வாசகர் கவிதை தூரத்து உறவுகள் பகுதி 3

 ஆடாவிடிலும் தன் சதை ஆடுமன்றோ எனவே வேண்டுமன்றே தூரத்து உறவுகள்
வாசகர் கவிதை தூரத்து உறவுகள் பகுதி 3

தூரத்து உறவுகள் 

குற்றம் அறியா குழந்தை
வயதில் ஒன்றாய் திரிந்தோம்...

காலயமும் கடந்து செல்ல
வயதும் கூட இளமை
பருவம் வந்தோம்.....

வருடம் சற்று வேகமாக
அதிகரித்து செல்ல.....

உனக்கென்று எனக்கென்றும்
பொறுப்புகள் அதிகரிக்க....

சற்று தூரமாக விலகி
சென்றறோம்......

அன்றாட தேவைகளை
நிறைவு செய்ய....

பண்டிகை நாங்கள் நீ இல்லாம்
நிறைவு பெறதாது மனம்.....

இது படைத்தவன் விதி
என்றார்கள்.....

உண்மையில் பணத்திற்காக
நமக்கு நாமே எழுதிய விதி.....

இன்றைய உறவுகள்....

**

உன் உயர்நிலை கண்டு
உதடுகளால் வாழ்த்தி
உள்ளத்தால் பொறாமை
தீயை மனதில் வளர்க்கும்
உன் தூரத்து உறவானாலும்
என்றும் துரத்தும் உறவுகளே!
உன் துன்பநிலை கண்டு
உள்ளம் உருகி ஆறுதல்கூறி
கண்ணுக்கு தெரியாத
கடவுளிடம் முறையிடும்
கள்ளமில்லா உள்ளங்கள்
தூரத்து உறவானாலும்
நெருங்கிய உறவுகளே!
உறவுக்கு கை கொடுத்து
உரிமைக்கு குரல் கொடுத்து
இன்னா செய்தாருக்கும்
இனியவைகள் செய்
அன்புடன் வேண்டி நிற்கும்
உன் இனிய நட்பு உறவுகள்
தூரத்து உறவானாலும்
நெருங்கிய உறவுகளே!
கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

**

தூரத்து உறவுக ளென்னை ஆரத்தி
எடுத்து சிநேகங்கூடல் செய்து ஒருங்கி
உறவாடல் கொண்டாடல் ஒருவருக்கொருவர் 
உள்ள தொடர்பு கொள்ளல்

உண்டாகும் விதம் பெண் கொடுக்கல்
பெண் ணெடுத்தல் மூலம் "தூரத்து
உறவுகள்" கிட்டத்தில் அமைந்திடுமொரு
வட்டத்துக்குள் பணிந்து ஒருங்கி விடும்

தம்மீ தொருவர் காரச் சாரமாய் மொழி
பொழிந்திட தூரத்து உறவுகள் கண்
பட்டால் படையெடுத்து பழிவாங்கும்
விட்டுக் கொடார் ஒருபோதும் விடார்

உறவுகலத்தல் புதிய உறவு உண்டாதல்
உறவு பாராட்டுதல் இனத்தாருடன் சேர்ந் திருத்தல் 
என்பதோர் கலையும் கூடவே
உறவுமுரிதல் நட்புக் கெடுதல் நடவாது

- வே. சகாய மேரி, அரியலூர் திருக்கை

**

எத்தனைக் காலம்  வாழ்ந்தோம் என்பதைவிட
அத்தனைக்  காலமும்
எத்தனை உறவுகளை சேர்த்தோம்
என்பதே நமக்கு பெருமை தரும்!
அண்ணன்,  தம்பி, மாமன், மச்சான்
என்ற பந்தங்கள் நெருங்கிய உறவு!
மற்ற அனைவரும் நம்மை
சுற்றமுடன் இனிக்கும் ஒவ்வொரு
பந்தமும் "தூரத்து உறவு!"
உறவில் தூரமென்ன பக்கமென்ன
மாறாக் கேள்வி நெஞ்சில் எழுந்ததே!
சேர்ந்து சிறக்க மட்டுமல்ல உறவு
சோர்ந்து போகும் நாளில்
சார்ந்து வந்து அணைக்கவும்
உதவும் அனைவரும் உறவே!
"தூரத்து உறவில்" உடல் வெகு
தூரமிருந்தாலும் மனம் விட்டு
பாரமின்றி பேசுவதால்
இணைந்தே வாழலாமே!
பிணைந்த உள்ளங்கள் தொலைவில்
இருந்தாலும் மறக்காமல்
பேசுவதால் "தூரத்து உறவும்"
நெருங்கிய உறவாக தொடங்குமே!

- உஷாமுத்துராமன், திருநகர்

**
திருமணப்பந்தலில் அமர்ந்திருந்த
மணமகனின் காதில் தாத்தா ஓத
விழித்த மென்பொறியியலாளன்
காக்கைகளா இவர்கள் என கேட்க
ஒழுகிய வீட்டில் கஞ்சி குடித்த வேளையில்
காணாமல் போன உறவுகளின் பட்டியலை
தாத்தா புன்சிரிப்புடன் மண்டபத்தில்
கணக்கெடுக்க உறவுகளின்
புன்னகையில் பழைய நினைவுகள்
அனைத்தும் பாசவலையால்
மறந்து கணக்கெடுப்புகளை மறந்தாரே!

- டாக்டர் பி.ஆர்.லட்சுமி

**

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாய் ஆமோ ?
  கலையெல்லாம் மாமல்லைக் கலைபோல் ஆமோ ?
சொல்லெல்லாம் தூயதமிழ்ச் சொல்லாய் ஆமோ ?
  சுடரெல்லாம் கதிரவன்போல் சுடுவ தாமோ ?
இல்லெல்லாம் தன்னிறைவாய் இருப்ப துண்டோ ?
  எல்லாரும் இருப்பவராய் இயம்ப உண்டோ ?
கல்லாமை, கள்ளாமை கழிந்த துண்டோ ?
  காலங்கள் மாறாமல் நிலைத்த துண்டோ ?

சொந்தங்கள் எல்லாமும் சொல்லற் கில்லை
  சொன்னாலும் செய்கின்ற சொந்தம் இல்லை !
சொந்தங்கள் பலநேரம் பகையாய்ப் பாயும்
  சொல்லாலும் செயலாலும் சுட்டே வீழ்த்தும் !
சொந்தங்கள் பலநம்மை சூழ்ந்த போதும்
  துளியளவவே என்றாலும் சுணங்கிப் போகும் !
சொந்தங்கள் பெயரளவில் உறவாய் நிற்கும்
  தொடராகப் பலநேரம் தொல்லை யாகும் !

தூரத்து உறவினரை தேடிச் சென்றேன்
  சொன்னேனென் நிலையினையே, கேட்ட போதே
ஆரயெனைத் தழுவிமிகக் கண்ணீர் மல்க 
  அத்தனையும் நான்தீர்ப்பேன் என்று ரைத்தார் !
சீரனையர் சொன்னார்போல் உதவி செய்தார்
  தேவையெனில் எப்போதும் வருக என்றார் !
நேரத்தில் அவர்செய்த உதவி யாலே
  நிலைத்துள்ளேன் இம்மண்ணில் மறவேன் யானே !

-'படைக்களப் பாவலர்' துரை. மூர்த்தி,ஆர்க்காடு.

**
இந்திய மண்ணில்
பிறந்தோ ரெலாம்;
ஒரு வயிற்றுப் பிள்ளையாய்
வந்து உதித்து;
தொழிலால் உருமாறி;
தொகுப்பாய் தன்னைப் பிரித்து;
வாழ்ந்த வாழ்க்கை
அடிமையிலா அன்பாய் உண்டாக்கி;
எத்தனை நூறாண்டாய் ஒழுக்கமுடன் வாழ்ந்தனர்;
முட்டாளாய் வந்த அந்நியரின்
விதியின் வினையினால்;
பிரிவுடன் எதிராய் வாழும்
இலக்கினால் சகோதர உள்ளங்கள்;
பங்காளியாய் பகைத்தனர்;
இருந்தாலும், எல்லோரும்
சுற்றி சுற்றி வலம் வரும்
தூரத்துச் சொந்தங்களே!....

- முகில் வீர உமேஷ், திருச்சுழி.

**

அன்பினில் விளைந்த, என்
அரும் மருந்தே;
என்னுள் வம்பாய் வந்து
அம்பாய் தைக்கும் தையல்
வார்த்தைகளே;
கோபத்தில எழும் உணர்வுகளால்;
பெற்றோரைக் கடித்தவுடன்;
டேய் மூடா; அவ ளாரெனத் தெரியுமா?
சின்னத் தாத்தாவின் 
இளைய மகளோடு இளைய
மச்சானின் பொண்ணடா;
அந்த நற்குடிப் பெண்ணே;
தூரமாய் இருந்து 
பக்கத்தில் வந்தவளாய்
இருக்கும் இவள் மேலேன் கோபமென
கடிந்தனர், மனதைத் துடைத்தனர்.....

- சுழிகை ப.வீரக்குமார்.

**

தூரத்து உறவுகளில் பல நிலையுண்டு - அதனை
துரத்துகின்ற வாழ்க்கை ஓட்டத்தில் அறிவதுண்டு

நெருக்கடி வரும்நிலையில் நெருங்கிய உறவுகளே
நழுவிச் செல்லும்போது - நெருங்கிய உறவுகளும்
தொடர்பற்ற நிலையில் தூரத்து உறவாகிவிடுகின்றன

வேண்டிய வாழ்க்கை வேண்டுமென்றும் - பொருள்
வேண்டுமென்றும் - வேற்றிடத்தே தங்கி உழைத்திடும்
பாச உறவுகள் - நெடுநாளாகியும் வாராதிருந்தால்
பிரிவின் நிலையிலே தூரத்து உறவாகிவிடுகின்றன

உறவுகள் கூடும் விழாக் காலங்களில்
உறவுகளின் உறவுமுறை பெயரைக் கூட
உறுதியாய் பிள்ளைகளுக்கு சொல்ல முடியாதநிலையில்
உறவுமுறை - பொதுநிலையில் தூரத்து உறவாகிவிடுகின்றன

இன்றைய காலத்தில் - இல்லத்தலைவி பகல்பொழிதிலும் -
இல்லத்தலைவன் இரவுப்பொழுதிலும் வேலைக்கு சென்றிட -
இடையில் எவ்வுறவையும் சந்தித்து பேசமுடியாதநிலையில் -
இல்லத்து உறவே தூரத்து உறவாகிவிடுகின்றது

சில நேரங்களில் - நீதியானது -தர்மத்தை
கண்டும் காணாத தூரத்து உறவாகிவிடுகின்றது
கண்காணா இடத்திலிருப்பதுமட்டும் தூரத்து உறவன்று
கண்டும்-காணாமல் செல்வதும் தூரத்து உறவாகும்;

வள்ளுவனின் கூற்றோடு இதனைமுடிக்க முற்பட்டேன்
வள்ளுவன் கூறினான் - தமிழா விழித்துக்கொள்
தூரத்து உறவுகளில் போலியும் உண்டு
என்னிலையைப்பார் - இன்று பாரினில் என்றாா்!!!

-கவிஞர். நளினி விநாயகமூர்த்தி சென்னை

**

பாட்டன் பூட்டன் காலத்து
நெருங்கிய உறவுகளை எல்லாம்
காலமும் தூரமும் ஆக்கியது இன்று
தூரத்து உறவுகளாய்!

குருத்தோலைக்கு
வேர் தூரத்து உறவு!
சந்திரனும் சூரியனும்
பூமிக்கு தூரத்து உறவு!

உறவுகளின் உரசலில் விரிசல்கள் வந்தால்
நெருங்கிய உறவும் தூரத்து உறவாகும்!
புதுப்பிக்கப்படாத உறவுகள்
தூரத்து உறவுகள்!

கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தும்
மனதுக்கு எட்டாத தூரத்தில் இருக்கும்
தூரத்து உறவுகள்!
வளர்ந்தால் நெருங்கி வரும்
தேய்ந்தால் விலகிவிடும்!

நெருங்கிய உறவுகள்
நெடுந்தூரம் போனால்
துணைக்கு வருவது
தூரத்து உறவுகளே!

தொப்புள்கொடி உறவுகள்
சிறகு முளைத்து
தொலை தூரம் பறந்து போனால்
மனம் துணைக்குத் தேடுவது

தூரத்து உறவுகளையே!

கிட்ட உறவு! முட்ட பகை!
எட்ட உறவு! ஏற்ற உறவு!

-கு.முருகேசன்

**

அலைபேசிக் கோபுரங்கள்
அடித்துவிட்ட சாவொலியில்
விலைபேசி மரணத்தின்
விருந்தான குருவிகள்;
தொலைதூரப் பயணத்தின்
துயர்குறைக்கப் போட்டதங்க
வழிச்சாலை கொன்றுவிட்ட
வளமான வயல்வெளிகள்;

குடியிருக்க மனைகட்ட
கூடிப்பாடிக் கூத்தாட
அடித்துவீழ்த்தி அழித்தொழித்த
அழகான பூங்காடு;
மடியிருந்த செல்வத்தை
மண்மீது வீசுவதுபோல்
மடல்வாழை போன்றதான
மணலிழந்த சீர்நதிகள்;

அருகிருந்து உணவூட்டி
அன்போடு உச்சிமோந்து
சிறகுக்குள் வைப்பதுபோல்
சிறுகண்ணில் பொத்திவைத்து
மறவாத கதைகள்சொல்லி
மடிதனிலே தூங்கவைத்து
இறவாதப் புகழ்கொண்ட
இறந்தகாலப் பாட்டிகள்

சுத்தமான பொன்காற்றும்
சுயமான நீருற்றும்
பித்தமான பக்திமானும்
பிறழாத நீதிமானும்
நித்தம்மானம் பெரிதென்று
நிஜம்சொன்ன மாந்தரும்
துஷ்டமான உலகில்எல்லாம்
தூரத்து உறவுகளே!

- கவிஞர் மஹாரதி

**

வேரற்றுப் போய்விட்டோம் தூரத்து உறவுகளாய்
ஊரற்றுப் போனதனால் உயிர்ப்பற்று வாடுகிறோம்
காண்பவர்கள் யாரும் கணக்கேயெடுப்பதில்லை
உடல்மாறி உருமாறி உள்ளமதும் மாறியதால்
உற்றவர்கள் கூட உற்றுப் பார்க்கின்றார்கள்.
புலம்பெயர்ந்து போனதனால் புறத்தியாராய்ப் போய் விட்டோம்.
அறம் குலைந்த தேசமினி அடியோடு வேண்டாமென்(று)
இறந்தாலும் எங்காச்சும் போயிறப் போமென்றோடி
நாடிவந்த நாட்டிலெமை நாட்டி வேரூன்றியதால்
நிலம் இழந்து போனாலும் நிம்மதியைக் காண்கின்றோம்.
என்ன நடக்குமினி? எவருக்கும் தெரியாது.
மன்னர் புதிதாயெம் மண்ணை வந்து ஆழ்வதற்கும்
அன்னை நிலத்தில் எமை அடிமைகளாய் ஆக்குதற்கும்
அறுதிப் பெரும்பான்மை ஆணை கொடுத்ததனால்
எங்களூர் வந்து எவரெல்லாம் குடியேறித்
தங்கி நிரந்தரமாய்த் தாழ்த்தியெமை வீழ்த்துவரோ?

- சித்தி கருணானந்தராஜா

**

வாழ்க்கையில்  தேவையானதும்
தாழ்விலா உயர்வான வாழ்வுக்கும்
காழ்ப்பில்லா  அனைத்து உறவுகளும்
தேவையெனில்  தூரத்து  உறவு 
மட்டும் விதிவிலக்கல்ல!
வீட்டைச் சுற்றி  வாழ்பவர்
ஏட்டை எடுத்து  அவரிடம்
சேட்டையின்றி  பழகினால்
அதுவும் நம் உறவுதான்!
தூரத்து உறவு என்றென்றும் தேவையென
சாரமிட்டு பேச கிடைத்ததுதான்.
பாராட்ட வைக்கும் அலைபேசி
நேர்முகம் கண்டும் பேசும்
தேர்வில்லா  அழைப்பு இப்பொழுது 
சோர்வின்றி  கிடைப்பதால்
தூரத்து  உறவே  ஆயினும் 
அலைபேசியில்  அருகே இருக்கும்
தலையாய உறவாகி  போனதே!
கிட்டேயிருந்தாலும்  தொலைவில் இருந்தாலும்
சட்டென வெடுக்கென்று பேசாமல்
தட்டி கொடுத்து பேசினால்
தூரத்து உறவும் மனத்தால் அருகே வந்துவிடும்!
                                                    
- பிரகதா நவநீதன், மதுரை 

**
ஊர்  ஒன்று கூடி  நம்   வீட்டு   விழா  நடத்தி 
சொந்தம்  பாராட்டியது   அன்று  ,
அடுக்கு  மாடி  குடியிருப்பில்,
சொந்தம்  கூட  அழைப்பு  மணி  அழுத்தி  நுழைய  வேண்டிய
தூரத்து  உறவானது இன்று!

இரு  மனம்  ஒன்று  சேரும்  திருமணமும் 
ஊர் விழா  போல்  நடந்தது அன்று ,
பிரிந்த  மனங்களை  தூரத்து  உறவாக்கும்
விவாகரத்துக்களும்  அதிகரித்தது இன்று!

பக்கத்து  வீட்டாரும் , ஊர்  பெரியவர்களும் ,
அத்தையும்,  மாமாவுமாக   இருந்தார்கள் அன்று ,
பணத்துக்காக  சொந்த  வீட்டையும்  நாட்டையும்  விட்டு  செல்ல,
அத்தையையும், மாமாவையும்  கைபேசியில்  கண்டு  மகிழ ,
நெருங்கிய  சொந்தம்  கூட , தூரத்து  உறவுகளானது இன்று!

ஆசையை  கட்டுக்குள்  வைத்து ,
அன்பை  வாரி  வழங்கி ,
அனைவரிடமும்  ஒற்றுமை  பாராட்டி ,
தூரத்து  உறவுகளையும் சொந்தமாக்குவோம்!!

- ப்ரியா ஸ்ரீதர்  

**
உறவுகள் பல!
மனதால் சில!
உடலால் சில!
கிட்ட உறவு!
எட்ட பகை !
காரணம்!  அது;
புரியாத உறவு தந்த வரவே!!

தூரத்து பச்சை!
கண்ணுக்கு குளிர்ச்சி!
அதுவே! பிரியாத
 உறவுகள்! என்று;
மனம் ஏற்கின்ற!
 தூரத்து உறவே!

தொலைவில் இருந்தாலும்!
அருகில் இருந்தாலும்!
உண்மையான உறவு!
 தொலைந்து போகாதது!

கேட்ட பொருளோ!
கேட்ட உதவியோ!
கிட்டாத போது!
நம் வசம் எட்டாத போது!
உறவுகள் முறிவது!
உணர்ச்சியின் முடிவது!

அந்தப்பக்கம்!
இந்தப்பக்கம்!
எந்தப்பக்கம்!
வந்தப்பக்கம்!
இப்படி! எப்பக்கம்
உறவுகள் இருந்தாலும்!
மனதால் புரியாத உறவுகள் என்றாகி!
அருகில் இருந்தாலும்!
 உறவுகள் கருகி விடும்!
பிரிவுகள் அங்கே பெருகிவிடும்!
துரத்தும் உறவுகளாகி!
தூரத்து உறவுகளாகிவிடும்! 

தூரத்தில்  உள்ள உறவுகள்!
பரிதவிக்கும்
உறவுகளின்!
துயரங்களை  முறித்தால்! எங்கும்!
உறவுகள் தொலையாது!  இங்கே!
தூரம் என்பது!
பெயர் தான் என்பது!
கலையாது!

- கவிச்சித்தர் களக்காடுவ.மாரிசுப்பிரமணியன்.

**

தானாடா விட்டாலும் தன் தசையாடும் உறவுகள்
தேனடை காக்கும் தேனீக்களின் பாசத்தோடே
மானமற்ற மதிகெட்ட சேர்க்கையால் சில நிலைமாறி
நாணமற்று நெறி கெட்டு போகும் சுற்றமுமுண்டே

சுற்றம் கடந்த சில தூரத்து உறவுகள் பாச ஆற்றில்
உற்றார் உறவினர்போலே நம்மோடு நீந்துவரே
கற்றாரே காமுறும் வண்ணம் அன்பின் ஊற்றாய்
பற்று  பாசத்தோடு பண்போடு பழகி உதவிடுவரே

அறிந்திரா நிலையிலும் ஆதரவுதரும் தூரத்து உறவு
முறிந்திருக்கும் சுற்ற உறவுகளுக்கு மாற்றாவரே
உறித்திட இயலா உண்மைகளை உணர்த்திடுவர்
பறி கொடுத்த உரிமைகளை மீட்டுத் தந்திடுவரே

முட்டல் மோதலில் உருமாறும் சுற்ற உறவுகள்
திட்டல் வடுவாய் சீர்கெட்டுப் போகும் நிலையில்
தொட்ட குறை விட்ட குறையாய் தொடர்வர் நட்பாய்
கிட்டே வந்து உதவிடும் தூரத்து உறவுகள் சிறப்பல்லவா

இருப்பதே அறியாதிருந்த மாணிக்கக் கற்கள் அவர்
உருவம் தெரிந்தபின்னே உருகி உருகி உதவிடுவர்
நெருங்கி வந்து சுற்ற உறவாய் சொந்தம் கொண்டாடி
நொறுங்கிய உறவுக் குறைகளை தீர்த்திடும் நல்மருந்தவர்.

- கவிஞர்  ராம்க்ருஷ்

**

எனக்கிருந்த சக்திக்கு எத்தனையோ இக்கட்டு நேரங்களை
ஓடவிட்டேனிந்த இனிமை நேரங்களை
எப்படி ஓட்டுவேன் என்று
புத்திக்கு எட்டவில்லையே; கத்தியை சானை பிடிப்பவன்
எல்லாம்; அறிவாளி ஆகிவிட முடியாது தனது புத்தியை சானை
பிடிப்பவன் எல்லாம்; முட்டாள் ஆகிவிட மாட்டான் ஒருபோதும்
"தூரத்து உறவுகள்" எனை தனிமை படுத்தி கைவிட்டு இராது
உயரும் போது உரக்கம் வருவதில்லை
இறங்கும் போது துக்கம்
விடுவதில்லை; இரக்கம் படும்போது
ஈந்திட வழியில்லை
தூரத்து உறவகள் ஒருங்கிணைந்து அந்த நிம்மதி தருவாரோ
உள்ளத்து உள்ளே உள்ள உண்மையை
சொல்லக் கூடாத
இடத்தில் சொல்ல; முடியாத சூழலால் சொல் வதில்லை
கண்ணீரால் புலம்பும்; அம்மொழியை கற்றவர்கள் "தூரத்து
உறவுகளே "அறிவார் கட்டி அழுவார்கள்;
ஆறுதல் கூறுவார்கள்
மாசற்ற மனதில் பொங்கி மண்டிடும்
தூசுதும்பை துடைப்பரோ
ஏங்கும் உள்ளமதை தேற்றும் தூரத்து உறவுகளால் சாத்தியமே
மனஸ்தாபம் பட்டாலும் மனம் பதறும்
மறைமுகமாய் போராடும்

- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

**

கல்யாணமான காட்சியா விழாவா வைபவமா
இழவா சாவா எல்லாத்துக்கும் வேண்டும் உறவு
மனமகிழ்வில் பங்கேற்கவும் துயரைப் பகிரவும்
மாமருந்தாய் உறவுகள் தூரத்திலிருந்தாலும்
ஓடோடி வருவதில் மகிழ்வு அமைதி கிட்டும்.
காக்காய்க் கூட்டம்போல் கூடிக் கத்திகரைவதில்
கிட்டும் ஆனந்தம்கோடி கிளைகள் கிளைவிடும்
உற்றார் மாற்றார்போல் மறையார் இன்னலில்
உற்றுக் கவனிப்பர் உரிமையால் அக்கறை அன்பால்
கிட்டத்து உறவுகள் மகன்மகள் வெளிநாட்டிலிருந்து
ஏட்டா உறவுகள் ஆயினவே இக்காலந்தனில்
தான் ஆடாவிடிலும் தன் சதை ஆடுமன்றோ
எனவே வேண்டுமன்றே தூரத்து உறவுகள்

- மீனா தேவராஜன் – சிங்கை

**

தூரத்துச் சொந்தம் தொலைதூர நிலவாய் தூரத்துப்  பச்சை அல்லவா !
துரத்தும் சொந்தம்  பிள்ளைக் கைப்பொம்மையாய் உணர்வுக் கலவை அல்லவா!
துயரங்கள் யாவும் தொலை தூரத்துச் சொந்தத்தில் பூப்பதில்லையே !
துன்பமும் இன்பமும் பகையும் உவகையும் நம் சொந்தத்தின் தூரிகையே !
இனிதான உடன்பிறப்பினரும், பிள்ளைகளும் தூரத்துச் சொந்தமாதல் அவலமே!
இதிகாசம் முதல் இன்று வரை இதுவே தொடரும் மானுட மாண்பினில் முகிழ்க்குமே!
தூரத்துத் தேசம் வாழும் மனிதரெல்லாம் அன்பு காட்டும் தூரத்துச் சொந்தமே!
துயர் தரும் தீயோர் நல்லோராகும் வரைத் தூரத்துச் சொந்தமே!
விண்ணும் உடுக்களும் தூரத்துச் சொந்தமான நல்முகநூல் வகையே!
வளியும் இயற்கையும் மாறிடுமோ மானுடர்க்கெல்லாம் தூரத்துச் சொந்தமாய் !

- இலக்கிய அறிவுமதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com