
ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், முன்னாள் முதல் நிலை வீரரான மலேசியாவின் லீ சாங் வெய்க்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் பிரணீத் 24-22, 22-20 என்ற நேர் செட்
களில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த லீயை வீழ்த்தினார்.
ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்பில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றவரான லீயை வீழ்த்தியதன் மூலம் தனது பாட்மிண்டன் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார் பிரணீத். அடுத்த சுற்றில் டென்மார்க்கின் ஹன்ஸ் கிறிஸ்டியானை சந்திக்கிறார் பிரணீத்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-17, 21-12 என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் ராஜீவ் அவுசெப்பை தோற்கடித்தார். அடுத்த சுற்றில் ஜப்பானின் கென்டோ மொமோட்டாவை எதிர்கொள்கிறார் ஸ்ரீகாந்த்.
சமீர் வர்மா 21-10, 21-14 என்ற நேர் செட்களில் ஹாங்காங்கின் ஹூ யூனை வீழ்த்தினார். 2-ஆவது சுற்றில் சீனாவின் டியான் ஹூவெய்யை சந்திக்கிறார் சமீர்.
அதிர்ச்சியாக இருக்கிறது
லீ சாங்கிற்கு எதிரான வெற்றி குறித்துப் பேசிய பிரணீத்,
"இந்த வெற்றி எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாகஇருக்கிறது. இதனால்
மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன். இதுபோன்ற பெரிய வெற்றிக்காகத்தான்
காத்திருந்தேன். முதல் செட்டில் 15-15 என சமநிலையில் இருந்தபோது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டது' என்றார்.
காலிறுதியில் சாய்னா
மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நெவால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவர் தனது 2-ஆவது சுற்றில்
21-16, 21-9 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் புசானன் ஆங்பூம்ரங்பானை வீழ்த்தினார்.
சிந்து தோல்வி
இந்தியாவின் 2-ஆம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து 21-10, 21-14 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் போர்ட்னிப்பிடம் தோல்வி கண்டார்.