அறிவியல் முறைப்படி பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றது. புரிதலுக்காகக் கூட நம் முன்னோர்கள் புராணத்தின் செய்தி வாயிலாக நமக்கு ராகு, கேது விழுங்குதல் செய்தியினைத் தந்திருக்கின்றார்கள். பஞ்சாங்க கணிப்பில் துல்லியமாக இத்தனை மணிக்குத் தொடங்கி, இத்தனை மணியில் நிறைவடைகின்றது என அறிவின் மூலமாகவே கணக்கிட்டுச் சொன்னவர்கள் நமது முன்னோர்கள் எனும் போது தலை வணங்குகின்றோம்.
கிரகண காலத்தில் புவியீர்ப்பு விசை அதிகமாக இருக்கும். எனவே அந்த நேரத்தில் உணவு உண்ணக்கூடாது என நமது பெரியவர்கள் சொல்லிவைத்தார்கள். காரணம் இந்த நேரத்தில் செரிமான சக்தி மிகவும் குறைவாக இருப்பதால் உடல்நலக்குறைவு ஏற்படும் என்பதாலேயே கிரகண காலத்தில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே உணவு உண்ண வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மேலும் அந்த நேரத்தில் நமது வீட்டிலுள்ள உணவுப் பொருட்களில் தர்ப்பைப் புல்லினைப் போட்டு வைக்க வேண்டும் எனக் கூறுவோம். காரணம் தர்ப்பைப் புல் ஒரு மின்கடத்தி (Electricity Conductor) ஆகும். அது வானவெளியில் உள்ள அசுத்தக் கதிர்களை உணவுப்பொருட்களில் புகவிடாமல் தடுக்கின்றது. அதனால் தான், நாம் அரிசி, பருப்பு, புளி, என வீட்டில் அன்றாடம் புழங்கும் பொருட்களிலும், அன்று சமைத்து மிச்சம் வைத்த பொருள்களிலும், அவ்வளவு ஏன் தண்ணீரிலும் கூட தர்ப்பைப் புல்லை போட்டு வைக்கிறோம்.
கிரகண காலத்தில் நம் இல்லத்திலும், ஆற்றங்கரையிலும் நீர்நிலைகளிலும் ஜபம் செய்வது சிறப்பானதாகும். காரணம் கிரகண காலத்தில் செய்யும் ஜபம் பல்லாயிரம் மடங்கு பலன் தருவதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் குளித்து, ஜபம் செய்வது, இறைவன் நாமங்களைச் சொல்வது, பஜனைப் பாடல்கள், பக்திப் பாடல்கள் பாடுவது போன்ற பயனுள்ள விஷயங்களில் ஈடுபட்டுப் பயன் பெறலாம்.