

வங்கதேசத்தில் கிரிக்கெட் போட்டியின்போது நடந்த மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
15 வயது பாபுல் சிக்தர் ரிதாய், மிர்புர் ஆதர்ஷா பள்ளியில் பயின்று வந்தார். சம்பவ தினத்தன்று, அவர் தன் நண்பர்களுடன் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடியபோது இந்தத் துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பேட்ஸ்மேன் ஒருவர் ஆட்டமிழந்தபோது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சண்டை தீவிரமாகி ஒருகட்டத்தில் பேட்ஸ்மேன், சிக்தரின் தலையை பேட்டால் அடித்ததாக அந்தப் போட்டியில் பங்கேற்ற இளைஞர்கள் காவல்துறையில் தகவல் தெரிவித்துள்ளார்கள். இதனால் சிக்தர் பலத்த காயமடைந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குச் சிகிச்சைப் பலனின்றி உயிர் பிரிந்துள்ளது.
சிக்தர் மரணமடைந்த சில நிமிடங்களில் எஸ்எஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்தன. அந்தத் தேர்வு எழுதிய சிக்தர், GPA 5 என்கிற தரவரிசையில் தேர்ச்சி அடைந்துள்ளார்.
மகன் தேர்வில் தேர்ச்சி அடைந்தும் அதைக் கொண்டாடமுடியாத நிலையில் சோகத்தில் மூழ்கியுள்ளது சிக்தரின் குடும்பம்.
தேர்வு முடிவுகள் வெளிவருகின்றன. அதனால் வெளியே போகவேண்டாம் என்றுதான் சொன்னோம். ஆனால் நண்பன் வந்து அழைத்ததால் விளையாடச் சென்றான். இப்போது இப்படி ஒரு நிலைமை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று பட்டங்கள் பெற்று, நாட்டின் தலைசிறந்த என்ஜினியராகத் திகழவேண்டும் என்று அவன் கனவுகொண்டிருந்தான் என சிக்தரின் தந்தை கூறியுள்ளார்.
சிக்தரைத் தாக்கியவன் அரசியல்வாதியின் உறவினர் என்பதால் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் மிர்புர் காவல்துறை தரப்பில் கூறும்போது, விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.