அத்திவரதர் பெருவிழாவையொட்டி 32-வது நாளான இன்று முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள அத்திவரதர் ஜூலை 1-ம் தேதியிலிருந்து தொடர்ந்து 31 நாள்களாக சயனக்கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். இன்று முதல் தொடர்ந்து ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நின்ற கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.
அத்திவரதர் பெருவிழாவின் 32-வது நாளான இன்று வெண் பட்டில் வெளிர் நீல நிறப் சரிகையில் மலர் மாலைகள் அணிந்துள்ளார். கடந்த 31 நாட்களில் இதுவரை சுமார் 45 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துச் சென்றுள்ளனர்.
அத்திவரதரை நிற்கவைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. எனவே, ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் வைக்க முடிவுசெய்து, அதன்படி நேற்று இரவிலிருந்து விடியற்காலை வரை அத்திவரதரை நிற்க வைப்பதற்கான தீவிர ஏற்பாடுகளைக் கோயில் அர்ச்சகர்கள் செய்தனர். அதன்பின்பு, இன்று அதிகாலை 5.20 மணியிலிருந்து அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நின்ற கோலத்தின் முதல் நாள் என்பதால் அத்திவரதரை தரிசனம் செய்ய நள்ளிரவு முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, இன்று காலை 5.00 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இன்று காலை 10 மணி முதல் பொதுதரிசனப் பகுதி வெறிச்சோடி காணப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பக்தர்களின் கூட்டம் குறைவாக உள்ளதால் ஒரு மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிப் பெண்கள் நேரடியாகச் சென்று தரிசிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நின்ற கோலத்தைக் காணத் திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 2000 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.