
நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக திகழ்பவர் சனி பகவான். பொதுவாக எந்தக் கடவுளை வணங்கினால் சனிபகவான் நம்மை நெருங்குவதில்லை என்று பார்ப்போம்.
ஸ்ரீ அனுமனுக்கு அவர் விரும்பிய காலத்தில் சனி பகவான் பீடிக்க ஒரு வரம் இருந்தது. ஸ்ரீ அனுமன் ராமர் பாலம் கட்டும்போது, கற்களை முதுகில் சுமந்து கொண்டு செல்லும் நேரத்தில் ஸ்ரீ சனி பகவானை தன்னைப் பீடித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். இந்தச் சமயத்தில் தங்களைப் பீடிக்க மாட்டேன் மேலும் உங்களை வழிபடுபவர்களின் குறைகளையும் நான் தீர்த்து வைப்பேன் என்று சனி பகவான் அருளினார். இதனால் சனி பிரீதியாக ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடும் வழக்கம் உண்டாகியது.
ராமரின் தூதுவரான ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ராமாயணத்தில் முக்கிய அங்கமாகத் திகழ்பவர் அனுமன். வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டுத் தினங்கள் ஆகும்.
• அனுமனுக்கு வெண்ணெய் காப்பை சார்த்தி வழிபடுவதனால் கஷ்டங்களும் வெண்ணெய் உருகுவது போல் உருகி விடும்.
• தாம்பூலம் என்னும் வெற்றிலையை மாலையாகக் கட்டி அணிவித்து சனிக்கிழமை அனுமத் கவசம் படித்தால் சத்ரு பயம் நீங்கி நலம் பெறலாம்.
• அனுமனுக்கு திராட்சைப்பழம் பிரியமான நிவேதனப் பொருள். வெற்றி கிடைத்திட திராட்சைப் பழம் படைத்து வழிபட வேண்டும்.
• அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு, ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவித்து அனுமனின் அருள் பெறலாம்.
• அனுமனுக்கு துளசி மாலை சார்த்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம். இவரை வழிபடும் பக்தர்களை சனிபகவான் நெருங்குவதில்லையாம்.
• அனுமனை வணங்குவதால் புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெறலாம்.
• திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழன் அன்று வெற்றிலை மாலை சார்த்தி வழிபட வேண்டும்.
• துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சார்த்தி வழிபடலாம்.