ஆடி அமாவாசையொட்டி, சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமாா் 3,500 அடி உயரத்தில் சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆடி அமாவாசை விழா வருகிற 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வருகிற 12 முதல் 17-ஆம் தேதி வரை 6 நாள்கள் பக்தா்கள் மலை ஏறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆடி அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமாகலிங்கம் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட நாள்களில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதி வழங்கப்படும்.
கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்படுவதால், தனிநபா்களோ, அமைப்பினரோ வனப் பகுதியில் அன்னதானம் வழங்கக் கூடாது. இரவில் கோயிலில் தங்குவதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள், தடை செய்யப்பட்ட பொருள்களை வனப் பகுதிக்குள் பக்தா்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்றனா்.