உங்கள் வாழ்வில் திருப்பங்களை காண வேண்டுமா? ஹஸ்த நட்சத்திர யோக பைரவரை வணங்குங்க!

இன்று 29/12/2018 சனிக்கிழமை தனூர் மாதத்து தேய்பிறை அஷ்டமி காசியில் காலபைரவாஷ்டமியாக அனுஷ்டிக்கப்படுகிறது.
உங்கள் வாழ்வில் திருப்பங்களை காண வேண்டுமா? ஹஸ்த நட்சத்திர யோக பைரவரை வணங்குங்க!

இன்று 29/12/2018 சனிக்கிழமை தனூர் மாதத்து தேய்பிறை அஷ்டமி காசியில் காலபைரவாஷ்டமியாக அனுஷ்டிக்கப்படுகிறது. மேலும் இதனை ருத்ராஷ்டமி, காலாஷ்டமி  என்றும் சிறப்பாக போற்றப்படுகின்றது. இன்று முழுவதும் அஷ்டமி திதி உள்ள நிலையில் பைரவ வழிபாடு செய்வது சிறப்பு என சாஸ்திரங்கள் கூறுகிறது. சீர்காழி  சட்டநாதர், சென்னை கபாலீசுவரர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், திருச்சி திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் கோயில், பிள்ளையார்பட்டி அருகில்  இருக்கும் வயிரவன் பட்டி, காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி, தருமபுரியில் தகடூர் பைரவர் போன்ற ஸ்தலங்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள்  செய்யப்படுகிறது. சனிக்கிழமையும் அஷ்டமியும் இணைந்து வரும் நாளில் சனைச்சர பகவானின் குருவான பைரவர் அபய கரம் காட்டி அனைத்து பிரச்னைகளில் இருந்தும்  விடுவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

பைரவ மூர்த்தி

ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற  வரிசையில் காட்சி தருவதும் உண்டு. சிவபெருமான் வீரச்செயல்களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணம் சொல்லும்.

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாகக் கருதப்படும் பைரவர் சிவனுடைய  அம்சம் ஆவார். சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. பைரவர், எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள் புரிகிறார். அஷ்ட  பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு  செய்ய உகந்தது ஆகும்.

பைரவர் தோன்றிய வரலாறு

சிவனின் ஆதி அந்தம் காண முடியாத பிரம்மா, தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி  திருமுடியைக் கண்டதாகப் பொய்யுரைத்து திருமுடியில் இருந்து வீழ்ந்ததாகத்  தாழம்பூவையும் பொய்யுரைக்க வைத்தார். குறிப்பாகப் பிரம்மனின் ஐந்தாம் தலை இப்பொய்யை திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருக்க சினம் கொண்ட சிவனார், தனது  புருவ மத்தியில் இருந்து பைரவ மூர்த்தத்தை உண்டு செய்தார். " பைரவனே ! பொய்யுரைத்த பிரமனின் தலைகளை அறுத்தெறி" என உத்தரவிட, உச்சந்தலையை அறுத்தெறிந்த பைரவர், பின் மற்ற தலைகளையும் அறுக்க முற்பட அங்குத் தோன்றிய திருமால், "முன்னர் பிரம்மன் செய்த தவத்தில் மகிழ்ந்து அவனுக்கு ஐந்து முகங்கள்  அருளினார். இப்போது அவனை நீரே நான்முகனாக்கிவிட்டீர், எனவே அவனை மன்னியுங்கள்! " என்றார். இதையடுத்து பிரம்மாவும் மன்னிப்புக் கேட்டார்.

ஈசன் சினம் தணிந்து, “வேதம் ஓதுபவருக்கு இனி நீரே அரசன், அனைத்து வேள்விகளுக்கும் நீயே குரு, யாக யக்ஞங்களின் பலனை அனைவருக்கும் நீ வழங்கு" என  அருளினார். பைரவரையும், வீரபத்திரரையும் சிவனின் மூர்த்தி பேதங்களாக நூல்கள் கூறுகின்றன.

அஷ்டமியும் பைரவ வழிபாடும்

திதிகளில் அஷ்டமி நாளின் கடவுள் மஹாருத்ரன் ஆவார். ஆயுதம் எடுத்தல், அரண் அமைத்தல், போர் மற்றும் தற்காப்பு கலை கற்றல் ஆகியவை செய்ய உகந்ததாகப்  போற்றப்படுகின்றது. அஷ்டமி திதியில் தான் பராசக்தியான அம்பாள் ஆயுதம் தரித்த நாளாகும். இந்த நாளில் பரிகார பூஜைகள் செய்வது சிறப்பாகும்.

பைரவரை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் மிகச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. அஷ்டமி அன்று அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாகவும், அதனால்  அன்றைய தினம் பைரவரை வணங்குவோர் அனைத்து வளங்களையும் பெறுவதாக நம்பப்படுகிறது.

சனைச்சரனின் குரு பைரவர்

ஒருமுறை சனீஸ்வரரை அவரது சகோதரரும் சூரிய புத்திரருமான யமதர்மராஜன் மிகவும் அவமானப்படுத்திவிடுகிறார். இதனால் மனம் வருந்தி தன் தாய் சாயாதேவியிடம்  முறையிடுகிறார் சனி. “கலங்காதே. சிங்கத்துக்கு நேரம் கெட்டால் நரி கூட நீதிபதியாகும். இது இயற்கை. அதனால் நீ யமனை வெற்றி பெற பைரவரை வணங்கு. எல்லாம்  நன்மையாக அமையும்.” என்றாள். தாய் கூறியது போல் சனிபகவான் பைரவரை வணங்கினார். பைரவரின் ஆசியைப் பரிபூரணமாக பெற்ற பிறகு யமதர்மராஜானே சனி  பகவானை பார்த்து மரியாதை செலுத்தும் படியாக உயர்ந்தார். 

தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார். மேலும் பிரம்மா,  விஷ்ணு, சிவன் உட்பட மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி (ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி  அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார். அதன்படி சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டுச் சரணடைந்தால் அவர்களுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்யவேண்டும் என்பதாகும். இதன் பிறகு சில காலம்  கழித்து ஈஸ்வரரைப் பிடிக்க முயன்ற சனி, சனீஸ்வர பட்டமும் பெற்றார். பைரவரை தன் நண்பராகவும் குருவாகவும் மதித்தார் சனியின் வாத நோயை நீக்கியவரும்  பைரவரே. 

ஜோதிடத்தில் காலபைரவர்

ஜோதிடத்தில் வீரத்தினை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். மேலும் நெருப்பு, ஆயுதங்கள், ராணுவம், பாதுகாப்பு, போர் வீரர்கள், காவலர்கள், தீயணைப்பு துறை  ஆகியவற்றின் காரகரும் செவ்வாய் ஆகும். சாகசம் செய்பவர்கள், சாதனையாளர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிடத்தில் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாகத் திகழும் செவ்வாய் கால புருஷனுக்கு லக்னாதிபதியாகவும் ஆயுள் பாவமான அஷ்டமாதிபதியாகவும்  விளங்குகிறார். காலபுருஷனும் கால பைரவரும் ஒன்றே என்கிறது ஜோதிட சாஸ்திரம்.  சிவனின் ருத்ர ரூபமான கால பைரவரும் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்  என்பது இதனால் புலனாகிறது.

கால புருஷனுக்கு எட்டாம் பாவமான விருச்சிகம் ஆயுள், மறைந்திருக்கும் எதிரி, பரம்பரை நோய் ஆகியவற்றைக் குறிக்கும். நீர் ராசியான விருச்சிகம் விஷ ஜெந்துகள்  நிறைந்த கடலை குறிப்பதால் இது மருத்துவம், மருந்துகள், விஷம், ரத்தத்தில் கண்டுபிடிக்க முடியாத வியாதிகள்,  புற்றுநோய் போன்ற எளிதில் கண்டுபிடிக்க முடியாத  நோய்களை குறிக்குமிடமாகும்.  கால பைரவ மூர்த்தி காலனை வென்றவர். மேலும் ஜோதிடத்தில் ஆயுள் காரகர் எனும் சனைஸ்வர பகவானுக்கே குருவானதால்  பைரவரை வணங்குவோர்க்கு எம பயம் இருக்காது. மேலும் காலபைரவர் நாகபரணம் பூண்டு விளங்குவதால் அவரை வணங்குவோர்களுக்கு விஷ ஜெந்துகள் மற்றும்  நோய்களால் உபாதைகள் ஏற்படாது.

காலபுருஷ தத்துவம்

ஜோதிட சாஸ்திரப்படி மிகப்பெரிய பங்கு வகிப்பது காலப்புருஷ தத்துவம் ஆகும். நாம் முன் பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களே இந்தப் பிறவியில் நாம் அடையும்  நன்மை தீமைகளுக்கு காரணம். நான் கடந்த பிறவிகளில் யாருக்கு எந்த விதத்தில் பாவங்களையோ, இல்லை புண்ணியங்களையோ செய்தோம், அதன் வாயிலாக இந்த  பிறவியில் நாம் அந்த வினைப்பயனை எவ்விதத்தில் அனுபவிக்கப் போகிறோம் என்பதனை நமக்கு ஜோதிடத்தில் நமக்கு தெள்ளத் தெளிவாக கண்ணாடி போல காட்டுவது  காலப்புருஷ தத்துவம் ஆகும்.

கால புருஷ தத்துவம் என்பது ஜோதிட கலையில் பொதுவான ராசி அமைப்பைப் பற்றி சொல்வது, இதன்படி மேஷம் முதல் வீடாகவும், மீனம் 12-ம் வீடாகவும் அமையும், சுய  ஜாதக அமைப்பிற்குப் பலன் காணும்பொழுது, இந்த காலபுருஷ தத்துவ ராசிகளுடன் தொடர்புப்படுத்தி பலன் காண வேண்டும் அப்பொழுதுதான் பலன் 100 சதவிகிதம் சரியாக  இருக்கும்.

காலபுருஷனும் கால பைரவரும்

சிவ ஸ்வருபமான கால பைரவரை ”மஹா கால’ என்றும், ‘காலாக்னீ ருத்ராய’  என்றும் ஸ்ரீ ருத்ரம் எனும் மந்திரம் போற்றுகிறது. அதாவது பைரவ மூர்த்தியே மாபெரும்  காலம், இறுதி நேரத்தில் எல்லோரையும் விழுங்குபவர், காலம் என்னும் தீயில் அனைத்தும் கருகி சாம்பல் ஆகும். அவரது அருளால் மீண்டும் மறுசுழற்சியில் ஜீவன்  உருவாகிறது. அதாவது கால பைரவர் குணத்தையும் காலத்தையும் கடந்தவர். அவர் காலத்திற்கு கட்டுப்படாத தன்மையால் அவரை கால பைரவர் என வேதம்  போற்றுகிறது.

12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே. தலையில் மேஷ ராசியும், வாய்ப்  பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப்பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் விருச்சிகமும்,   தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.

கால புருஷ சக்கரம்

பூமி 360 சுழற்சி பாகையில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனைச் சுற்றி வருவதால், ஜோதிடம் பற்றிய அனைத்து முக்கிய விதிகளும் பூமியின் சுழற்சியால்  உருவாகும் 'கால புருஷ சக்கரம்' என்ற தத்துவம் கொண்டு வரையறுக்கப்பட்டது. இந்த கால புருஷ சக்கரம் என்பது பூமி சுற்றி வரும் வட்டப்பாதையில் இருக்கும் நட்சத்திர  கூட்டங்களைக் கொண்டு வரையறுக்கப்பட்டது. நட்சத்திர கூட்டங்களை 12 ராசி மண்டலங்களாகப் பிரித்து அதில் சஞ்சரிக்கும் கிரகங்களைக் கொண்டு ஜோதிட ஆய்வுகள்  மேற்கொள்ளப்பட்டது.

புதன் கிழமை தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் எடுத்து மகாதேவர் என்கிற சிவபெருமான் பூமிக்கு வந்தார். இவரை வணங்கி தனக்கு அருளும், ஆசியும்  வேண்டும் என்று ஆயுளை அழிவில்லா பொருளை, ஆன்ம சாந்தியை, தரும் சனி தேவர் பணிந்தார். ஜோதிடத்தில் சனியும் புதனும் நண்பர்கள் என்றும் புதன்கிழமை வரும்  அஷ்டமி அன்று செய்யும் காரியங்கள் அனைத்தும் மேன்மை தரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஜாதகத்தில் செவ்வாயின் நக்ஷத்திரங்கள் புதனின் வீடுகளிலும் சனியின் வீடுகளிலும் வருவது குறிப்பிடத்தக்கது. மிதுனம் கால புருஷனுக்கு மூன்றாம் பாவமாகும்.  மூன்றாம் பாவம் என்பது தைரியம் மற்றும் செய்யும் முயற்சியினை குறிக்குமிடமாகும். மூன்றாம் பாவம் என்பது பாவாத்பாவபடி எட்டுக்கு எட்டாமிடமாகும். எனவே  மூன்றாம் பாவம் என்பது தீவிரமான பிரச்னைகளை குறிக்குமிடமாகும். புதனின் மற்றோரு வீடான கன்னி கால புருஷனுக்கு ஆறாம் பாவமாக வருகிறது. ஆறாம் பாவம்  என்பது நோய், கடன், சத்ரு ஆகியவற்றுக்கு குறிக்குமிடமாகும். 

நான்கு வேதங்களும் நாய் உருவில் வாகனமாகப் பைரவருக்கு அமைந்திருப்பதால் கல்வியில் ஏற்படும் தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத் தருபவர்  என்பது நம்பிக்கை. செவ்வாயின் காரகத்தை தன்னுள்ளே கொண்ட பைரவர் சிவபெருமானின் அம்சம் மற்றும் ஸ்வரூபம் என்பதால் சூரியன் மற்றும் தக்‌ஷிணாமூர்த்தியின்  காரகத்தையும் கொண்டிருக்கின்றார்.

ஜோதிடத்தில் ஆறு, எட்டு, பன்னிரண்டாம் பாவங்கள் வலுத்து அதனால் நோய், கடன் தொல்லைகள், எதிரிகள், வழக்குகள் போன்றவற்றால் மீளமுடியாத பிரச்னைகளை  சந்தித்துவருபவர்கள் ஸ்ரீ பைரவ மூர்த்தியை வழிபடுவது, கால பைரவாஷ்டகம் பாராயணம் செய்வது, சொர்ணாகர்ஷன பைரவ ஹோமம் செய்வது போன்றவை சிறந்த  பயனளிக்கும். மேலும் புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய் உடையவர்கள் ஸ்ரீ காலபைரவரை வணங்கி வருவதால் நோய் நீங்கி மரண பயம் போகும்.

ஜோதிடத்தில் ஹஸ்த நக்ஷத்திரம்

27 நட்சத்திரங்களில் பதிமூன்றாவதாக வரும் நட்சத்திரம் ஹஸ்தம் ஆகும். இது கால புருஷ இராசியான மேஷத்திற்கு ஆறாம் இராசி மற்றும் புதனின் ஆட்சி வீடாகிய  கன்னி இராசியில் இடம் பெறும் நட்சத்திரமாகும்.இதன் நக்ஷத்திராதிபதி புத  பகவான் ஆவார். ஹஸ்த நக்ஷத்திரத்தின் அதிதேவதை ஆதித்தன் என நக்ஷத்திர  சிந்தாமனியும் சாஸ்தா (சாத்தன்) என வருஷாதி நூல்களும் ஸவிதா தேவதை என நக்ஷத்திர சூக்தமும் கூறுகிறது.  

புதனின் ஆதிக்கம் பெற்ற ஹஸ்த நட்சத்திரம் வானத்தில் ஒரு கை (அபய ஹஸ்தம்) போல் காட்சி அளிக்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் இனிமையாகப்  பேசுவார்கள். எல்லோராலும் பாராட்டப்பெறுவார்கள். எல்லோரையும் நேசிப்பார்கள். பொதுவாக புதன் கலைகளைக் குறிக்கும் கிரகமாகும். இந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள்  கோலம் மற்றும் கைவினை கலைஞர்களாகவும் விளங்குவார்கள். இவரை அண்டி வந்தோரை ஆதரிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தன் கையே தனக்கு  உதவி எனும் கருத்தை உணர்ந்து செயல்படுவார்கள்.

திருப்பம் தரும் திருப்பத்தூர் யோக பைரவர்

கொள்ளையனாக இருந்த வால்மீகி, தன் தவற்றை உணர்ந்து சிவபெருமானை நினைத்து பைரவர் இருக்கும் இடத்தில் தவம் செய்தார். பல வருடங்களாக தவம் செய்ததால்  வால்மீகி முனிவர் உடலைக் கரையான் புற்று கட்டியது. இனியும் வால்மீகியை சோதித்து அமைதியாக இருப்பது நன்மையல்ல என்று ஈசன் கருதி வால்மீகிக்கு நேரில் காட்சி  தந்து, “வால்மீகி” என்று முதலில் சிவபெருமான்தான் அவருக்குப் பெயர் வைத்து அழைத்தார். சிவனின் குரல் கேட்டு வால்மீகி முனிவர் புற்றை உடைத்துக் கொண்டு வெளியே  வந்தார். “வால்மீகி நீ புற்றில் இருந்து வந்ததால் உன் பெருமை நிலைத்து இருக்க, இந்த இடம் புத்தூர் என்ற பெயர் பெறட்டும்.” என்றார் சிவபெருமான். திருபுத்தூர் என்பதே  இன்று திருப்பத்தூர் என்று நாம் அழைக்கிறோம். மேலும் வால்மீகி முனிவருக்கு வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியதால் திருப்பத்தூர் என்றானதாகவும் கூறுவார்கள்.

இத்தலத்திலுள்ள பைரவர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். திருப்பத்தூர் திருத்தளிநாதர் திருக்கோவில் ஆலய பைரவர் பெயரில் வைரவன் கோவில் என்றே இந்த  ஆலயம் அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தின் இரண்டாவது பிரகாரத்தில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் ஸ்ரீயோகபைரவர் தரிசனம் தருகிறார். குழந்தை வடிவில்,  வலக்கரத்தில் பழம், இடக்கரம் தொடையின் மீது வைத்துக்கொண்டு கோரைப் பற்களுடன் காட்சி தருகிறார்.உலகில் தோன்றிய முதல் பைரவ மூர்த்தம் இதுதான் என  இவ்வாலயக் குறிப்பு கூறுகின்றது. இங்குள்ள பைரவர் "ஆதி பைரவர்" என்றே அழைக்கப்படுகின்றார். பொதுவாக பைரவர் கையில் சூலத்துடனும், நாய் வாகனத்துடனும்,  நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பதே மரபு. ஆனால் இங்குள்ள பைரவர் அமர்ந்த நிலையில், யோக நிஷ்டையில் காணப்படுகின்றார். அதனால் "யோக பைரவர்" என்று  அழைக்கப்படுகின்றார்.

இந்திரன் மகன் ஜெயந்தனைக் காப்பதற்காக இவர் திரு அவதாரம் செய்ததாகக் கோயில் குறிப்பு கூறுகின்றது. இந்திரன் மகன் ஜெயந்தன் இத்தலத்தில் இறைவனை  வழிபட்டுப் பேறடைந்தான். ஆதலின் அவன் உருவம் சந்நிதிக்கு வெளியில் வாயிலில் உள்ளது. சஷ்டி, அஷ்டமி நாட்களில் பைரவருக்கு சிறப்பு ஆராதனை, அபிஷேகம்,  வழிபாடு, யாகங்கள் செய்யப்படுகின்றன. பைரவருக்குப் புனுகு சார்த்தப்பட்டு, வடைமாலை அணிவிக்கப் பெற்று, அவருக்கு மிகவும் உகந்ததான சம்பா சாதம் தினம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இவரது வழிபாட்டில் கலந்து கொண்டாலோ அல்லது இங்கு வந்து நியமத்தோடு வேண்டிக் கொண்டாலோ சத்ரு பயம், ஏவல், பில்லி,  சூனியம் போன்ற தொல்லைகள், வியாபாரக் கஷ்ட நஷ்டங்கள், வேலை பற்றிய பிரச்னைகள் நீங்குவதாக நம்பிக்கை. அர்த்தசாம வழிபாட்டிற்காகப் பூஜை மணியடித்து  விட்டால் குருக்கள், பரிசாரகர், நைவேத்தியம் கொண்டு செல்வோர் ஆகிய மூவர் தவிர அதன் பின் யாரும் பைரவர் இருக்கும் பகுதிக்குச் செல்லக் கூடாது என்பது தொன்று  தொட்டுக் கடைப்பிடிக்கப்படும் ஐதீகம். பைரவர் அவ்வளவு உக்கிரமானவராகக் கருதப்படுகிறார். உக்கிரத்தைத் தணிக்க பைரவரைச் சங்கிலியால் பிணைத்து வைத்தலும் உண்டு.

தேய்பிறை, அஷ்டமி திதிகளில் யோக பைரவருக்கு வடைமாலை அணிவித்தால், வேண்டியது உடனே நடக்கும். சத்ரு தொல்லையில் இருந்து விடுதலை அடைய யோக  பைரவரை வணங்கினால் நன்மை ஏற்படும். பில்லி சூனியம் கஷ்டங்கள் விலக விரோதிகளின் தொல்லையில் இருந்து விடுதலைப் பெறவும், திருமணம் நடக்கவும் இந்த  யோக பைரவரை வணங்கினால் எல்லாமே வெற்றியாக அமையும். பைரவருக்கு மிளகை ஒரு துணியில் கட்டி நல்லெண்ணெய்யில் நனைத்து வைத்து விளக்கு ஏற்றினால்  கஷ்டங்கள் விலகும். முயற்சிகளில் தோல்வியடைந்து அதனால் மனமுடைந்து நிற்பவர்கள் ஒவ்வொரு மாதமும் ஹஸ்த நக்ஷத்திர நாளில் திருப்பத்தூர் யோக  பைரவருக்கோ அல்லது உங்கள் ஊரில் சிவன் கோயிலில் உள்ள பைரவரையோ அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்கி வர முயற்சிகள் யாவும் கைமேல் பலன் தரும்  என்பது நிதர்சனம். முக்கியமாகப் பட்டய கணக்கராகும் முயற்சியில் தொடர்ந்து தோல்வியைத் தழுவுபவர்கள் ஹஸ்த நக்ஷத்திர நாளில் இவரை வணங்கிவர விரைவில்  தேர்வுகளில் வெற்றிபெறுவது நிச்சயம்.

இந்த சிவஸ்தலம் காரைக்குடியில் இருந்து கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும், சிவகங்கையில் இருந்து சுமார் 35 கி.மி. தொலைவிலும், மதுரையில் இருந்து சுமார் 65  கி.மி. தொலைவிலும் அமைந்துள்ளது. பேருந்து வசதிகள் மதுரை, காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களில் இருந்து திருப்புத்தூருக்கு உண்டு. அருகில் உள்ள ரயில்  நிலையம் காரைக்குடி.

பைரவ உபாசனை வீரம் அளிக்க வல்லது. தீராத நோய்களைத் தீர்க்கும். போர்முனையில் வெற்றியினைத் தேடித் தரும். எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம்  அளிக்க வல்லது. பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தை போக்கிக் காப்பவர் பைரவர். மனிதனின் நிம்மதியைப் பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும்  துன்பம் இவற்றை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com