உங்களுக்குள் இருக்கும் குபேர சக்தியைத் தூண்டும் வழிமுறைகள்!

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னுக்கு வர முந்தியடித்து ஓட்டம் ஓட என்ன காரணம். எதாவது ஒன்றை..
குபேர முத்திரை
குபேர முத்திரை

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் முன்னுக்கு வர முந்தியடித்து ஓட்டம் ஓட என்ன காரணம். எதாவது ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற நினைப்பு தான் அது ஓட்டமாகத் திகழ்கிறது. சாதிப்பது என்பது புகழுக்காக அல்லது பணத்திற்காகச் செல்லும் பாதை ஆகும். நாம் இன்று எதிர்பார்ப்பது money money என்ற இலக்கு.    

என்னை வந்து பார்க்கும் முக்கால் பங்கு ஜாதகர் சொல்லுவது எவ்வளவுதான் உழைத்து சம்பாதித்தாலும் கையில் தங்கமாட்டேன்றது.. ஒன்று வீட்டில் ஏதாவது செலவு வந்துடுது இல்லையென்றால் உற்றார் உறவினர்கள் ஏமாற்றி விடுகிறார்கள்.. இவர்களுக்கு எந்தவித பூர்விக சொத்தும் இருக்காது அதனால் இவர்கள் அத்தியாவசிய வாழ்வாதாரத்திற்காக அந்த பணத்தை ஈட்ட நாயக! பேயாக ஓய்வின்றி உழைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இது அவன் தலையில் அதாவது பிறப்பில் பிரம்மன் ஜாதக வடிவில் எழுதியது என்று கூறி அதனை அப்படியே விட்டுவிடவும் கூடாது. ஜாதகத்தில் சூட்சமாகப் பார்த்தோமேயானால் தனத்திற்கான அதிபதி குரு, கர்மத்திற்கும் உழைப்புக்கும் உரிய சனி சேரவேண்டும். அதோடு ஆடம்பர சேர்க்கைக்கான சுக்கிரன் இவர்கள் மூவரும் ஒரு ஜாதகத்தில் வலுத்து இருந்தால் அவர்கள் கோடீஸ்வரர்தான். ஆனால், இவர்கள் மூவரும் சேருவது கொஞ்சம் கடினம். குரு, சுக்கிரன் என்பவர்கள் பணம் மற்றும் வாகனத்தின் அதிபதிகள் இவர்களால் செல்வம் பெருகும். ஆனால் இவர்கள் நட்பு கிரகம் அல்ல. ராஜ கிரகங்களான குருவும் சனியும் ஒருவிதத்தில் பொருட்செல்வம் ஈட்டினாலும் அதற்கேற்ப கொஞ்ச துன்பம் உருவாகும். அவரவர் தசா புத்திக்கு ஏற்ப மாறுபடும். ஜாதக அலங்காரத்தில் இந்த குரு சனி; குரு சுக்கிரன் தசா புத்தியில் சொல்லப்படும் கருத்து இன்னும் நன்றாகப் புரியும்.

1.பொருந்திய குர்வில் காரி
புகழ்திங்கள்  இருப்பான் 
வருந்திய நாள்ஈ ராரும்
வாகனம் பொருளும் வாய்க்கும் 
திருந்திய கொள்கை வாதம் 
சேயிழை தனக்குத் துன்பம் 
இறந்திடம் வெற்றி யில்லை
இடர்வந்து நீங்கும் தானே!

2. மருவிய குருவில் வெள்ளி
மாதமு ப்பத்தி ரண்டு    
நிரைப்பரி கட்டு வர்க்கம் 
நிலைமையாம்   பொருளும் சேரும் 
புரையுள கன்னி மாதம்
பூமியும் போகம் உண்டாம் 
குரைகடல் சுற்றத் தோடு 
குணமுடன் வாழ்வார் தாமே ! 

 - (ஜாதக அலங்காரம்)

இவற்றின் விளக்கம் சுருக்கமாகப் பார்ப்போம்.

முதல் பாட்டில் குரு திசையில் சனி புத்தி காலகட்டத்தில் வாகனங்கள், செல்வ வசதிகள் சேரும். ஆனால் வெற்றிவாகை சூடமுடியாது, வாதை நோய் வரும் மற்றும்  மனைவிக்கு இன்னல் உண்டு - இவ்வாறெல்லாம் துன்பங்கள் வந்து அகலப்படும். 

இரண்டாவது பாட்டில் குரு திசையில் சுக்கிர புத்தி காலகட்டத்தில் வாகனங்கள், கால்நடை செல்வங்கள், பொருட் செல்வம் சேரும் முக்கியமாக புரட்டாசியில் பூமி லாபமும்; பெண் போகமும் வாய்க்கும் சமுத்திரம் போன்ற உற்றார் உறவினரோடு சேர்ந்து சௌக்கியமாக வாழ்வான் என்று கூறப்படுகிறது. 

ஜோதிடத்தில் பிறப்பு ஜாதகத்தில் உள்ள குருவை கோச்சார சனி சேரும் மற்றும் பார்க்கும் காலம் - புதிய தொழில் மற்றும் உத்தியோக மாற்றம் அல்லது ஊதிய உயர்வு ஏற்படும். தற்பொழுது குரு, சனி சேர்க்கை கோட்சாரத்தில் நிகழப்போகிறது. இக்கால கட்டத்தில் நிறைய தொழில் துறையில் ஊதிய உயர்வு நிகழும். ஆனால் ஊதியம் அதிகமாக அல்லது கொஞ்சமாக என்பது அவரவர் பிறப்பு ஜாதக அமைப்புக்கேற்ப நிகழும். இந்தவித சேர்க்கை நிகழும் போதெல்லாம் ஒருவித பொருளாதார மாற்றங்கள் ஏற்படும். முக்கியமாக நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்பது உண்மை. குரு சனி ஒருவிதத்தில் பகை விகிதாச்சாரத்தில் ஜீவா கர்மாவாகவும் மற்றும் தோஷத்தை உருவாக்கும் தன்மை கொண்டது. ஒருவன் குபேரனாக வேண்டுமானால் என்ன என்ன முக்கிய வழிகள் என்று ஒன்றொன்றாகப் பார்ப்போம். 

ஜாதகத்தில் குரு, சனி, சுக்கிரன் சேர்வது என்பது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால், இதற்கென்று குபேர சக்தியை அதிகப்படுத்திக்கொள்ள சில வாய்ப்புகள் உள்ளது. சரி அய்யா எனக்கு இந்த அமைப்பு இல்லை, எனக்கு குரு உச்சமாக உள்ளது ஆனால் மற்றவை கொஞ்சம் பலமின்றி இருக்கிறது என்றால் சனி மற்றும் சுக்கிரனின் ஒளியை உங்களுக்கு அதிகப்படுத்திக்கொள்ளுங்கள். அதாவது சனிக்கிழமைகளில் சிவன் மற்றும் சனீஸ்வர வழிபாடு அதோடு அடிமட்ட ஏழைகளுக்கு அனாதை இல்லத்திற்கு உணவு வஸ்த்திர தானம் மற்றும் மகாலட்சுமி தாயாருக்கு தாமரைப் பூவால் அர்ச்சனை செய்யுங்கள், சுத்த பசுநெய் தீபம் ஏற்றுங்கள். சுமங்கலிக்கு உணவு மற்றும் தாம்பூலம் கொடுத்தால் வீட்டில் உங்களைப் பிடித்த தரித்திரம் சென்று குபேரனாக ஒரு வழி காட்டுவர்.
   
மற்றொன்று எடுத்த காரியங்களில் வெற்றி பெற பெருவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிகளும் ஒன்றாகத் தொடும்படி மெதுவாக இணையுங்கள் மற்ற இரு விரல்களான மோதிர விரலையும், சுண்டு விரலையும் உள்ளங்கையை தொடுமாறு விரல்களை மடித்து 15 நிமிடங்கள் அல்லது முடிந்தவரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த முத்திரையில் இருங்கள். இவற்றின் பெயர் குபேர முத்திரை ஆகும். இங்கும் வருடாந்திர கிரகங்களான குரு, சனி மற்றும் மாதம் ஒருமுறை மாறும் சுக்கிரன் சேர்க்கை நிகழ்கிறது. ஜோதிட ரீதியாக பெருவிரல் சுக்கிரனையும், ஆள்காட்டி விரல் குருவையும், நடுவிரல் சனியையும் குறிக்கும். இந்த மூன்று விரல்களையும் சேர்த்துப் பிடிப்பதால் சனி, குரு, சுக்கிரன் சேர்க்கை நிகழும். 

நம் கையில் உள்ள ஐந்து விரல்களுக்குள் ஒவ்வொரு விரலும் பஞ்சபூத தத்துவதோடு இயக்குகிறது. இந்த பஞ்சபூத தத்துவப்படி குபேர முத்திரையானது நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய சக்திகளை ஒருங்கிணைத்துச் செயல்படும். இந்த மூன்று மகா சக்திகள் தூண்டிவிட்டால் வேக சக்தி அதிகப்படுத்தி ஆக்ஞா சக்தி இயங்க துவங்கும். அறிவியல் ரீதியாகப் பார்த்தால் ஒருவரின் ஆக்ஞா சக்தி என்பது மூளையை இயக்கும் மூன்றாவது கண் எனப்படும் கூம்புச் சுரப்பி அல்லது பீனியல் சுரப்பி (pineal gland) மற்றும் பிட்யூற்றி சுரப்பிகள் செயல்படும். இதனால் மூளைக்குப் புத்துணர்வோடு உழைப்பிற்கான சரியான தீர்வு கிட்டும். இதனால் புது புது திட்டங்கள் செயல்படுத்தி உயர்வை நோக்கிச் செல்வீர்கள். 

நாம் என்ன நினைக்கிறோமோ அதை நினைத்து இந்த முத்திரையை செய்தால் நினைத்த காரியத்தை சித்தியாக்கும் தன்மையும், வெற்றியை நோக்கி புதிய தொழில்நுட்பமும், புத்துணர்ச்சியும் மற்றும் உங்களின் ஆற்றல்களை வெளிகொண்டுவரும். இன்னும் இந்த முத்திரை கொண்டு பல பயிற்சிகள் உண்டு; அவற்றையெல்லாம் இக்கால கட்டத்தில் நம்மால் செய்ய முடியாது. இந்த குபேர முத்திரையை எங்குவேண்டுமானாலும் அதாவது பயணம் செய்யும்பொழுது, அமர்ந்திருக்கும்பொழுது என்று எங்கெல்லாம் நேரம் கிடைக்கும்-பொழுதெல்லாம் இவற்றினை செய்யலாம். குறைந்தபட்சம் 15 -30 நிமிடங்கள் வரை செய்யலாம். ஆனால் உங்கள் கோரிக்கை மனதில் நிறுத்திக்கொள்ளவும். அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியாகக் கருதப்படுபவர் குபேரன் அவருக்குரிய முத்திரையின் மூலம் உங்களுக்கு வேண்டியதை கொஞ்சமாவது சரிசெய்து கொள்ளவும். 
 
இந்த குபேர முத்திரை செய்யும்பொழுது உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், மூளையில் உள்ள ரத்த செல்களை சீராக்கும், ஆழ்ந்த தூக்கம் ஏற்படும்,  மண்டையில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும், ஹார்மோன்ஸ் சரிப்படுத்தப்படும், நினைவுத்திறன் அதிகரிக்கும், சைனஸ், தலைவலி, மூக்கில் அடைப்பு, மூச்சுத் திணறல், சளி, சுவாசப்பாதையில் உள்ள பிரச்னைகள் சரிசெய்யப்படும், தைராய்டு நோய் குறையும், தீய பழக்கங்கள் தீய எண்ணங்கள் தடுக்கப்படும், குரலில் தெளிவும் சரள பேச்சும் பேசுவீர், நரம்புகளைப் பலப்படுத்தும், ஜீரண சக்தி அதிகமாகும். இன்னும் இந்த முத்திரையால் நோய்கள் அகலப்படும் என்று மருத்துவ ஆராய்ச்சி குறிப்பிடப்படுகிறது.

ஜோதிட சாஸ்திர ரீதியாக ஒரு சூட்சம கருத்து உள்ளது குருவின் அருளுடன்; கர்மகாரனுக்கு பயந்து சரியான முறையான தொழிலில் மற்றும் செயலில் ஈடுபட்டு; சுக்கிரன் அருளுடன் பணத்தை அதிகமாக ஈட்டி தேவையானவற்றை வைத்துக்கொண்டு மாற்றத்தை இல்லாதவருக்கு தானமாகக் கொடுத்தால் உங்களுக்கும் உங்களை சார்ந்தவருக்கும் ஏற்பட்ட கர்மாக்கள் கழிக்கப்பட்டு உங்கள் தலைமுறையை பல்லாண்டு வாழவைக்கும். இவற்றினை நம் முன்னோர்கள் மற்றும் அரசர்கள் பின்பற்றி வந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நவராத்திரி காலத்தில் சுமங்கலிக்கு வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், சரடு என்று உங்களால் முடிந்ததைத் தாம்பூலமாகக் கொடுப்பது மிகவும் சிறந்தது. இல்லத்தில் எல்லாவித சந்தோஷத்தோடு துர்க்கை, மகாலக்ஷ்மி, சரஸ்வதியும் குடிகொள்வாள். 

குருவே சரணம்!

- ஜோதிட சிரோன்மணி தேவி

Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com