

சமய இலக்கிய உலகில் அறிஞர்களின் அறிஞர் என்று போற்றப்படுபவர் உரையாசிரியரும் பதிப்பாசிரியருமான வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர். 

News image
Updated On :21 டிசம்பர் 2020, 3:21 am

DIN

வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியரின் உரைவளம் - வெ.இராஜேஸ்வரி; பக்.200; ரூ. 200;  புத்தா பப்ளிகேஷன்ஸ், 18, விக்டோரியா கிரசண்ட் ரோடு, எழும்பூர், சென்னை-600 008.
சமய இலக்கிய உலகில் அறிஞர்களின் அறிஞர் என்று போற்றப்படுபவர் உரையாசிரியரும் பதிப்பாசிரியருமான வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர்.
 இவர் கம்பராமாயணம், வில்லிபாரதம் இரண்டுக்கும் முழுமையாக உரை எழுதியுள்ளார்.  பத்துப்பாட்டில் ஏழு நூல்களுக்கும், சிலப்பதிகாரத்தில் எட்டு காதைகளுக்கும், மணிமேகலையின் மூன்று காதைகளுக்கும், சீறாப்புராணத்திலும், ரட்சண்ய யாத்ரீகத்திலும் ஒவ்வொரு பகுதிக்கும் உரை எழுதியுள்ளார். 
 தனது ஆசிரியர் இருவரோடு இணைந்து  அஷ்ட பிரபந்தத்துக்கு உரை எழுதியுள்ளார்.  திருக்குறள் பரிமேலழகர் உரைக்கு, குறிப்புரை எழுதியுள்ளார். 
 சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி,  கந்தபுராணம்,  திருமுருகாற்றுப்படை,  தண்டியலங்காரத்தின் ஒரு பகுதி  இவற்றுக்கு உரை எழுதியதோடு பதிப்பித்தும் இருக்கிறார். 
 ஒரு நூலைப் பதிப்பிக்கும் முன் வை.மு.கோ. செலுத்தும் கவனமும் உழைப்பும் நம்மைத் திகைக்க வைப்பவை.  இவர் கம்பராமாயணம் படித்தபோது  கிடைத்த பாடபேதங்களைக் குறித்துக் கொண்டு, வையாபுரிப்பிள்ளை தனக்குக் கொடுத்த  ஏட்டுப் பிரதிகளுடன் ஒப்பிட்டு இரண்டாம் பதிப்பு கம்பராமாயணத்தை வெளியிட்டார். 
மூன்றாவது பதிப்பில் பி.என். அப்புசாமி ஐயர், மு.இராகவையங்கார் முதலியோரின் பிரதிகளை வாங்கி ஒப்பிட்டு சரிபார்த்து பாடபேதங்களைச் சேர்த்தார். 
 நான்காவது பதிப்பை வெளியிடும் முன்  பி.ஸ்ரீ. ஆசாரியா எழுதிய கம்ப சித்திரத்தையும், வெ.ப.சுப்பிரமணிய முதலியார் எழுதிய கம்பராமாயண சாரத்தையும் படித்து ஒப்புநோக்கி சரி பார்த்துக் கொண்டார்.
 உ.வே.சா.போலவே இவரும் ஒரு நூலில் வரும் ஒரு சொற்றொடர் வேறு எந்தெந்த நூலில் வருகிறது என்பதையும் தனது உரையில் குறிப்பிடுகிறார்,  மேலும் இவர் தனது உரைகளில்  இலக்கண வரலாறு குறிப்பவராகவும் இருந்துள்ளார். 
இருபதாம் நூற்றாண்டில்  தமிழுக்கு இணையற்ற தொண்டு புரிந்த உ.வே.சா.வின் உரை இலக்கிய நெறி சார்ந்து  அமைந்ததென்றால், அதே காலகட்டத்தில் வாழ்ந்த வை.மு.கோ.வின் உரை சமயநெறி சார்ந்து அமைந்தது. 
ஆயினும் பழந்தமிழ் இலக்கியங்களை மீட்டெடுத்த வகையில் வை.மு.கோ., உ.வே.சா.வோடு ஒப்புநோக்கத்தக்கவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.