திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அடுத்த மார்ச் மாதத்துக்குள் 500 பேருக்கு இலவச அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானத்தின் செயல் இணை அதிகாரி போலா பாஸ்கர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் திருப்பதியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: தேவஸ்தானம் சார்பில் திருப்பதியில் உள்ள ஸ்வேதா பவனில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இலவச அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதில், ஹிந்து தர்மம், கோயில், அர்ச்சகர் பணி உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு மாத காலம் நடைபெறும் இந்தப் பயிற்சியை 15 நாள்கள், 10 நாள்கள், 5 நாள்கள் என்று பிரித்து தேவஸ்தானம் அளித்து வருகிறது. அதன்படி, அர்ச்சகர் பயிற்சியை முடித்த 32 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அதிகாரிகள் கலந்து கொண்டு, பயிற்சி பெற்ற 32 பேருக்கும் சான்றிதழ்களையும், அர்ச்சகர்களுக்கான பூஜைப் பொருள்களையும் வழங்கினர்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 500 பேருக்கு இலவச அர்ச்சகர் பயிற்சியை அளிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இப்பயிற்சியைப் பெறுவதற்கு வரும் இளைஞர்களுக்கு உணவு, தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகளை தேவஸ்தானம் இலவசமாக அளித்து வருகிறது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







