

ராமர் பூஜித்த சிவ தலம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது ராமேசுவரம்தான். அதற்கு நிகரான புராணப் பெருமையுடைய தலம் காவிரி வளநாட்டில், திருவாரூர் அருகிலுள்ள திருக்கண்ணபுரம் - ராமநந்தீசுவரம் ஆகும்.
ராம - லட்சுமணர்கள், சீதை, அனுமன் உள்ளிட்ட ராமபரிவாரங்கள் சேர்ந்து வழிபட்டது, ராமனுடன் நந்தியும் சிவனைப் போற்றியது எனப் பல பெருமைகள் கொண்ட இத்தலத்து ராமநந்தீசுவரரை வழிபட்டால், பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களையும் ஒரே சமயத்தில் தரிசித்த புண்ணியம் கிடைத்திடும்.
கருவறையில் கிழக்கு நோக்கி மூலவர் ராமநந்தீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இவர் ராமநாதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். தீப ஆராதனை ஒளியில் சிவலிங்கத் திருமேனியில் ஜோதி புலப்படுவது இன்றளவும் அதிசயம். சூரியன் சிவனை இங்கு பூஜித்துள்ளார் என்பதற்குச் சாட்சியாக, சூரியன் தனது கதிர்களால் மூலவரைத் தழுவி ஆராதிக்கும் பாஸ்கரபூஜை இன்றளவும் இத்தலத்தில் நிகழ்கிறது.
ராவண வதத்துக்குப் பிறகு ராமன் இத்தலத்துக்குள் நுழைந்தபோது அசுரஹத்தி தோஷம் இருப்பதாக அதிகாரநந்தியால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதைக் கண்ட அம்பிகை புன்னகைத்தபடியே தனது திருக்கரத்தினால் நந்தியைப் பிடித்துக்கொள்ள ராமர் சிவபூஜை செய்து மகிழ்ந்தார் என்கிறது தலபுராணம். இதற்குச் சாட்சி சொல்வதுபோல இத்தலத்து சோமாஸ்கந்த உற்சவ மூர்த்தத்தில் அம்பிகையின் இடக்கரத்தில் நந்தி இருப்பது வேறெங்கும் காணவியலாத அதிசயம்.
அம்பிகை சரிவார்குழலி மூலவருக்கு இடப்புறத்தில் தெற்கு நோக்கியவளாய் தனித்த சன்னதியில் நிலைத்திருக்கிறாள். தமது பக்தையின் கருவைக் காத்தருளிய அருள்சக்தி இவள். மாங்கல்ய பலத்துக்கும், குழந்தை பாக்கியத்துக்கும் வேண்டிடும் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் வழிபடுகிறார்கள். பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், சுப்பிரமணியர், லிங்கோத்பவர், துர்கை, கஜலட்சுமி, நவகிரகங்கள் உள்ளிட்ட கோஷ்ட தெய்வங்கள் சிவாலய முறைப்படி அவரவர்களுக்குரிய ஸ்தானங்களில் நிலைப்படுத்தப்பட்டுள்ளனர். சுப்பிரமணியர் அமைப்பிலும், அனுக்கிரக சக்தியிலும் திருச்செந்தூர் முருகனைப் போன்றவர் என்கிறது கோயில் புராணம்.
கார்த்திகை மாதம் சஷ்டி திதியில் ஆதீனகர்த்தர் முன்னிலையில் நிகழ்த்தப்படுகின்ற சண்முகார்ச்சனை இத்தலத்துக்கு உரிய விசேஷம். ஐப்பசி மாத கந்த சஷ்டியை முன்னிட்டு நிகழ்த்தப்படுகின்ற பத்து நாள் மகா உற்சவமும் சிறப்பானது. தூர்வாசர் வழிபட்ட க்ஷேத்திரபாலகர் திருமேனி இத்தலத்துக்குரிய மற்றொரு சிறப்பு. சிவனே தல விருட்சமான மகிழ மரமாக நிலைத்திருக்கிறார் என்பதால் அதை வலம் செய்பவருக்கு மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமைந்திடும் என்பது நம்பிக்கை.
தஞ்சை பெருவுடையார் கோயில் இத்தலத்து விமானத்தை முன்னோடியாகக் கொண்டு கட்டப்பட்டது. நன்னிலம்-நாகை வழித்தடத்தில் அமைந்துள்ளது திருக்கண்ணபுரம். அதனொரு பகுதியே இந்த ராமநந்தீசுவரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.