திருப்பதியை அடுத்த அப்பளாய்குண்டா ஏழுமலையான் கோயிலுக்கு தேவஸ்தானம் ரூ. 76 லட்சம் செலவில் புதிய தங்க ஆபரணங்களை செய்து அளித்துள்ளது.
திருப்பதியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள அப்பளாய்குண்டாவில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொண்டு திருமலைக்குச் செல்லும் முன், அவர் இங்கு தங்கியிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதனால் இங்கு தேவஸ்தானம் பிரசன்ன வெங்கடேஸ்வரருக்கு கோயில் எழுப்பி உள்ளது.
இக்கோயிலில் வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இக்கோயிலில் உள்ள உற்சவ மற்றும் மூலவர் சிலைகளுக்கு அணிவிக்க 5 கிலோ தங்கம் மற்றும் 103 கிலோ வெள்ளியில் ஆன ஆபரணங்கள் மட்டுமே உள்ளன. எனவே வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அணிவிக்க ரூ. 76 லட்சம் செலவில் புதிய தங்க, வைர ஆபரணங்களை தேவஸ்தானம் செய்துள்ளது. இதனை திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி போலா பாஸ்கர், கோயிலுக்குச் சென்று நேரடியாக கோயில் அதிகாரியிடம் வழங்கினார். அதற்குப் பின் வைகுண்ட ஏகாதசிக்கு கோயிலில் நடைபெற்று வரும் முன்னேற்பாடுகள் அனைத்தையும் பார்வையிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.