புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உலகிலேயே மிகப்பெரும் பணக்காரர் ஆகனுமா? சுக்கிர வார சந்திர தரிசனம் பாருங்க!

இன்று பஞ்சாங்கத்தில் சந்திர தரிசன நாளாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது ஸ்ரீ விளம்பி ஆண்டின்..

News image
Updated On :9 நவம்பர் 2018, 9:00 am

இன்று பஞ்சாங்கத்தில் சந்திர தரிசன நாளாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது ஸ்ரீ விளம்பி ஆண்டின் துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தில் வரும் சந்திர தரிசனமாகும். மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் அதாவது கோதூளி லக்ன காலத்தில் தோன்றும் பிறையாகும்.

மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைத் தான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தல் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும். அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது  நம்பிக்கை.  

Story image

ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஆயிரம் மூன்றாம் பிறை, பார்த்தால் முக்தி எனச் சொல்லப்படுகிறது. "சந்த்ரமா மனஸோ ஜாத:" என்று புருஷ சூக்தம் போற்றும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவனே உடலுக்குக் காரகன். சரீர பலம், மனோ பலம் இரண்டுமே உலக வாழ்க்கையின் வெற்றிக்கு மூல பலம் ஆகும்.

சந்திரன் தட்சனிடம் பெற்ற சாபம்

ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர்.

Story image

தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறுபெற்றார்.

சுறுசுறுப்போடு அதேநேரம் சிறுகச் சிறுக வளர்ந்தால் முழுப்பலனையும் அடையமுடியும் என்னும் கருத்தை வலியுறுத்துகின்றது இந்தப் பிறை. இதை வைத்துத்தான் எண்பது வயது நிறைவுற்றவர்களை 'ஆயிரம் பிறை கண்டவர்' என்று அவருக்குச் சதாபிஷேகம் செய்து கொண்டாடுகின்றோம்.

சந்திரனின் அகந்தை

"தான் பெரியவன்" என்று அகந்தையோடு நினைப்பது தவறு. அது மிகப்பெரிய அழிவை உணர்த்தும் என்பதை உலகிற்கு உணர்த்தும் விதமாக சந்திரன் காணப்படுகின்றான். இதனால் தான் வளர்பிறையில் எந்தக் காரியம் தொடங்கினாலும் அந்தக் காரியம் வளம் பெறும் என்பது ஐதீகம்.

சந்திர தரிசனம்

சந்திரன் அமாவாசையை அடுத்து வரும் நாட்களில் வளர்பிறையாக உருவெடுக்கின்றான். இந்த நாளை சந்திரதரிசனம் என்று அழைக்கிறார்கள். இந்த சந்திர தரிசனம் பற்றி இந்து சாஸ்திரம் சொல்வதைப் பார்ப்போம். வானத்தில் சில நொடிகளே காட்சி தரும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனமே மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும். சிவபெருமான் தன் தலையில் மூன்றாம் பிறைச் சந்திரனையே சூடி “சந்திர மௌலீஸ்வரராக” காட்சி தருகின்றார். எனவே மூன்றாம் பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல. சாட்சாத் பரமேஸ்வரனின் ஒரு பகுதியே நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம்.

Story image

மூன்றாம் பிறைச்சந்திரனை நாம் வானத்தில் சற்று சிரமப்பட்டுத் தேடிக்கண்டுபிடித்து தரிசிக்கும் படியாக இருக்கும். மெல்லிய தங்கக் கம்பியில் செய்த மோதிரம் போல அழகாக வளைவாகக் காட்சி தரும்.

ஜனன லக்னத்தின்படி நல்ல பலன்களை ஒரு ஜாதகத்தில் காண முடியவில்லை எனில், சந்திரனை லக்னமாகக் கொண்டு பலன்களைச் சொல்ல வேண்டும் என்று விதி இருக்கிறது. இதையே ‘விதி கெட்டால் மதியைப் பாரு விதியை மதியால் வெல்லலாம் என்ற பழமொழி உணர்த்துகிறுது. யாராவது அறிவீனமான செயல்களை செய்துவிட்டால் "மதி கெட்டவனே" எனத் திட்டுவதை காணலாம். இதிலிருந்து ஒருவர் புத்திசாலியாக இருக்க சந்திரன் எவ்வளவு முக்கியம் என்பதை உணரலாம்.
 
ஜோதிடத்தில் சந்திர தரிசனம்

ஜாதகத்தில் சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய துதியை திதியில் விரதம் இருக்கவேண்டும். விரதம் இருந்த பின்னர் மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சந்திரன் நல்ல நிலைமையில் ஜாதகத்தில் இருந்தால் கவலையில்லை. பலம் குன்றிய சந்திரன், கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் இருக்கும் அமைப்பு, சந்திரன் நீசமாக உள்ள‌ அமைப்பு இருப்பவர்கள் சந்திர வழிபாடு அவசியம் செய்ய வேண்டும். . 
 

Story image

சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம். மேலும் ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர்கள், சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் இவர்களும் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.

ஆயுள் வளர்க்கும் சந்திர தரிசனம்

சந்திரனுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் அமையாது. எனவே ஜாதகத்தில் சந்திரன் 6/8/12 வீடுகளில் மறைவு பெற்றோ, விருச்சிகத்தில் நீசம் பெற்றோ அல்லது சனி/ராகு/கேது போன்ற அசுப கிரஹங்களுடன் சேர்ந்தோ இருந்தால் மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுள் தோஷம் போக்கி  ஆயுளை விருத்தியாக்கும்.

Story image

திங்கட்கிழமையுடன் மூன்றாம் பிறை வரும்போது, சோமவாரம் என்பார்கள் திங்கட்கிழமையை அந்த சோமவாரத்தில் வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும். அதனால் மூன்றாம் பிறை என்பது ஒரு தெய்வீகமான பிறை. அதனைப் பார்த்தாலே மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கக் கூடியது. அதிலும் ஆயுள்காரகரான சனி பகவானின் நாளில் சந்திர தரிசனம் செய்தால் ஆயுள் விருத்தி ஏற்படுவதோடு புணர்ப்பு தோஷம் போக்கும்.

செல்வச் செழிப்பு சேரும்

சந்திரனை ராஜ கிரஹம் என்று கூறுவார்கள். மேலும் செல்வங்களை தரும் மஹா லக்‌ஷ்மியை சந்திர சகோதரி எனக் கூறுவார்கள். எனவே சந்திர தரிசனம் செய்பவர்களுக்கு சந்திர சகோதரியான மகாலக்‌ஷ்மியின் அருள் கிட்டி அனைத்துச் செல்வங்களையும் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும்.

சந்திராஷ்டம தோஷம் போக்கும்

Story image

ஒருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கோ சந்திரனுக்கோ 6/8/12 ஆகிய இடங்களில் கோசராக சந்திரன் வரும்போது பலவித தீமைகளை ஏற்படுத்துகிறது. வளர்பிறை காட்டிலும் தேய்பிறையில் சந்திர மறைவு  தன்மை அதிக பலம் உள்ளது. சந்திரனை மனநிலைக்கு உரியவன் (மனோகாரகன்) என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மறைவுஸ்தானத்தில் சந்திரன் நிற்கும் காலத்தில் மனதில் தெளிவின்மையால் மன உளைச்சல் ஏற்பட்டு அதன் காரணமாக கோபப்படுதல், பொறுமை இன்மையால் எரிச்சல், அடுத்தவரிடத்தில் தேவையற்ற கோபம், இல்லறத்தில் சண்டை போன்ற உணர்ச்சி சார்ந்த பிழறல்கள் நிகழும். இதுபோன்ற அமைப்புடையவர்கள் சந்திர தரிசனம் செய்து வர சந்திராஷ்டமம் மற்றும் சந்திரனின் மறைவுத்தன்மையால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

பார்வை தரும் மூன்றாம் பிறை

Story image

ஜோதிடத்தில் இரண்டாம் பாவம் வலது கண்ணையும் பன்னிரண்டாம் பாவம் இடது கண்ணையும் குறிக்கும் பாவங்களாகும். மேலும், சூரியனை வலது கண்ணிற்கு காரகராகவும் சந்திரனை இடது கண்ணிற்கு காரகராகவும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மேஷத்தை லக்கினமாகக் கொண்ட கால புருஷ ராசிக்கு லக்னம் மற்றும் முகத்தைக் குறிக்கும். மேஷத்தில் சந்திரன் உச்ச சூரியனோடு நின்று மூன்றாம் பிறை பார்க்கும் போது பார்வை கோளாறுகள் நீங்கும். பார்வை மற்றும் லென்ஸை குறிக்கும் சுக்கிரனின் இணைவும், குருவின் பார்வையும் எந்தவிதமான பார்வை கோளாறுகளையும் நிவர்த்தி செய்யும் என்பது நிதர்சனம். இன்றைய கோசாரத்தில் பார்வை தரும் கிரகங்களான சூரியனும் சந்திரனும் முறையே தங்கள் நீச வீடுகளான துலாம் மற்றும் விருச்சிகத்தில் சுக்கிரன் மற்றும் குருவோடு இணைவுபெற்று நீச பங்க ராஜயோக அமைப்பைப் பெற்று மேஷம் மற்றும் ரிஷப ராசிகளைப் பார்ப்பது பார்வை கோளாறுகளை தீர்க்கும் என்பதில் ஐயமில்லை.

குருவருளும் திருவருளும் சேர்க்கும்

நாளை அக்ஷய திருதியை வரும் நிலையில் இன்று ராஜ கிரஹங்களான சூரியனும் சந்திரனும் இனைந்து நின்றும் தன்காரகனான குருவின் பார்வை பெற்று மஹாலக்ஷ்மியின் அம்சமான பண காரகனான சுக்கிரனின் சேர்க்கை பெற்று நிற்கும் நிலையில் சந்திர தரிசனம் செய்வது ராஜ வாழ்க்கை தந்து வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் இன்றைய கோசாரத்தில் ராஜ கிரகங்களான சூரியனும் சந்திரனும் அவர்களின் நீச வீட்டில்  தன காரக குருவோடும் செல்வச் செழிப்பை ஏற்படுத்தும் சுக்கிரனோடும் இணைவு பெற்று நிற்கின்றனர்.

Story image

பொதுவாகவே ஒருவர் ஜாதகத்தில் நீச கிரஹங்களே செல்வச் செழிப்பை ஏற்படுத்துகின்றது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உலகின் மிகப்பெரும் பணக்காரரான பில் கேட்ஸின் ஜாதகத்தில் சூரியன் நீசம் அடைந்திருப்பதும், பங்கு வர்த்தகத்தின் தந்தை என்று போற்றப்படும் வாரன் பஃப்பட்டின் ஜாதகத்தில் சந்திரன் நீசமடைந்திருப்பதும் மிகச்சிறந்த உதாரணங்களாகும்.

அனைத்து மதங்களும் போற்றும் மூன்றாம் பிறை

மூன்றாம் பிறையின் சிறப்பை இன்னும் சொல்வதென்றால் அனைத்து மதங்களுமே இதை ஏற்றுக்கொண்டுள்ளன. அதாவது இஸ்லாம் மத‌ம், ஜைன‌ம், கிறித்தவம், இந்து மத‌ம் என்று எல்லா மதங்களும் மூன்றாம்பிறை என்பது தெய்வீக அம்சம் பொருந்தியது எனத் தெரிவிக்கிறது. அந்த பிறையைக் கண்டு வணங்குவது ஆயுளை விருத்தி செய்யும். செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும்.

மூன்றாம் பிறைச்சந்திரனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரிசிப்பதால் மனதில் உள்ள கல்மிஷங்கள், பாபங்கள் குழப்பங்கள் விலகி மன நிம்மதியும், தெளிவான ஞானமும் ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.