திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு வரும் 28-ம் தேதி தாராபிஷேகம் நடத்தப்படுகிறது.
கத்திரி வெயில் நேற்று தொடங்கியதையடுத்து அருணாசலேஸ்வரரின் திருமேனியைக் குளிர்விக்கும் வகையில், நேற்று முதல் இந்த அபிஷேகம் செய்யப்படுகிறது. இதையொட்டி தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுவாமி கருவறையில் தாரா பாத்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த தாராபாத்திரத்தில் வெற்றிவேர், சந்தனம், ஜவ்வாது உள்ளிட்ட வாசனை திரவியங்கள் போடப்பட்ட புனித நீர் துளி துளியாய் லிங்க திருமேனியில் விழுந்துகொண்டே இருக்கும் படி செய்துள்ளனர்.
இதனால், லிங்கத் திருமேனி குளிர்ச்சியடையும் என்று நம்பப்படுகிறது. அக்னி நட்சத்திரத்தின் நிறைவாக சிறப்பு யாகம் நடத்தப்பட உள்ளது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அருணாசலேஸ்வரர் கோயிலிலும் இதேப் போன்று தாரா பாத்திரம் பொருத்தப்பட்டது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் தாராபிஷேகம் நடைபெறுவதால் வழக்கமான வழிபாடுகள் மற்றும் தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிப்பதில் எந்த மாற்றமும் இல்லை எனக் கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.