காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை சமேத கச்சபேசுவரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பெருமாள் ஆமை(கச்சம்) வடிவில் சிவபெருமானை வணங்கியதும்,விநாயகர், சூரியன், பைவர், துர்க்கை முதலான தெய்வங்களும் வழிபட்ட வரலாற்றுச் சிறப்புடையது காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுவரர் திருக்கோயில்.
ஆண்டு தோறும் இக்கோயிலில் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கரோனா நோய்த்தொற்று மற்றும் கோயில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடந்து வந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டுக்கான சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்ற விழாவில் காஞ்சிபுரம் செங்குந்த மகாஜன சங்க தலைவர் எம்.சிவகுரு,கோயில் செயல் அலுவலர் எஸ்.நடராஜன்,கோயில் திருப்பணிக்குழுவின் தலைவர் எஸ்.பெருமாள்,செயலாளர் சுப்பராயன், கோயில் மேலாளர் சுரேஷ் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
கோயிலில் உள்ள தங்கக்கொடி மரத்தில் திருவிழாக் கொடியினை ஆலய பூஜகர் இஷ்டசித்தி பிரபாகர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் ஏற்றினார்கள். கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
இதனையடுத்து கச்சபேசுவரரும், சுந்தராம்பிகையும் பவளக்கால் சப்பரத்தில் ராஜ வீதிகளில் பவனி வந்தனர். மாலையில் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்தனர்.
விழாவையொட்டி தினசரி காலையிலும்,மாலையிலும் சுவாமியும்,அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜவீதிகளில் பவனி வரவுள்ளனர். ஏப்.20 ஆம் தேதி அதிகார நந்தி சேவையும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. ஏப்.22 ஆம் தேதி தேரோட்டமும், ஏப்.24 ஆம் தேதி கோயிலின் மகிமையை விளக்கும் முருக்கடி சேவைக் காட்சியும்,மறுநாள் 25 ஆம் தேதி வெள்ளித்தேரோட்டமும் நடைபெறுகிறது.
ஏப்.29 ஆம தேதி 108 சங்காபிஷேகமும், வரும் மே 3 ஆம் தேதி பூப்பல்லக்கு உற்சவத்தோடும் விழா நிறைவு பெறுகிறது.
இவ்விழா ஏற்பாடுகளை காஞ்சிபுரம் செங்குந்த மகாஜன சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கோயில் பூஜகர்கள், பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.