அறிமுகம் - துரை.சீனிச்சாமி ; பக்.180; ரூ.150 ; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-98; )044 - 2625 1968.
இந்தியாவில் சமயம் என்பது வித்தியாசமான பொருளில் உள்ளது. "கடவுள் இருப்பதில் நம்பிக்கை, மோட்சம், நரகம், ஆகியவற்றில் நம்பிக்கை, கோவில் வழிபாடு, சடங்குகளில் நம்பிக்கை போன்ற பண்புகளைக் கொண்டதே சமய உணர்வு' என உலக அளவில் ஒரு கருத்து உள்ளது. ஆனால் கடவுள் நம்பிக்கையற்ற பெளத்தமும், சமணமும் கூட இந்தியாவில் சமயம் என்றே கருதப்படுகின்றன. இந்நூல் இந்தியாவில் உள்ள பல்வேறு சமயங்களின் தோற்றம், அதற்கான பின்னணி, அவற்றின் வளர்ச்சிநிலைகள் பற்றி விவரிக்கிறது.
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதன் ஆதியில் இயற்கையை வழிபட்டான். அக்கினி, இந்திரன், வருணன், விஷ்ணு ஆகியவற்றை வணங்கினான். இந்தியத் தொல்மரபினரின் சமயங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. வேதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த இயற்கை வழிபாட்டுச் சமயம், பின்னர் சைவம் - வைணவம் என்ற இருமதங்களாக பரிணமிக்கின்றன.
இந்நூலில் பெளத்தம், சமணம், சைவம், வைணவம் ஆகியவற்றின் தத்துவ அடிப்படைகள் விளக்கப்படுகின்றன. சங்கரரின் மெய்யியல் கேவலாத்வைதம் என்றும், இராமாநுஜரின் மெய்யியல் விஷிஸ்டாத்வைதம் என்றும், மத்துவரின் மெய்யியல் துவைதம் என்றும் கூறப்படுகிறது என்று சொல்லும் நூலாசிரியர், ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக விளக்குகிறார்.
சைவசித்தாந்தத்தை வளர்த்தவர்கள், அவர்கள் எழுதிய நூல்கள், சைவசித்தாந்தத்தின் அடிப்படைக் கருத்துகளை எல்லாம் விளக்குகிறார்.
சீக்கியமதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாமிய மதங்களைப் பற்றிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன. தமிழகத்தின் சித்தர் மரபு, இஸ்லாமியத்தின் பிரிவாகக் கருதப்படும் சூபியிசம் மற்றும் யூத மதம் பற்றிய விளக்கங்களும் உள்ளன. இந்திய சமயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்குப் பயன்படும் நூல்.