2019 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ஷிகர் தவன் 117 ரன்கள் குவித்தார். கேப்டன் விராட் கோலி 82, துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா 57 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்டியா 48 ரன்கள் விளாசினார்.
பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 316 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசிய புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சாஹல் 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதனால் இந்திய அணி 36 ரன்கள் வித்திாயசத்தில் வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் முதல்முறையாக வர்ணனையாளராக களமிறங்கினார். 'சச்சின் ஓபன்ஸ் அகைன்' (மீண்டும் துவக்க வீரராக களமிறங்கிய சச்சின்) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியுடன் போட்டியின் முதல் சிறு பகுதியில் வர்ணனையாளராகவும் செயல்பட்டார். சுனில் கவாஸ்கர், சௌரவ் கங்குலி, வீரேந்திர சேவாக் ஆகியோருடன் சச்சின் இணைந்து வர்ணனை செய்த காட்சிகள் சமூகவலைதளங்கில் வைரலாகப் பரவி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.