திருப்பாவை - பாடல் 27

நோன்பு நோற்பதற்கு தேவையான பொருட்களை
Published on
Updated on
1 min read

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூட இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


பாடியவர் - பவ்யா ஹரி

விளக்கம்

நோன்பு நோற்பதற்கு தேவையான பொருட்களை பட்டியலிட்ட சிறுமிகளிடம் கண்ணபிரான், இவை போதுமா இன்னும் வேண்டுமா என்று கேட்டான் போலும். அதற்கு அந்த சிறுமிகள் நாங்கள் நோன்பு முடிந்ததைக் கொண்டாடும்போது தங்களுக்கு வேண்டுவது என்னென்ன என்று இந்த பாடலில் கூறுகின்றார்கள். கூடார் = சேராதவர்கள், பகைவர்கள்.

பொழிப்புரை

உன்னுடன் கூடாத பகைவர்களை வெல்லும் வல்லமை படைத்த கண்ணபிரானே, நாங்கள் உனது பெருமைகளை வாயாரப்பாடி உன்னிடம் பறைக்கருவி பெற்று இந்த நோன்பினை முடித்தோம். இந்த நோன்பினை வெற்றிகரமாக முடித்தமையை கொண்டாடும் வகையில் நாங்கள் பெரும் சம்மானமாவன, வளையல்கள், தோளில் அணியப்படும் வளைகள், தோடு, செவிப்பூ, காலில் அணியும் சிலம்பு ஆகிய பலவிதமான அணிகலன்களை யாம் அணிந்து நாட்டோர் புகழும் வகையில் நாங்கள் அணிந்துகொள்வோம்; மேலும் நீ அளிக்கும் ஆடைகள் புனைந்து, பால் சோற்றினை முற்றிலும் மூடுமாறு நெய்யினால் அதனை மறைத்து, அந்த பால் சோற்றினில் உள்ள நெய் எங்களது முழங்கைக் வழியாக வழிந்து ஓடுமாறு சோற்றினை எங்களது கையினில் ஏந்தி, உன்னுடன் கலந்து நாங்கள் உண்போம். அவ்வாறு உண்ட பின்னர், எங்களது உள்ளம் குளிரும் வகையில் உன்னுடன் கூடி இருந்து நாங்கள் அனைவரும் மகிழ்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com