இறுதிப்போட்டியில் எங்களது திட்டங்களை சரியாக நிறைவேற்ற முடியவில்லை என 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டன் உதய் சஹாரன் தெரிவித்துள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டி நேற்று (பிப்ரவரி 11) நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கான காரணம் குறித்து இந்திய அணியின் உதய் சஹாரன் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் சில தவறான ஷாட்டுகளை விளையாடினோம். எங்களால் நீண்ட நேரம் களத்தில் நிலைத்து நிற்க முடியவில்லை. நாங்கள் இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என சிறப்பாக எங்களை தயார் செய்திருந்தோம். ஆனால், எங்களால் அந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. இந்த உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் சிறப்பானதாக அமைந்தது. இந்திய அணி வீரர்கள் உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்றார்.