

திருப்பதி வேங்கடாசலபதி மீது அபார பக்தி கொண்டிருந்த ரிஷி குணசீலருக்கு, ஓர் எண்ணம் உதித்தது. "பெருமாளை தரிசிக்க திருப்பதி சென்று வருகிறோமே... ஏன் பெருமாளையே நம் ஆசிரமத்தில் எழுந்தருளச் செய்யக் கூடாது?'' - இந்த எண்ணம் அலைமோத பெருமாளை நோக்கி ஆழ்ந்த தவத்தில் ஈடுபட்டார். அவரது தவத்துக்கு இரங்கிய பெருமாள் காட்சி தந்து வேண்டும் வரம் கேட்டார். அவரிடம் தன் ஆசையைச் சொன்னார் குணசீலர். அவர் விருப்பப்படி பெருமாள் அங்கு எழுந்தருள, அந்த இடம் முனிவரின் பெயரால் குணசீலம் என்றே ஆனது.
திருச்சியில் இருந்து சேலம் செல்லும் சாலையில், முசிறிக்கு சற்று முன்னர் சுமார் 25 கி.மீ. தொலைவில், காவிரியின் மறு கரையில் உள்ளது குணசீலம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோயில். ஆலயத்தின் முகப்பில் ஒரு தீபஸ்தம்பம். அதில் அனுமன் புடைப்புச் சிற்பமாகத் திகழ்கிறார். கோயில் அழகிய கோபுரம், கொடிமரம், தீர்த்தக் குளம் உள்ளிட்ட அனைத்துடனும் திகழ்கிறது.
இங்கே ஒரு விசேஷ அம்சமாக, வைகானஸ ஆகமத்தைத் தோற்றுவித்த ஸ்ரீவிகனஸருக்கு தனி சன்னதி உள்ளது. ஆவணித் திருவோண நாளில் இவர் புறப்பாடு கண்டருள்கிறார். இங்கே பெருமாளுக்கு மட்டுமே சன்னதி உள்ளது. தாயாருக்கு இல்லை. வேறு பரிவார மூர்த்தங்களும் இல்லை. மூலவர் சாளக்ராம மாலை அணிந்து அழகாகக் காட்சி தருகிறார். திருப்பதி வேங்கடேசரைப் போன்ற உருவம். உற்ஸவர் ஸ்ரீனிவாசர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். சுவாமி சன்னதியை வலம் வரும்போது, கோஷ்ட தெய்வங்களாக நவநீத கிருஷ்ணர், நரசிம்மர், வராஹர், யக்ஞநாராயணர் ஆகியோர் உள்ளனர். சன்னதி வலம் வரும்போது உத்தராயன, தட்சிணாயன வாசல்கள் இருப்பதைக் காணலாம்.
இங்கே தினமும் மூலவருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. திருமஞ்சனம் செய்த தீர்த்தம் மற்றும் சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது.
மனக்குழப்பம் உள்ளோர், மனநோயால் பாதிக்கப்பட்டோர் நிவர்த்தி அடைய வழிபடவேண்டிய தலம் இது. இங்கே, மனநோயாளிகள் தங்கியிருக்க இலவசமாக செயல்படும் மறுவாழ்வு மையம் உள்ளது.
காலை, மாலையில் பெருமாளுக்கு நடக்கும் விசேஷ பூஜைகளின்போது இவர்களுக்கு பிரசாத தீர்த்தம் தருகின்றனர். மதியமும், இரவிலும் மனநோயாளிகளை சுவாமி சந்நிதியில் அமரச் செய்து, நடக்கும் பூஜையை தரிசிக்கச் செய்கின்றனர். திருமஞ்சன தீர்த்தத்தை பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் தெளிக்கிறார்கள்.
காலை, மாலையில் பெருமாளுக்கு நடக்கும் விசேஷ பூஜைகளின்போது இவர்களுக்கு பிரசாத தீர்த்தம் தருகின்றனர். மதியமும், இரவிலும் மனநோயாளிகளை சுவாமி சந்நிதியில் அமரச் செய்து, நடக்கும் பூஜையை தரிசிக்கச் செய்கின்றனர். திருமஞ்சன தீர்த்தத்தை பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் தெளிக்கிறார்கள்.
மேலும், கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜரின் சீடர் ச்ருத தேவன், கால் முடத்தால் பாதிக்கப்பட்ட பகுவிராஜ மன்னன் ஆகியோர் இங்கே தங்கள் குறை நீங்கப் பெற்றுள்ளனர். இவ்வாறு, பார்வைக் கோளாறு, உடல் குறைபாடு உள்ளவர்கள் தங்கள் மன நிம்மதிக்காகவும், நிவாரணம் பெறவும் பெருமாளை வேண்டிக் கொள்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.