சபரிமலை ஐயப்பன் கோவிலில், வரும் 15-ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளதை முன்னிட்டு, நேற்று மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும். நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, கடந்த மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது.
பிரசித்தி பெற்ற மண்டல பூஜை, கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. அப்போது, ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, வழக்கமான பூஜை அனுஷ்டானங்களுடன் நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில், மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, நேற்று மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. தீபாராதனை அடுத்து, 18-ம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்பட்டது.
வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி மகர விளக்கு நாளாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளனர். அன்று நடைபெறும் மகர விளக்கு பூஜையின் போது, பந்தளம் கொட்டாரத்தில் இருந்து கொண்டு வரப்படும் திருவாபரணங்கள், ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெறும் என்று கேரள தேவஸ்வம்போர்டு அறிவித்துள்ளது.
மகர விளக்கன்று பொன்னம்பலமேட்டில் தெரியும் மகர ஜோதியைப் பார்க்க இந்த ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மகர விளக்கு பூஜைக்காலம் முடியும் நாளான ஜனவரி 20-ம் தேதி மாலை 7 மணிக்கு நடை அடைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.