
உத்தரகண்டில் உள்ள பத்ரிநாத் கோயில் பக்தா்கள் வழிபாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை(மே 4) திறக்கப்பட்டது. அதிகாலை 6 மணியளவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது ராணுவ ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவி வரவேற்பளிக்கப்பட்டது. இதனிடையே, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பத்ரிநாத் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ததுடன், அங்கிருந்த பக்தர்களுடன் கலந்துரையாடினார்.
ஆறு மாதங்களுக்குப் பின் கோயில் திறக்கப்படுவதையொட்டி, சுமார் 15 டன் மலர்களால் கோயில் வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் வருகையால் பத்ரிநாத் களைகட்டியுள்ளது.