

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பால் வேன் ஆஷைப் பதவி நீக்கம் செய்ய ஹாக்கி இந்தியாவால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளராக பால் வேன் ஆஷ் கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்திய விளையாட்டு ஆணைய முகாம், ஹிமாச்சல பிரதேசத்தின் ஷிலாரூவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் கலந்துகொள்ளாததோடு பெல்ஜியத்தில் நடந்த போட்டியில் இந்திய ஹாக்கி அணியின் செயல்பாடு குறித்த அறிக்கையையும் வேன் ஆஷ் தாக்கல் செய்யவில்லை. பெல்ஜியத்தில் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் தொடரின்போது பால் வேன் ஆஷ் - ஹாக்கி இந்தியா தலைவர் நரிந்தர் பத்ரா ஆகிய இருவருக்குமிடையே உண்டான கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுபோன்ற காரணங்களால் பால் வேன் ஆஷ் பதவியிலிருந்து நீக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பால் வேன் ஆஷின் பயிற்சியாளர் பதவி குறித்து முடிவு செய்ய முன்னாள் வீரர் ஹர்பிந்தர் சிங் தலைமையிலான ஒரு குழுவை அமைத்தது ஹாக்கி இந்தியா. இன்று அந்தக் குழுவினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்தபிறகு ஹர்பிந்தர் சிங் கூறியதாவது: பால் வேன் ஆஷ், அறிக்கையை இன்னமும் வழங்கவில்லை. இதற்குத் தகுந்தமுறையில் பதிலளிக்கவும் இல்லை. அவர் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பமாட்டார் என்று நினைக்கிறோம். இது தொடர்பான எங்கள் பரிந்துரையை ஹாக்கி இந்தியாவிடம் வழங்கி உள்ளோம். இனி இந்திய பயிற்சியாளர் தொடர்பாக ஹாக்கி இந்தியா முடிவெடுக்கும் என்றார்.
ஹாக்கி இந்தியாவின் தலைவர் நரிந்தர் பத்ரா மற்றும் செயல்திறன் இயக்குநர் ரோலண்ட் ஓல்ட்மன்ஸ் ஆகிய இருவரும் அடுத்த வாரம் சாய் அமைப்பின் இயக்குநரைச் சந்திக்கவுள்ளார்கள். அப்போது இந்தப் பிரச்னை குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.