காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

2018-ம் ஆண்டு குருப்பெயர்ச்சி ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களைத் தினமணி ஜோதிடர் சோ.சந்திரசேகரன...

News image
Updated On :25 செப்டம்பர் 2018, 9:05 am

தினமணி

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களைத் தினமணி ஜோதிடர் சோ.சந்திரசேகரன் அவர்கள் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 

ரிஷபம் (கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 பாதங்கள்)

ராசியதிபதி சுக்கிரன் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதம் 17-ம் தேதி வரை 6-ம் வீடான துலாத்தில் சஞ்சாரம் செய்கிறார். இதன் காரணமாக உடல்நிலையில் பாதிப்புக்கள் உண்டாகும். ஆகவே மருத்துவரின் உதவியை நாடி உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வது நல்லது. பங்குனி, சித்திரை மாதங்களில் இந்த ஜாதகருக்கு பொருளாதார நிலை நன்றாக இருப்பதோடு, சுற்றம், மற்றும் நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். 

பொதுவாகவே இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பீர்கள். அனாவசியச் செலவைக் குறைப்பதில் கண்ணாயிருப்பீர்கள். குழந்தைப்பேற்றை எதிர்பார்ப்போருக்கு அது தாமதமாவதாகவே தெரிகிறது. குடும்பஸ்தானமான 2-ம் இடத்திற்கும், புத்திர ஸ்தானமான 5-ம் இடத்திற்கும் சனியின் பார்வை இருப்பதால் புத்திர பாக்கியம் தாமதமாகிறது. ஆகவே சனிபகவானுக்கு தக்க பரிகாரம் செய்துகொள்வது நல்லது.

அதேபோல் உத்தியோகம் தேடும் வேட்டையில் இருப்போருக்கும் பதவி உயர்வை எதிர்பார்ப்போருக்கும் அதில் தாமதமே ஏற்படும். இந்த தாமதத்தைத் தடுக்க சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் விளக்கு ஏற்றிவரவும். காகத்திற்கு எள் சாதம் இடவும்.

சொந்த வீடு, மனை வாங்க எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் நேரம் எல்லோருக்கும் கனிந்து வருவதில்லை. இந்த ராசிக்காரர்களுக்கு ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, சித்திரை, ஆவணி, புரட்டாசி மாதங்கள் வீடு வாங்கவோ, அல்லது மனை வாங்கவோ அனுகூலமான மாதங்கள். அப்போது முயற்சித்தால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

குடும்பஸ்தானத்திற்கு இந்த ஆண்டு முழுவதும் சனியின் பார்வை இருப்பதால் அமைதி சற்று குறைவாகவே காணப்படும். இளைய சகோதரத்துடனான உறவைப் பார்க்கும்போது மாசி, பங்குனி, ஆடி மாதங்கள் அந்த உறவில் சுமுகமான நிலை காணப்படவில்லை. மாறாக பிரச்னைகளே காணப்படுகிறது. இந்த ராசிக்கு 7-ல் குரு இருப்பதால் இந்த ஆண்டில் திருமணம் ஆகாதோருக்குத் திருமணம் ஆக கிரகங்களின் நிலை அனுகூலமாக இருக்கிறது. முயற்சி செய்யுங்கள். முயற்சி திருவினையாக்கும். 

அதேபோல் இப்போதெல்லாம் வாகனம் வாங்க எல்லோருக்கும் ஆசை இருக்கிறது. அப்படியானால் இந்த ராசிக்காரர் எப்போது வாகனம் வாங்குவர்? ஐப்பசி, பங்குனி, ஆடி, ஆவணி மாதங்கள் மிக அனுகூலமாக இருப்பதால் அப்போது முயற்சி செய்யவும். உங்கள் முயற்சி பலிதமாகும். 

வியாபாரத்திலிருப்போருக்கு: ஜாதகத்தில் 7-ம் இடம் என்பது வியாபாரத்தைக் குறிக்கிறது. இந்த ஆண்டு முழுவதும் அதில் லாபாதிபதியான குரு இருக்கிறார். ஆக வியாபாரம் குறைவில்லாமல் இருக்கும்.  அதே சமயத்தில் குரு 8-ம் வீட்டிற்கும் அதிபதியாகின்றார். ஆக சில மாதங்களில் வியாபாரத்தில் தொய்வு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆக வியாபாரிகள் எச்சரிக்கையுடன் தம் தொழிலைச் செய்வது நல்லது. 

உத்தியோகத்திலிருப்போருக்கு: நாம் ஏற்கனவே எழுதியதுபோல் இந்த ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் தேக்க நிலையும், மேலதிகாரிகளின் ஆதரவின்மையும் காணப்படும். ஏனெனில் உத்தியோகஸ்தானமான 6-ம் இடத்திற்கும், ஜீவனஸ்தானமான் 10-ம் இடத்திற்கும் சனியின் பார்வை இருப்பதால் இத்தகைய நிலை நீடிக்கும். 

கலைஞர்களுக்கு: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி,, சித்திரை,ஆடி,  ஆகிய மாதங்கள் கலைஞர்களுக்கு ஆதரவாகத் தெரிகிறது.  

பரிகாரம்: பிரதி சனிதோறும் சனிபகவானை வணங்கிவந்தால் தடைகள் ஓரளவு நீங்கும்.

*****

மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்களைப் படிக்க நாளை வரை காத்திருங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.