ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினைப் பெறும் முதல் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் எனும் பெருமையை இளம் வேகப் பந்துவீச்சாளர் ஷமர் ஜோசப் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதால் அவருக்கு இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது. அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் ஷமர் ஜோசப். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்ய தனது அபார பந்துவீச்சினால் உதவினார்.
இந்த நிலையில், அவருக்கு ஐசிசியின் ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வென்ற பிறகு ஷமர் ஜோசப் பேசியதாவது: உலக அரங்கில் இதுபோன்ற விருதினைப் பெறுவதை மிகவும் சிறப்பானதாக உணர்கிறேன். மேற்கிந்தியத் தீவுகள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய ஒவ்வொரு தருணத்தையும் நான் மகிழ்ச்சியோடு விளையாடினேன். அதிலும் குறிப்பாக காபாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி மிகவும் சிறப்பானதாக அமைந்தது. அணியை வெற்றி பெறச் செய்வதற்கான விக்கெட்டுகளை எடுப்பது மிகவும் சிறப்பானது. உண்மையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியை எனது வாழ்நாளில் மறக்க முடியாது என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷமர் ஜோசப்பின் அபார பந்துவீச்சினால் மேற்கிந்தியத் தீவுகள் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.