ஜெயங்கொண்டம், ஏப்.8: அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
பிரசித்தி பெற்ற இந்த கோவில் திருவிழா மார்ச் 31- ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் வெவ்வேறு வாகனங்களில் கலியுக வரதராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியில் ஒன்றான திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முதல் தேரில் ஆஞ்சநேயர் எழுந்தருளினார். இரண்டாம் தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை திருக்கோவில் ஆதீனம் பரம்பரை தர்மகர்த்தா கோவிந்தசாமி படையாச்சி உள்ளிட்டோர் செய்தனர். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகெüரி தலைமையிலான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்..